செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தேசியக் கல்விக் கொள்கை


        ஒரு வழியாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016 இன் முன்னோட்டம் பொது மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தொழிற்நுட்பக் கல்வி, தேர்வு முறைகளில் மாற்றம், பத்தாம் வகுப்புகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் தவிர்த்து தொழிற்பாடங்கள் அறிமுகம், அங்கன்வாடி மாணவர்களை பள்ளியுடன் இணைத்து முன்பருவக்கல்வி, மீத்திறம் மாணவர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு, உதவித்தொகை, ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சி, ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை ஆசிரியர்களுக்கு கட்டாயத் தேர்வு,...என பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு, முன்னோக்கிய திட்டமிடல் இருந்தாலும் வழக்கம் போலவே ஆரம்பக்கல்வியை விடவும் உயர்கல்விக்கு அதிக முன்னுரிமை, நிதி ஒதுக்கீடு, திட்டமிடல் இருக்கத்தான் செய்கிறது.
        இயல் - 1
        ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தேசியக் கல்விக்கொள்கை - 2016 இன் முகப்புரையை வாசித்தால் இம்முகப்புரை யாருடைய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது என சொல்லிவிடுமளவிற்கு முகப்புரையின் சில உதாரணங்கள் இருக்கின்றன.
        விடுதலைப்போராட்டக்காலத்தில் கல்விக்காக போராடியவர்களின் பட்டியலில் கோகலே, ராம் மோகன்ராய், பண்டிட் மதன் மோகன் மாளவியா, காந்தியடிகள் இவர்களுடன் முகப்புரை மெல்ல நழுவிக்கொள்வதைப் பார்க்கையில் இத்தேசியக் கல்விக்கொள்கை, யாருக்கானது, யாரால் ஆனது என்பதை ஓரளவேனும் யூகித்து பரந்துப்பட்ட, வெளிப்படையான நோக்கத்தில் வடிவமைக்கவில்லை என்பதை கணித்துவிட முடிகிறது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்கென தனி பள்ளிகளை உருவாக்கிய ஜோதிராவ் கோவிந்தராவ் புலே, உலக கல்வித் திட்டத்தை இந்தியாவில் திட்டமிட்ட அபுல் கலாம் ஆசாத், தாகூர்  போன்ற பல தலைவர்களின் பெயர்கள் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஸ்ரீஅரவிந்தர், காந்தி, சுவாமி விவேகானந்தர் கல்வியைப் பற்றியும் எதிர்கால இலக்குப்பற்றியும் சொல்லிருப்பதை வரைவிற்குள் கொண்டு வந்திருக்கும் குழு இன்றைய தொழிற்நுட்பக் கல்வி, உலகளாவியக் கல்வி, ஆழக்கல்வி , தேர்வு நோக்கமற்ற பரந்துபட்ட கல்வி இவற்றைப்பற்றிய கருத்துருக்களைச் சொல்லிருக்கும்  இந்திய நோபல் பரிசு பெற்ற இந்திய அறிஞர்களின் கருத்துகளை சேர்த்திருக்க வேண்டும். அமிர்தியா சென், தாகூர் , உட்பட தொழிற்நுட்ப நடப்பு அறிஞர்களின் பெயர்கள் விடுபட்டது ஏனோ.......?
        கோகலே இந்திய கல்விக்காக போராடிக்கொண்டிருக்கையில் அம்பேத்கர் போன்றவர்கள் பள்ளிக் கல்வியை சம உரிமையுடன் பெற முடியவில்லை.  இந்திய சுதந்தரம் பெற்று இன்னும் இத்தகைய சமமின்மை நீடிப்பதை தேசியக் கல்விக்குழு உள்வாங்க மறுத்திருப்பது ஏன்...? இன்றைய அரசு தொடக்கப்பள்ளிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களே அதிகம் படித்து வருக்கிறார்கள்....மற்றவர்கள் அரசுப்பள்ளியை புறக்கணிக்கும் காரணத்தை இக்குழு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
இயல் - 2
        கல்வித்துறையிலுள்ள முக்கியமானச் சவால்கள்
        - தலைப்பின் கீழ் ஆசிரியர் - மாணவர் பற்றி கவலைப்படும் கல்விக்கொள்கை பெற்றோர் - மாணவர் பற்றி கவலைப்படவில்லை. மேலும் ஒரு நகரத்திற்குள் அருகாமைப்பள்ளிகளாக ஒரு தனியார் பள்ளி, ஓர் அரசு பள்ளி இரண்டும் அரை மைல் தூரத்தில் இருப்பதற்கான அவசியம் ஏன் வந்திருக்கிறது என்பதைப்பற்றி கல்வியாளர்கள் கவலைப்பட்டிருக்க வேண்டும்.
இயல் -3
        தொலைநோக்கு
        பெண்கல்விக்கு தனிக்கவனம், அமைச்சகம் வழியுறுத்தியிருக்கலாம்.
        வடக்கிழக்கு மாநிலங்களான ஏழு சகோதரிகளின் நாடு என அழைக்கப்படும் மாநிலங்களுக்கென ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் இருக்கிறது. யூனியன் பிரதேசங்கள் என்கிற உள்ளடக்கத்திற்குள் ஆந்தமான், தாத்ரா, இலட்சத் தீவுகளையும், டெல்லி, பாண்டிசேரியும் ஒன்றாக வைத்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
இயல் - 4
கொள்கை வடிவமைப்பு
        பள்ளிக்கு முந்தையக் கல்வி அவசியம் - வரவேற்கத்தக்கது.
        முன் பள்ளிக்கல்வி ஆசிரியர்களை பற்றி தகவல் இல்லாதது - ஏமாற்றம்
        அங்கன்வாடிகளை பள்ளியுடன் இணைப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த அவர்களை பள்ளி குழந்தைகளாக ஏற்றுக்கொண்டு பள்ளி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். இல்லையேல் அவர்களை தனித்து முன்னுரிமை கொடுப்பது சரியானதாக இருக்கும்.
        பெண்களுக்கென தனி பள்ளி தேவையா , இல்லையா என்பதைப்பற்றிய புரிதல் இல்லை. ஓரு பாலர் கல்வி, இருபாலர் கல்வி, பாலியல் கல்வி இவற்றில் கவனம் செலுத்தப்பட வில்லை. ஆனால் வளரிளம் பெண்களுக்கான கல்வி அவசியம் - வரவேற்கத்தக்கது.
        தொழிற்கல்வியை ஊக்குவிக்கும் இக்கல்விக்கொள்கை அரசியல் அறிவு, சட்ட அறிவு பற்றிய கல்வி அவசியம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. மாற்றுப்பள்ளி அச்சமூட்டுகிறது. இது தனியார் பள்ளிகளை வளர்த்தெடுக்க உதவும்.
        ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி - அபாயகரமானது. பள்ளி செல்லா, இடையில் நிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அது மட்டுமன்று . தாமத நுண்ணறிவு குழந்தைகளை ஊக்கப்படுத்துவதாக இருக்காது. - எட்டாம் வகுப்பு வரைக்கும் அனைவருக்கும் தேர்ச்சி அவசியம்.
        சிறுபான்மை பள்ளிகள் வந்ததன் பிறகே பள்ளி பருவ குழந்தைகளுக்கான கல்வி பரவலாக்கப்பட்டது. ஏழை, பணக்காரன், சாதி மதம் பாகுபாடற்று சீருடை முறையை கொண்டு வந்தது சிறுபான்மையினர் பள்ளிகள்தான். அவர்களுக்கு அரசு அளித்து வந்த நிதிகளை நிறுத்துவது வேறு வழியில்லாமல் சமாதானமடையலாம். ஆனால் அதற்குப் பதிலாக கேந்திரிய, வித்யாலய பள்ளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறுபான்மையினர் இடத்தில் பெரும்பான்மையினர் வருவதைப் போலிருக்கிறது.
        இன்றைய அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் மட்டும் அதிகமாக படித்து வருவதன் காரணம் என்ன....மற்ற மேற்குடி குழந்தைகள் அரசு பள்ளிகளுக்குள் வராமல் இருப்பதற்கான காரணம் ஆராயப்பட்டிருக்க வேண்டும்.
        தனியார் பள்ளிக் குழந்தைகள் அரசுப்பள்ளி குழந்தைகளை விடவும் ஓபிசி குழந்தைகள் எஸ்சி, எஸ்டி குழந்தைகளை விடவும் சிறப்பாக படிக்கிறார்கள் என தேசியக் கல்விக்குழு ஏற்றுக்கொண்டமைக்கு பாராட்டலாம். அதற்கான காரணம், அவற்றைக் களைவதற்கான காரணக்காரியங்கள் போதுமானதாக இல்லை.
        தேர்வு சீர்த்திருத்தத்தில் ப்ளஸ் 1 வகுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது பெரிய அளவிலான பின்னடைவு.
        பத்தாம் வகுப்பு கணக்கு அறிவியல் படிக்காமல் தொழிற்கல்வி அறிமுகம் - ஆரோக்கியம். அதே நேரம் அதற்குப்பதிலாக தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் என்பதை நினைக்கையில் அச்சப்பட வேண்டியிருக்கிறது. குலத்தொழிலை தொழிற்பாடமாக வைத்துவிடுவார்களோ என்கிற சந்தேகம் வேறு வழியில்லாமல் எழுகிறது.
        நலிவடைந்து வரும் மொழிகளின் வரிசையில் சமஸ்கிருதம் மொழியுடன் உருது, அரபி மொழிகளையும் சேர்க்கலாமே...சமஸ்கிருதம் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்த மொழிகளுக்கும் கொடுக்கலாமே...சமஸ்கிருதம் மொழிக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம்.....? காரணம்....? பெருபான்மை இந்து என்பதாலா....?.
        பழங்குடி மக்கள், அஸ்ஸாம், பீகார், மியான்மர் பகுதி குழந்தைகளுக்கான கல்விக்காக பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு , முக்கியத்துவம் தரப்பட்டிருக்கவில்லை.
        ஆசிரமப்பள்ளிகளைத் தவிர்க்கலாம்...
        மும்மொழிக்கல்வி - வரவேற்கத் தக்கது. மூன்றாவது மொழி இந்தி என கட்டாயப்படுத்தாமல் இருந்தால்....
        நல்ல ஆசிரியர் என்பதை திறமையான ஆசிரியர் என அழைக்கப்படலாம். சிறந்த ஆசிரியர் விருது தலைமைஆசிரியர்க்கு மட்டும்தான் கொடுக்கப்பட வேண்டுமா.....? தனித்திறமை மற்றும் உழைப்பை மையமாக்கொண்டு விரிவுபடுத்தலாம்...!
        ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்கென தேர்வு நடத்துவது அவசியம். அதே நேரம் ஐந்தாம் ஆண்டின் இறுதியில் என இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு வருடத்தில் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என வரையறை வகுக்கலாம் .
        ஆசிரியர் பயிற்சி நவீனப்படுத்தப்பட வேண்டும். திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை பாடப்புத்தகம் தயாரிப்பு குழுவில் இடம் பெற செய்ய வேண்டும்.
        சமூகவியல் பாடத்திட்டத்தை பகுதியளவு என இல்லாமல் முழுமையாக மாநில அரசிடம் கொடுக்கலாம்.
        தேசிய ஆதரவுத் தொகை பத்து இலட்சம் சரி. அதை பழங்குடி, கிராம மாணவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் சமமாக பகிர்தல் கிராமப்புற, பழங்குடி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவாது.
                பழங்குடி மக்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு மாநில மொழியில் பயில்வதில் சிரமம் ஏற்படுவதைப்போலவும் அவர்களுக்கு பல்மொழிக்கல்வி அவசியம் என்பதைப்போலவும் சொல்லும் வழிமுறை ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.
        தாய்மொழிக்கல்வி ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம், மூன்றாவது மொழியை மேனிலை வகுப்பில் அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்கது.
        மேனிலை பள்ளி மாணவர்கள் வரைக்குமாக சத்துணவு விரிவுப்படுத்தப்படுதல் நல்ல செயல்த்திட்டம். அதேநேரம் மையமாக்கப்பட்ட சமையல் பரிமாற்றம் என்பது ஆதிக்க , அரசியல் பின்புலம் உள்ளவர்களின் கைக்கு சத்துணவுத்திட்டம் செல்வதற்கான வழியாக இருந்துவிடக்கூடும்.
        இதைவிடவும் ஒரு முக்கியம், விவசாயக்கல்வி, விவசாயக்கல்வியை மருத்துவ, பொறியியல் கல்விக்கு நிகராக தரம் உயர்த்துதல், விவசாயத்தில் தொழிற்நுட்பம், தொழிற்நுட்ப விவசாயம், விவசாயக்கல்வியை எந்த வகுப்பிலிருந்து தொடங்குவது...போன்ற வரையறுப்புகள் தேசியக் கல்விக்கொள்கையில் பெரிய அளவில் திட்டமிட்டு சேர்க்கப்பட வேண்டும்.                                                                                                                       

