செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தேசியக் கல்விக் கொள்கை


        ஒரு வழியாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016 இன் முன்னோட்டம் பொது மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தொழிற்நுட்பக் கல்வி, தேர்வு முறைகளில் மாற்றம், பத்தாம் வகுப்புகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் தவிர்த்து தொழிற்பாடங்கள் அறிமுகம், அங்கன்வாடி மாணவர்களை பள்ளியுடன் இணைத்து முன்பருவக்கல்வி, மீத்திறம் மாணவர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு, உதவித்தொகை, ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சி, ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை ஆசிரியர்களுக்கு கட்டாயத் தேர்வு,...என பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு, முன்னோக்கிய திட்டமிடல் இருந்தாலும் வழக்கம் போலவே ஆரம்பக்கல்வியை விடவும் உயர்கல்விக்கு அதிக முன்னுரிமை, நிதி ஒதுக்கீடு, திட்டமிடல் இருக்கத்தான் செய்கிறது.
        இயல் - 1
        ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தேசியக் கல்விக்கொள்கை - 2016 இன் முகப்புரையை வாசித்தால் இம்முகப்புரை யாருடைய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது என சொல்லிவிடுமளவிற்கு முகப்புரையின் சில உதாரணங்கள் இருக்கின்றன.
        விடுதலைப்போராட்டக்காலத்தில் கல்விக்காக போராடியவர்களின் பட்டியலில் கோகலே, ராம் மோகன்ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா, காந்தியடிகள் இவர்களுடன் முகப்புரை மெல்ல நழுவிக்கொள்வதைப் பார்க்கையில் இத்தேசியக் கல்விக்கொள்கை, யாருக்கானது, யாரால் ஆனது என்பதை ஓரளவேனும் யூகித்து பரந்துப்பட்ட, வெளிப்படையான நோக்கத்தில் வடிவமைக்கவில்லை என்பதை கணித்துவிட முடிகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்கென தனி பள்ளிகளை உருவாக்கிய ஜோதிராவ் கோவிந்தராவ் புலே, உலக கல்வித் திட்டத்தை இந்தியாவில் திட்டமிட்ட அபுல் கலாம் ஆசாத், தாகூர்  போன்ற பல தலைவர்களின் பெயர்கள் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஸ்ரீஅரவிந்தர், காந்தி, சுவாமி விவேகானந்தர் கல்வியைப் பற்றியும் எதிர்கால இலக்குப்பற்றியும் சொல்லிருப்பதை வரைவிற்குள் கொண்டு வந்திருக்கும் குழு இன்றைய தொழிற்நுட்பக் கல்வி, உலகளாவியக் கல்வி, ஆழக்கல்வி , தேர்வு நோக்கமற்ற பரந்துபட்ட கல்வி இவற்றைப்பற்றிய கருத்துருக்களைச் சொல்லிருக்கும்  இந்திய நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர்களின் கருத்துகளை சேர்த்திருக்க வேண்டும். அமிர்தியா சென், தாகூர் , உட்பட தொழிற்நுட்ப நடப்பு அறிஞர்களின் பெயர்கள் விடுபட்டது ஏனோ.......?
        கோகலே இந்திய கல்விக்காக போராடிக்கொண்டிருக்கையில் அம்பேத்கர் போன்றவர்கள் பள்ளிக் கல்வியை சம உரிமையுடன் பெற முடியவில்லை.  இந்திய சுதந்தரம் பெற்று இன்னும் இத்தகைய சமமின்மை நீடிப்பதை தேசியக் கல்விக்குழு உள்வாங்க மறுத்திருப்பது ஏன்...? இன்றைய அரசு தொடக்கப்பள்ளிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களே அதிகம் படித்து வருக்கிறார்கள்....மற்றவர்கள் அரசுப்பள்ளியை புறக்கணிக்கும் காரணத்தை இக்குழு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
இயல் - 2
        கல்வித்துறையிலுள்ள முக்கியமானச் சவால்கள்
        - தலைப்பின் கீழ் ஆசிரியர் - மாணவர் பற்றி கவலைப்படும் கல்விக்கொள்கை பெற்றோர் - மாணவர் பற்றி கவலைப்படவில்லை. மேலும் ஒரு நகரத்திற்குள் அருகாமைப்பள்ளிகளாக ஒரு தனியார் பள்ளி, ஓர் அரசு பள்ளி இரண்டும் அரை மைல் தூரத்தில் இருப்பதற்கான அவசியம் ஏன் வந்திருக்கிறது என்பதைப்பற்றி கல்வியாளர்கள் கவலைப்பட்டிருக்க வேண்டும்.