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

யாதுமாகி நின்றேன் - கவி இளவல் தமிழ்

 யாதுமாகி நின்றேன் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு கவிதை இப்படியாக... இக்கவிதையை எழுதிய கவி இளவலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
      கோழிகள் மிதித்ததில்
      குஞ்சுகள் மடிந்தன.   
      ஆனால் இறந்தவை அனைத்துமே
      ‘கோழி’க் குஞ்சுகள்

      என்ன நண்பர்களே...புரியவில்லையா! கவிதையின் தலைப்பு ‘ பெண் சிசுக்கொலை’

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

பிரச்சாரப் பீரங்கி


  ட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தினைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கக்கூடிய கட்சியின் மாவட்டத் தலைவர் அவர்களே....
       முன்னிலை வகித்திருக்கக்கூடிய கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் அவர்களே....
     இக்கட்சிக் கூட்டத்தினை நெறிப்படுத்த கட்சியின் தலைமையிடத்திலிருந்து வந்திருக்கக்கூடிய மத்திய பொதுக்குழு உறுப்பினர் அவர்களே....
      நன்றி நல்க இருக்கிற கட்சியின் பொருளாளர் அவர்களே...
      கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களே....
    கட்சிக்காகவும் நம் தலைவருக்காகவும் தன் இன்னுயிரையும் கொடுக்க இருக்கிற கட்சித் தொண்டர்களே....அனைவருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்கிறவன் முறையில் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.
       நண்பர்களே.....
       இது அவசரக்கூட்டம். தலைவரின் உணர்ச்சிப்பூர்வமான பொதுக்கூட்ட உரைக்குப் பிறகு கூடியிருக்கிற கூட்டம். மிக முக்கியமானக் கூட்டம். நம்மை , நம் கட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டுச்செல்கிற கூட்டம்.
       நாம் நம் கட்சியை எவ்வாறு வளர்த்தெடுத்து வருகிறோம்....நம்மால் நம் கட்சி எவ்வாறு வளர்ந்து வருகிறது. கட்சியால் நாம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்று இல்லை! நாம், நம் கட்சியை வளர்த்தெடுத்த விதம், மாநில தலைமை , மத்திய தலைமை இடத்துடன் நாம் கொண்டிருக்கக்கூடிய நெருக்கம் வேறு எந்த மாவட்ட நிர்வாகிகளும் கொண்டிறாத ஒன்று என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது போதாது...! மேலும் நம்மை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக உங்களை நான் தயார்ப்படுத்தவே இந்த இடத்தில்  நின்று கொண்டிருக்கிறேன். இப்படியொரு அவசர பொதுக்குழு கூட்டத்தினைக் கூட்டியிருக்கிறேன்.
       நண்பர்களே....
       நமது மாவட்டத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு நம் கட்சியின் பலம், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருந்தது. உங்களுக்கு ஒன்றும் தெரியாததில்லை. மாவட்ட செயற்குழு கூட்டினால் தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்கள் மூவரைத் தவிர வேறு யாரும் கூட்டத்திற்கு அவ்வளவு எளிதில் வந்துவிட மாட்டார்கள். வந்தாலும் கட்சியோடு ஐக்கியமாகிவிட மாட்டார்கள். அப்படியே ஐக்கியமானாலும் கட்சி கொடுக்கும் வேலைகளை மனமுகந்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
       இதை நான், நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. உள்ளபடியே கட்சியின் நிலை அந்தளவுளவே இருந்தது. ஆனால் இன்றைக்கு நம் கட்சியின் பலம் அவ்வாறாகவா இருக்கிறது என்பதை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.
       ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் நம்மை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறோம். அவ்விரு கட்சிகளின் வெற்றித் தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்திருக்கிறோம். நம்மை பிறர் கூட்டணிக்கு அழைக்கும் அளவிற்கு தவர்க்க முடியாத கட்சியாக உயர்ந்து நிற்கிறோம். நாம் இத்தகைய பலம் பெற யார் காரணம்.....?. நமது கட்சியின் தலைவர் அவர்கள்தான். அவரால்தான் நான் கட்சியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்திருக்கிறீர்கள்.
       அதுமட்டுமா.... நடைபெற இருக்கிற உள்ளாட்சித் தேர்தலிலும், அதை அடுத்து வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் நாம் ஒவ்வொருவரும் வேட்பாளராகத் தேர்வு பெற இருக்கிறோம். வெற்றிப்பெற இருக்கிறோம். ஆளுங்கட்சியாக இருக்கிறோம். அமைச்சராக இருக்கிறோம்.
       இதை நான், நீங்கள் கைக்கொட்டி ஆராவாரத்துடன் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நம் பலம், நம் கட்சியின் பலம் இந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதைப் புரிய வைப்பதற்காகச் சொல்கிறேன். நமது கிராமத்தை , நமது தொகுதியினை, நமது மாநிலத்தை, நமது தேசத்தை ஆளும் தகுதி நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை நினைவூட்டுவதற்காச் சொல்கிறேன்.
       நண்பர்களே....
       இந்த நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நாம் தொடர்ந்து பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். உலகளாவிய கட்சிகள், சர்வதேச தலைவர்கள் நம் கட்சியையும் கட்சித் தலைவரையும் எவ்வாறு புகந்து பேசுகிறார்கள். அதே நேரம் நம் தேசத்தில் நம் கட்சியையும் , நம் கட்சித் தலைவர்களையும் எவ்வாறு இகழ்ந்து பேசுகிறார்கள் என்பதை பத்திரிக்கை செய்தியின் ஊடாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் நாமும், நம் கட்சியும்தான் காரணமா.....?
        நம் தலைவர் நேற்றைக்கு முந்தையத் தினம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உணர்ச்சி பெருக்கோடு உரையாற்றினார். அவரது உரை பல்வேறு பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. நம் தலைவரின் முகத்தில் இதற்கு முன் இப்படியொரு உணர்ச்சியைப் பார்த்திருக்க முடியாது. அத்தனைக் கோபம், அத்தனை உணர்ச்சி . அவரது உரையை , அவரது வேண்டுகோளினை என்ன விலைக்கொடுத்தேனும் நிறைவேற்றிக் கொடுத்தாக வேண்டிய நிலையில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.
       நண்பர்களே....
       நாம், நம் தலைவரின் உரையை அறியாதவர்கள் இல்லை. அவரது வேண்டுகோளினை புரிந்துக்கொள்ளாதவர்கள் இல்லை. தலைவர் என்ன எதிர்ப்பார்க்கிறார், எப்படி எதிர்ப்பார்க்கிறார்....என்ன அளவில் எதிர்ப்பார்க்கிறார்....என்பதைப்புரிந்துகொண்டு நாம் கட்சியை வளர்த்தெடுத்து வந்திருக்கிறோம். அவரைக் கொண்டாடிக் கொண்டாடியே கட்சியை பலப்படுத்தியிருக்கிறோம்.
       ஐந்து வருடத்திற்கு முன்பு தலைவர் அதுநாள் வரைக்குமில்லாமல் ஒரு அறிக்கையை விட்டிருந்தார். அவர் என்னச் சொல்லிருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கும்... ‘ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...’ என ஒரு சுற்றறிக்கை விட்டிருந்தார். ‘ இந்த வருடம் எனது பிறந்தநாளை கட்சித் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் ’ என அறிக்கை விட்டிருந்தார். நாம் என்னச் செய்தோம்.... அதுநாள் வரைக்கும் அவரது பிறந்த நாளினைக் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த நாம் அந்த வருடம் அவருடைய பிறந்த நாளினை நமது மாவட்டம் குலுங்கும் அளவிற்கு  ஜாம் ஜாம்மெனக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
       அவரது வயதினைக் குறிக்கும் விதமாக கிலோ கேக் ஆடர் கொடுத்து கட்சி அலுவலகத்தில் வைத்து ஒரு நாள் முழுமைக்கும் வெட்டி வருகிறவர்கள் , போகிறவர்களுக்கு ஊட்டிக்கொண்டிருந்தோம் இல்லையா! அதை நம்மால் மறக்க முடியுமா....? கட்சிப்பத்திரிக்கை, வெகுஜனப்பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் அந்த பிறந்தநாள் கொண்டாட்டம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. என்னை உள்ளிட்ட பலரையும் முதற்பக்கத்தில் பிரசுரத்திருந்தது. அதை நாம் இன்னும் மறக்கவில்லை. நமது கொண்டாட்டத்தைப் பார்த்த தலைவர் நம்மை கட்சித் தலைமையிடத்திற்கு அழைத்திருந்தார். மாவட்ட எல்லையைத் தாண்டி பயணம் மேற்கொள்ளாத நாம் முதன்முறையாக விமானத்தில் கட்சித் தலைமையிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரது பிறந்த நாளினை மிகப்பெரிய அளவில் கொண்டாடியத்திற்கு கிடைத்த பரிசு என்ன....? எனக்கு மாவட்ட செயலாளர் பதவி.  அண்ணனுக்கு தலைவர் பதவி. இவருக்கு பொருளாளர் பதவி.
       இந்தப் பதவிகள் நமக்கு எப்படிக் கிடைத்தது. தலைவரின் பிறந்த நாளினை மிக எழுச்சியோடும், பகட்டோடும், ஆடம்பரத்தோடும் கொண்டியதால் கிடைத்தது. என் பிறந்த நாளை கட்சித் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்கிற  அவரது வேண்டுகோள் , சுற்றறிக்கையை கண்டுக்கொள்ளாமல் அவரது மனத்திற்குள் இருந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகக் கொண்டாடியதால் நமக்கு இத்தகையப் பதவிகள் கிடைத்திருக்கிறது . இதை யாராலும் மறுக்க முடியுமா....?’
       நண்பர்களே....
       இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். கட்சித் தலைவர் நம்முடைய மாவட்டத்திற்கு வருகைத் தந்தார். மாநில மற்றும் மாவட்டப் பொருப்பாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை விட்டிருந்தார். என்ன விட்டிருந்தார். ‘ என்னை எந்த அளவிற்கு எளிமையாக வரவேற்க முடியுமோ...அந்த அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுங்கள் ’ என விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் விருப்பம் என்ன அதுவா...? தலைவரின் ஆசைகளை நாம் அறியாதவர்களா....? நாம் என்னச் செய்தோம்....? ஒரு நாள் அவசரமாக மாவட்ட செயற்குழுக்கூட்டத்தினைக் கூட்டி ஒரு முடிவு எடுத்தோம். இதே இடத்தில் நின்று கொண்டு நான் தலைவர் அனுப்பியச் சுற்றறிக்கையை வாசித்தேன். தலைவர் வருகையை எப்படியெல்லாம்  கொண்டாடலாமென உங்களிடம் கருத்துக்கேட்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்து சொல்லிருந்திருந்தீர்கள். உங்கள் கருத்துகள் அத்தனையையும் உள்வாங்கி அவர் விட்டிருந்த சுற்றறிக்கையை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவரது உள்மனம் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது வருகையை அமர்களப்படுத்தினோம்...
       மாவட்ட முழுவதும் ப்ளெக்ஸ் வைத்தோம். கேரளத்து செண்டை மேளம்  என்ன...வாண வேடிக்கை என்ன.... பறை என்ன...., கரகம் என்ன...., புரவி ஆட்டம் என்ன....காசை நாம் காசாகவாப் பார்த்தோம். தண்ணீயாக அல்லவா செலவு செய்தோம். விமான நிலையத்திலிருந்து கட்சி அலுவலகம் வரைக்கும் சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்தோம். ஆயிரம் பெண்களை இருபுறமும் நிறுத்தி ஆலாத்தி எடுக்க வைத்தோம். யானையால் மாலை அணிவித்தோம். நான் கூட ஒரு பண மாலை அணிவித்தேன். நம் தலைவர் ஒரு படி மேலே போய் ஆயிரம் ரூபாயினாலான மாலையை அணிவித்தார்.
       அவர் கேட்டுக்கொண்டது எளிமையான வரவேற்பு. நாம் செய்தது...? மாவட்டம் குலுங்கும் அளவிலானக் கொண்டாட்டம். இதனால் என்ன பயன் கிடைத்தது....? கட்சி வளர்ந்தது. தலைவர் வளர்ந்தார். நாம் வளர்ந்தோம். நமக்கு பல்வேறு ஆதாயங்கள் கிடைத்தன.
       நடந்து முடிந்த தேர்தலில் கட்சி செலவுக்கான தேர்தல் நிதி நம் கைக்கு வந்தது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்....யாருக்கு சீட் கொடுக்கலாம்...யார்க்கு எந்தத் தொகுதியைக் கொடுக்கலாம்....எங்கெங்கே...யாரையெல்லாம் வைத்து கட்சிக்கூட்டம் நடத்தலாம்...பிரச்சாரத்திற்கு யாரையெல்லாம் அழைக்கலாம்....என்கிற முடிவு எடுக்கிற வாய்ப்பு நம் கைக்கு வந்திருந்தது. இல்லையா....!
       அதுமட்டுமா....? வருகிற உட்கட்சித் தேர்தலில் மாநில பொறுப்பாளர்கள் தேர்வு பட்டியலில் நான் உட்பட பலரும் இருப்பதற்கானக் காரணம் அந்தக் கொண்டாட்டம் தானே...மற்ற மாவட்ட நிர்வாகிகள் இன்னும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம் நம் எதிர்ப்பார்பையும் மீறி வளர்ந்து உயர்ந்து நிற்கிறோம்.....
       நம் தலைவர் நாம் வளர்வதற்கு இன்னொரு வாய்ப்பினைத் தந்திருக்கிறார். நேற்றைக்கு  முந்தைய தினம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உணர்ச்சிப் பொங்க உரையாற்றியிருக்கிறார். கோபம் கொப்பளிக்க, கண்களில் நெருப்புத் தெறிக்க, நாசி விடைக்க வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். அவரது பேச்சில் கெஞ்சல் இருந்ததைக் கவனித்திருப்பீர்கள். அவரது பேச்சு வழக்கமானப் பேச்சாக இருந்திருக்க வில்லை. தேசத்தின் நலனை விடவும் கட்சியின் நலன் அதிகமிருந்தது.
       தலைவர் விடும் ஒவ்வொரு அறிக்கையையும் உள்வாங்கிக்கொண்டு வழக்கம் போல நாம் எப்படி அவரது ஆசையை நிறைவேற்றிக் கொடுப்போமோ அதைப்போலவே இந்த வேண்டுகோளையும் நாம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அவரது ஆசையை நாம் மெய்யாக வேண்டும்.
       நண்பர்களே...
       நான் பேசி முடித்ததன் பிறக கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் ஒவ்வொருவராக எழுந்து எப்படியெல்லாம் தலைவரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்பதை அவரவர் கோணத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். யாரும், யாருக்காகவும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை.        கருத்து தெரிவிக்க இயலாது என்றோ, முடியாது என்றோ தட்டிக்கழிக்க வேண்டியதில்லை. அது நமக்கும் நாம் சார்ந்திருக்க கட்சிக்கும் உகந்ததாக இருக்காது. நமக்கும் நம் வளர்ச்சிக்கும் அது உதவாது
       நமக்கு நம் தேசம் முக்கியம். அதை விட நம் கட்சி முக்கியம். கட்சியை விடவும் நமக்கு நம் பதவி முக்கியம். இவை எல்லாவரையும் விடவும் நமக்கு நாம் முக்கியம். நமது வரலாறு முக்கியம்....
       தலைவர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் என்னப் பேசினார் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்...நீங்கள் பத்திரிக்கைகளில் படித்ததுதான்....தொலைக்காட்சிகளில் பார்த்ததுதான்.....அவர் கட்சித் தொண்டர்களைப் பார்த்துக்கேட்டுக்கொண்டார். கட்சி நிர்வாகிகளை, தேச நலவிரும்பிகளை, அபிமானிகளைப் பார்த்துக்கேட்டுக்கொண்டார். ஒரு முறை அல்ல. ஒரு முறைக்கு மூன்று முறை. கும்பிட்டு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.‘ தலித்களைக் கொல்லாதீர்கள்...கொல்லாதீர்கள்... கொல்லாதீர்கள்.....’
       தலைவரது வேண்டுகோளினை நிறைவேற்ற கட்சி அபிமானிகளாகிய நீங்கள் உங்களால் முடிந்த கருத்துகளை நல்க வேண்டுமாய் கூறி வாய்ப்பிற்கு நன்றி கூறி இடம் அமர்கிறேன். நன்றி வணக்கம்!