இயல் -3
        தொலைநோக்கு
        பெண்கல்விக்கு தனிக்கவனம், அமைச்சகம் வழியுறுத்தியிருக்கலாம்.
        வடக்கிழக்கு மாநிலங்களான ஏழு சகோதரிகளின் நாடு என அழைக்கப்படும் மாநிலங்களுக்கென ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் இருக்கிறது. யூனியன் பிரதேசங்கள் என்கிற உள்ளடக்கத்திற்குள் ஆந்தமான், தாத்ரா, இலட்சத் தீவுகளையும், டெல்லி, பாண்டிசேரியும் ஒன்றாக வைத்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
இயல் - 4
கொள்கை வடிவமைப்பு
        பள்ளிக்கு முந்தையக் கல்வி அவசியம் - வரவேற்கத்தக்கது.
        முன் பள்ளிக்கல்வி ஆசிரியர்களை பற்றி தகவல் இல்லாதது - ஏமாற்றம்
        அங்கன்வாடிகளை பள்ளியுடன் இணைப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த அவர்களை பள்ளி குழந்தைகளாக ஏற்றுக்கொண்டு பள்ளி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். இல்லையேல் அவர்களை தனித்து முன்னுரிமை கொடுப்பது சரியானதாக இருக்கும்.
        பெண்களுக்கென தனி பள்ளி தேவையா , இல்லையா என்பதைப்பற்றிய புரிதல் இல்லை. ஓரு பாலர் கல்வி, இருபாலர் கல்வி, பாலியல் கல்வி இவற்றில் கவனம் செலுத்தப்பட வில்லை. ஆனால் வளரிளம் பெண்களுக்கான கல்வி அவசியம் - வரவேற்கத்தக்கது.
        தொழிற்கல்வியை ஊக்குவிக்கும் இக்கல்விக்கொள்கை அரசியல் அறிவு, சட்ட அறிவு பற்றிய கல்வி அவசியம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. மாற்றுப்பள்ளி அச்சமூட்டுகிறது. இது தனியார் பள்ளிகளை வளர்த்தெடுக்க உதவும்.
        ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி - அபாயகரமானது. பள்ளி செல்லா, இடையில் நிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அது மட்டுமன்று . தாமத நுண்ணறிவு குழந்தைகளை ஊக்கப்படுத்துவதாக இருக்காது. - எட்டாம் வகுப்பு வரைக்கும் அனைவருக்கும் தேர்ச்சி அவசியம்.
        சிறுபான்மை பள்ளிகள் வந்ததன் பிறகே பள்ளி பருவ குழந்தைகளுக்கான கல்வி பரவலாக்கப்பட்டது. ஏழை, பணக்காரன், சாதி மதம் பாகுபாடற்று சீருடை முறையை கொண்டு வந்தது சிறுபான்மையினர் பள்ளிகள்தான். அவர்களுக்கு அரசு அளித்து வந்த நிதிகளை நிறுத்துவது வேறு வழியில்லாமல் சமாதானமடையலாம். ஆனால் அதற்குப் பதிலாக கேந்திரிய, வித்யாலய பள்ளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறுபான்மையினர் இடத்தில் பெரும்பான்மையினர் வருவதைப் போலிருக்கிறது.
        இன்றைய அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மட்டும் அதிகமாக படித்து வருவதன் காரணம் என்ன....மற்ற மேற்குடி குழந்தைகள் அரசு பள்ளிகளுக்குள் வராமல் இருப்பதற்கான காரணம் ஆராயப்பட்டிருக்க வேண்டும்.
        தனியார் பள்ளிக் குழந்தைகள் அரசுப்பள்ளி குழந்தைகளை விடவும் ஓபிசி குழந்தைகள் எஸ்சி, எஸ்டி குழந்தைகளை விடவும் சிறப்பாக படிக்கிறார்கள் என தேசியக் கல்விக்குழு ஏற்றுக்கொண்டமைக்கு பாராட்டலாம். அதற்கான காரணம், அவற்றைக் களைவதற்கான காரணக்காரியங்கள் போதுமானதாக இல்லை.
        தேர்வு சீர்த்திருத்தத்தில் ப்ளஸ் 1 வகுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது பெரிய அளவிலான பின்னடைவு.