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

சாதனை

இன்றைய( 11.09.2016) தீக்கதிர் - வண்ணக்கதிரில் ஒரு கவிதை. சுஜித் எழுதியது. அக்கவிதையை வாசிக்கையில்  என் மகன் என்னிடம் சொல்வதைப் போலிருந்தது.
                சாதனை
படுக்கையில் பாத்ரூம்
போறதெல்லாம் நிறுத்திட்டேன்
கட்டைவிரல் சப்புறதையும்
சத்தியமா குறைச்சுட்டேன்ல
ஸ்ட்ரா வச்ச டம்ளரையும்
தம்பிக்கிட்ட கொடுத்துட்டேன்ல
நாலு சக்கர சைக்கிளையும்
ரெண்டாக மாத்திட்டேன்ல
அப்பா ஸ்கூட்டிலேயே நான்
முன்னாடி உக்காருரதில்ல
தெரு கிரிக்கெட்ல கூட
இப்ப நான் உப்புக்கு சப்பாணி இல்ல
பேனா ரப்பரெல்லாம்
நானிப்ப தொலைக்கிறதில்ல
பக்கத்து வீட்டு பாபுவ விட
இப்ப நான் ஹெயிட்டு தெரியும்ல
இந்த தடவையாவது

எனக்கு முழு டிக்கெட் எடுமா!

சனி, 10 செப்டம்பர், 2016

விஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங்

விஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங் - நூல் விமர்சனம்
       என்.சி.பி.எச் வெளியீடு. நான்காம் பதிப்பு. விலை ரூபாய் எழுபது.
       ‘விஞ்ஞானம் - நேற்று - இன்று - நாளை ’ பதினேழு கட்டுரைகள் உள்ளடக்கிய தொகுப்பாக வந்திருக்கிறது. அறிவியல், வரலாறு இரண்டையும் கலந்து தொகுக்கப்பட்ட தொகுப்பினை வாசிக்க நம்மை விண்வெளிக்குள் அழைத்துச்சென்று பால்வெளித் திரளுக்குள் ஒரு புள்ளியாக கரைத்துவிடுகிறது.
       சூரிய குடும்பத்திற்கு அருகாமையில் உள்ள கேலக்ஸி ஆண்ட்ராமீடா என்கிற பால்வெளித்திரள், நம்முடைய பால்வெளி ஸ்பைரல் கேலக்ஸ், சந்திரனிலிருந்து பார்த்தால் பூமி எப்படித் தெரியும், மனிதனின் மூதாதையர் குரங்கு தானா...? மீனிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறதா...? காற்றிலுள்ள ஹைட்ரஜனைப்பிரித்தெடுத்து எரிபொருள் தயாரிக்க முடியுமா...? ஒரு வேளை தயாரித்தால் ஒரு டீ ஸ்பூன் அளவிலான பெட்ரோலுக்கு ஈடாக எவ்வளவு ஹைட்ரஜன் தேவைப்படும், குரோமோசோம்களின் உருவாக்கம், ஏப் வகை குரங்கிற்கும் மனதினுக்கும் உள்ள தொடர்பு பல அறிவியல் புதிர்களை விடுத்து அவிழ்த்திருக்கிறது.
       ஒரு பக்கம் சகாரா பாலைவனம், இன்னொரு துருவத்தில் அண்ட்ராட்டிகா பனி இவை இரண்டும் மொத்தப்பூமியின் வெப்ப சமநிலையை ஈடு செய்கிறது. அயல் கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வேற்றுக்கிரவாசிகள் வந்துப்போனதாகச் சொல்கிறார்களே உண்மைதானா...? அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா...? ஒரு செயற்கைக்கோளினைக் கொண்டு இரவை பகலாக்க முடியுமா....கடல்நீரை குடிநீராக்கினால் கடல் மட்டும் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியுமா...? என நீளும் கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு புதிர்கள் முடிந்தும் அவிழ்ந்தும் கிடக்கின்றன.
       இக்கட்டுரையின் தொகுப்பை மாணவர்களுக்குரிய நூலாகக்  கொண்டு வந்திருக்கலாம். மூளை நரம்பு மண்டலம் நியூரான் செல்களால் ஆனது என்பதை நியூட்ரான் செல் என உள்ளதை திருத்தியிருக்கலாம். அடுத்தப் பதிப்பில் இத்தவறு திருத்தப்படும் என நம்புகிறேன்.
       தமிழ் உத்தம் சிங்கின் பரந்த வாசிப்பும், எதையும் அறிவியலாகப் பார்க்கும்  பார்வையும், இக்கட்டுரைகளில் கொட்டிக்கிடக்கிறது. உண்மைகளால் ஆன ஒரு திறந்த பெட்டகம் ‘ விஞ்ஞானம் நேற்று  - இன்று - நாளை’. அனைவரும் வாசித்தாக வேண்டிய ஓர் அறிவியல் தொகுப்பு. தமிழ் உத்தம் சிங் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
        



வியாழன், 8 செப்டம்பர், 2016

நா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து

காக்கை இதழ் - செப்டம்பர் - நா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து கட்டுரை வாசித்தேன்.
       இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து இதுநாள் வரை நான் வாசித்த கட்டுரைகளில் ஆகச்சிறந்த கட்டுரையாக அக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. அக்கட்டுரை சொல்ல வந்திருப்பது ஆசிரியர் தினம் நல்வாழ்த்துகள். ஆனால் அத்தனை இலகுவாக, மாணவர்களின் மெட்ரிக், நீட்டல், நிறுத்தல் அளவைகளுடன், சவ்வூடு பரவலாக ஆசிரியர்களின் மனதிற்குள் நுழைந்து வேதி வினை நிகழ்த்திருக்கிறது. இத்தகைய நல்லக்கட்டுரை ஆசிரியர்களைத் தாண்டி எத்தனைப்பேருக்கு புரியமெனத் தெரியவில்லை. என் கவலை அதுவல்ல. நம் ஆசிரியர்களில் எத்தனைப்பேர் இதை வாசிக்கப் போகிறார்கள்....?
       கட்டுரையை கீழ்க்காணும் வாசகங்கள் அழகூட்டுகிறது.
       பொருட்களைக் கையாளும்போது உணர்வு ஒரு துருவத்தில்தான் செயல்படுகிறது. மனிதர்களைக் கையாளும் போது இருபுறமும் உணர்வு ஏற்படுகிறது.
       ஆசிரியர்களாகிய நீங்கள் தவறு செய்தால் பதின்பருவ நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும். நீங்கள் காமம், வெகுளி, மயக்கம் கொள்வதால் உங்களுக்கு போதித்த ஆசிரியச் சான்றோர்களின் நாமம் கெடும்.
       நடுநிலைக் கரைசலாக இருக்க வேண்டிய உங்களின் வேதிச் சமநிலை குலைந்ததால் ஏற்பட்ட இடமாறு தோற்றப்பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
       நீங்கள் குடல்வாலோ, பித்தப்பையோ அல்ல. மனித சாரத்தின் நாடி நரம்புகள்.
       குழந்தைகள் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவைகள் அல்ல. அவர்கள் படிப்பில் வேண்டுமானால் பின்தங்கியிருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவரின் அசைவையும் துல்லியமாகக் கணிக்கும் இயற்பியல் தாரசுகள்.
       உங்கள் அறிவுக்கும் வயதுக்கும் எள்ளளவும் இணையானவர் இல்லை குழந்தைகள். அவர்களிடம் தோற்றுப்போவதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது.
       தகு பின்னம், தகா பின்னங்களாக வந்து சேரும் அவர்களை முழுக்களாக மாற்றுவதே ஆசிரிய மகிமை.
       உங்கள் அட்ச ரேகை, தீர்க்க ரேகைத் துருவங்களின் நிலப்படம்தான் குழந்தைகளின் ஆயுள் ரேகையைத் தீர்மானிக்கிறது
       இப்படியாக நவீன நன்னெறியுடன் நீளும் கட்டுரை இவ்வாறு முடிகிறது...‘ எவ்வழி  நல்லவர் எம் ஆசிரியர், அவ்வழி நல்லை வாழிய நிலனே....’ இதைவிடவும் சிறப்புற ஆசிரியரை வாயுறை வாழ்த்திட இன்னொருவர் வேண்டுமா என்ன...!

       எழுத்தாளர் நா. அருள்முருகன் அவர்களையும், இக்கட்டுரையை பிரசுரம் செய்திருக்கும் காக்கை இதழையும் இப்பொழுதே நன்றிப்பாராட்டுவதை அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே....

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

நூல் விமர்சனம்

ஏன் பெண்ணென்று பிறந்தாய்....! கிருஷ்ணன் அவர்களின் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். முழுக்க முழுக்க காதல் கவிதைகளின் தொகுப்பு அது. தொகுப்பில் பழநிபாரதியின் அணிந்துரை மிகச்சிறப்பு. அவர் அணிந்துரையை இவ்வாறு முடித்திருக்கிறார்.
கடவுளால் படைக்கப்பட்ட பெண்....
காதலால் படைக்கப்பட்ட பெண்....
இருவரை விடவும் அழகாக இருக்கிறாள்
இங்கே கவிதையால் படைக்கப்பட்ட பெண்!
         தொகுப்பின் காதல் கவிதைக்குள் வருகிறேன்..! முதல் கவிதை காதலிக்காதவர்களையும் காதல் மறந்து போனவர்களையும் மீண்டும் காதலிக்க வைத்துவிடுகிறது.
         தன்னைக் கடந்து செல்லும்
         பெண்களில் ஒருத்தியைக்
         காதலிக்க வேண்டுமென்ற எண்ணம்
         ஆண்களுக்கு இருப்பதென்னவோ
         இயல்புதான்!
ஆனால் நீ கடந்து செல்லும் போதெல்லாம்
உன்னைக் காதலிக்க வேண்டும்
என்ற எண்ணம் ஆண்களையும் தாண்டி
காதலுக்கும் வந்துவிடுகிறது!!

         இத்தொகுப்பை 104 பக்கம் திகட்டத்திகட்ட காதலால் நிரப்பியிருக்கிறார். ஒரு கவிதை செம்புலப்பெயல் நீரை நினைவூட்டுகிறது. அக்கவிதை இதுதான்..
         நானும் நீயும் சந்திக்கும்போதெல்லாம்
         பேசிக்கொண்டிருப்பது என்னவோ
         நீயும் நீயும் தான்!.
.                - ஒரு பொறியாளர் மாணவனால் இப்படியும் எழுத முடிகிறதே....கவிஞர் கிருஷ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்...


வெள்ளி, 2 செப்டம்பர், 2016

மச்சக்குட்டி

                           
  ‘அம்ம...செவிட்டி குட்டி ஈனப்போகுது....’
‘படக்..படக்’கென காவ்யாவின் கண்கள் அடித்துக்கொண்டன. ‘அய்..’ யென  ஒரு சிரிப்பு சிரித்துகொண்டாள். ‘மாக்..’ கென ஒரு குதி குதித்துகொண்டாள். தவளை தாவித்தண்ணீருக்குள் குதிப்பதைப்போன்ற  தடாகக்குதிப்பு அது.
அவள் குதித்தக்குதியில் பாவாடை அவிழ்ந்து நழுவிக்கொண்டு சென்றது. லாவகமாக அதை ஒரு கையால் பிடித்துகொண்டாள். மறுகையால் தொடையை அடித்துகொண்டாள். பந்து குதிப்பதைப்போல ஒரே இடத்தில் நின்றுகொண்டு குதித்தாள். அவளது குதியில் உருப்பட்டிகள் நாலாபுறமும் தெறித்து வெறித்து ஓடின ‘ கொர்...கொர்...’ என பெருமூச்சொரிந்து உறுமின.  
 ‘ அம்ம.....’ பார்வைக்கயிறு கொண்டு அம்மாவை இழுத்தாள். அவளது அழைப்பில் அத்தனை கெஞ்சல், பாசம், பிசிபிசிப்பு இருந்தது.   
       அவள் வீட்டில் எத்தனையோ பன்றிகளும், குட்டிகளும், கிடாக்களும் இருந்தாலும் அவளுக்குப்பிடித்தது செவிட்டிதான்.        காவ்யாவிற்கு உதவித்தொகையாக பள்ளிக்கூடத்தில் ‘ஐநூறு’ ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகையில் வாங்கியக் குட்டி இது. அவளின் நான்கு கால் சொத்து. நடமாடும் நிஜப்பிம்பம். நினைவில், கனவில் வாலை ஆட்டுவதும், தலையைச் சிலுப்புவதுமான உயிர் பொம்மை. காதுக்கேளாத குட்டி என்பதால் அதற்கு இப்படியொரு பெயர் ‘செவிட்டி’. யானையைப்போல கொழு, கொழுப்பு. மச்சங்களை வழித்து உருட்டித் திரட்டி கண் , காது, நாசி வைத்த அழகான கறுப்புப்பிண்டம்.
       ‘ அம்ம....சுருக்கா வாம்மா......’ அம்மாவை அவள் ‘வெடுக்’கென அழைத்தாள். பார்வையை வாசலின் ஊடே வீட்டிற்குள் நுழைத்தாள். அம்மாவிடமிருந்து ஓர் அரவமும் வரவில்லை.
       காவ்யா கீழேக் கிடந்த ஒரு ரொட்டித்துண்டை எடுத்துகொண்டு செவிட்டியிடம் ஓடினாள். இத்தனை நாள் வாலாட்டி பெருமூச்சொரிந்த செவிட்டி அவளைக்கண்டு சீறியது. அருகில் வந்தால் கடித்துக்குதறிவிடுவேன் என்பதைப்போல பற்களைக்காட்டி அகோர முகத்தைக்காட்டியது. ‘இச்’ என இருந்தது அவளுக்கு. அழுதுவிடணும் போலிருந்தது.
       ‘ நான் வளர்த்த செவிட்டி இது.  என்னையும் இது கடிக்குமா....? தலையால் முட்டுமா....?’ தொண்டைக்கும் நாசிக்குமிடையே ஏமாற்றம் திண்மமாக உறைந்து உருண்டது.
       ‘ அம்ம...செவிட்டி என்ன முட்ட வருதும்மா....’
       குடிசைக்குளிலிருந்து வெளியே ஓடி வந்தாள் போதும்பொண்ணு. நெற்றியில் விழுந்துக்கிடந்த தலைமுடிகளை  விலக்கி மகளைப் பார்த்தாள்.
       ‘ அம்ம....செவிட்டி குட்டி ஈனப்போகுதும்மா....’ இதை அவள் சொல்கையில் மயிலிறகு குட்டிப்போடுவதைப்போன்ற மகிழ்ச்சி பெருக்கு அப்பொழுது அவளுக்கு.
       ‘என்னடி சொல்றே....அதற்குளையுமா....குட்டி ஈனப்போகுது.....தலைச்சாங்குட்டியாச்சே.... எத்தனக்குட்டிக ஈனப்போகுதெனத் தெரியலையேடி......’ பற்களால் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு, அது அனுபவிக்கப்போகும் வலியின் ரணத்தை முகத்தில் ஏந்தியவாறு போதும்பொண்ணு செவிட்டியை நோக்கி ஓடிவந்தாள். கோழியின் பரபரப்பு அவளது பார்வையில் இருந்தது. அவளைச்சுற்றிலும் பன்றிகள் கூட்டமாக நிறைந்து நின்றன. ‘கொர்....கொர்.....’ என்றன.
       போதும்பொண்ணு நாலாபுறமும் துலாவி ஒரு குச்சியை எடுத்தாள். பன்றிக்கூட்டத்தை அலங்கப்புலங்க  அடித்து விரட்டினாள். பன்றிகள் இல்லாத வாசலில் பன்றி விட்டைகளாக இருந்தன. நெருப்பை மிதிப்பதைப்போல கால்களை மெல்ல எடுத்துவைத்து படலுக்குள் ஓடிவந்தாள். சேலையை முழங்காலுக்கு  மேலாகத் தூக்கிச்சொறுகிக்கொண்டாள்.
                செவிட்டி  பின்னங்கால்களை சம்மனமிட்டு , முன்னங்கால்களை உட்புறமாக மடக்கி வயிற்றிற்கு மெத்தைப்போல முட்டுக் கொடுத்து படுத்திருந்தது. போதும்பொண்ணைக் கண்டதும் கொர், கொர்..” என்றது.       போதும்பொண்ணு செவிட்டியின் அருகினில் சென்றாள். செவிட்டி தன் கோர முகத்தை விகாரமாகக் காட்டியது. அதன் தலையைத் தட்டிக்கொடுத்தாள். வயிற்றில் ‘ கிச்சுக்கீச்சு’ மூட்டினாள். அதன் வாலைத்தூக்கி   அரையைப் ( குறி) பார்த்தாள்அரை  குளிர்ச்சியாகவும், குட்டியை ஈன்று எடுக்குமளவிற்கு விலகியும் போயிருந்தது
                “ காவ்யா...வெளக்கெண்ணெய எடுத்துக்கிட்டு வா
                அவள் துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடினாள்போதும்பொண்ணு  செவிட்டியின்   வயிற்றை  மெல்ல நீவிக்கொடுத்தாள். தலையையும் கழுத்தையும் தடவிக்கொடுத்தாள். “ உச்கொட்டிக்கொண்டாள். செவிட்டியின் தொடையைத் தட்டி  உசுப்பி எழுப்பினாள்.
             “ கொர், கொர்...” என்றது செவிட்டி .
                கையில் விளக்கெண்ணையை  தடவிக்கொண்டாள்.    அரைக்குள் ஆள்காட்டி விரல்களை நுழைத்தாள்.  வட்டமாக விரித்துக்கொடுத்தாள்.  நின்றுகொண்டிருந்த செவிட்டி படுத்துகொண்டது.
                “ காவ்யா........”
                “ அம்ம...
                “  ஓடிபோய்  கஞ்சியை கொஞ்சம் ஊத்திக்கிட்டு வா
                அவள்  ஓடினாள்நேற்றைய தினம் அன்னபூரணி ஓட்டலிலிருந்து கொண்டுவந்திருந்த இட்டலிக்கஞ்சியை ஒரு குடத்தில் முகர்ந்து வந்தாள்.
                “ என்ன செய்யணும்மா  ?”
                “  கஞ்சிக்குள்ள  இட்லி துண்டுக கெடக்கானு பாரு
             குடத்திற்குள் உற்றுப்பார்த்தாள்கஞ்சியிலிருந்து   புளித்துப்போன  வாசனை கிளம்பியதுஅவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.   கெடக்கும்மா
             “ அள்ளி வாய்க்கிட்ட வை
                காவ்யா தொட்டிக்குள் இடது கையை அலாவி ஊறிப்புளித்துப்போயிருந்த இட்லியை அள்ளி செவிட்டி வாயிடத்தில் வைத்தாள். படுத்திருந்த செவிட்டி மெல்ல எழுந்தது.  
                போதும்பொண்ணு செவிட்டியின் பின்னங்கால்களை விலக்கி வைத்தாள். அடி வயிற்றை எம்பிக்கொடுத்தாள்.                 ஒரு குட்டியின் தலை வெளியே எட்டிப்பார்த்தது. அதைப்பார்த்ததும் காவ்யாவின் முகம் சட்டென மலர்ந்தது. பிறை அளவிற்கு சிரித்தாள். ‘ மாக்’கெனக் குதித்தாள். கண்களை மூடி செவிட்டி அனுபவிக்கும் வலியை  உள்ளுக்குள் ஏந்தினாள்.
       ‘வலியை பொறுத்துக்கடி கண்ணு. இன்னையிலிருந்து மூனு நாளைக்கு நீ மேய போக வேணாம்