        பத்தாம் வகுப்பு கணக்கு அறிவியல் படிக்காமல் தொழிற்கல்வி அறிமுகம் - ஆரோக்கியம். அதே நேரம் அதற்குப்பதிலாக தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் என்பதை நினைக்கையில் அச்சப்பட வேண்டியிருக்கிறது. குலத்தொழிலை தொழிற்பாடமாக வைத்துவிடுவார்களோ என்கிற சந்தேகம் வேறு வழியில்லாமல் எழுகிறது.
        நலிவடைந்து வரும் மொழிகளின் வரிசையில் சமஸ்கிருதம் மொழியுடன் உருது, அரபி மொழிகளையும் சேர்க்கலாமே...சமஸ்கிருதம் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்த மொழிகளுக்கும் கொடுக்கலாமே...சமஸ்கிருதம் மொழிக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம்.....? காரணம்....? பெருபான்மை இந்து என்பதாலா....?.
        பழங்குடி மக்கள், அஸ்ஸாம், பீகார், மியான்மர் பகுதி குழந்தைகளுக்கான கல்விக்காக பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு , முக்கியத்துவம் தரப்பட்டிருக்கவில்லை.
        ஆசிரமப்பள்ளிகளைத் தவிர்க்கலாம்...
        மும்மொழிக்கல்வி - வரவேற்கத் தக்கது. மூன்றாவது மொழி இந்தி என கட்டாயப்படுத்தாமல் இருந்தால்....
        நல்ல ஆசிரியர் என்பதை திறமையான ஆசிரியர் என அழைக்கப்படலாம். சிறந்த ஆசிரியர் விருது தலைமைஆசிரியர்க்கு மட்டும்தான் கொடுக்கப்பட வேண்டுமா.....? தனித்திறமை மற்றும் உழைப்பை மையமாக்கொண்டு விரிவுபடுத்தலாம்...!
        ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்கென தேர்வு நடத்துவது அவசியம். அதே நேரம் ஐந்தாம் ஆண்டின் இறுதியில் என இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு வருடத்தில் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என வரையறை வகுக்கலாம் .
        ஆசிரியர் பயிற்சி நவீனப்படுத்தப்பட வேண்டும். திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை பாடப்புத்தகம் தயாரிப்பு குழுவில் இடம் பெற செய்ய வேண்டும்.
        சமூகவியல் பாடத்திட்டத்தை பகுதியளவு என இல்லாமல் முழுமையாக மாநில அரசிடம் கொடுக்கலாம்.
        தேசிய ஆதரவுத் தொகை பத்து இலட்சம் சரி. அதை பழங்குடி, கிராம மாணவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் சமமாக பகிர்தல் கிராமப்புற, பழங்குடி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவாது.
                பழங்குடி மக்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மாநில மொழியில் பயில்வதில் சிரமம் ஏற்படுவதைப்போலவும் அவர்களுக்கு பல்மொழிக்கல்வி அவசியம் என்பதைப்போலவும் சொல்லும் வழிமுறை ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.
        தாய்மொழிக்கல்வி ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம், மூன்றாவது மொழியை மேனிலை வகுப்பில் அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்கது.
        மேனிலை பள்ளி மாணவர்கள் வரைக்குமாக சத்துணவு விரிவுப்படுத்தப்படுதல் நல்ல செயல்த்திட்டம். அதேநேரம் மையமாக்கப்பட்ட சமையல் பரிமாற்றம் என்பது ஆதிக்க , அரசியல் பின்புலம் உள்ளவர்களின் கைக்கு சத்துணவுத்திட்டம் செல்வதற்கான வழியாக இருந்துவிடக்கூடும்.
        இதைவிடவும் ஒரு முக்கியம், விவசாயக்கல்வி, விவசாயக்கல்வியை மருத்துவ, பொறியியல் கல்விக்கு நிகராக தரம் உயர்த்துதல், விவசாயத்தில் தொழிற்நுட்பம், தொழிற்நுட்ப விவசாயம், விவசாயக்கல்வியை எந்த வகுப்பிலிருந்து தொடங்குவது...போன்ற வரையறுப்புகள் தேசியக் கல்விக்கொள்கையில் பெரிய அளவில் திட்டமிட்டு சேர்க்கப்பட வேண்டும்.                                                                                                                       

3 கருத்துகள்: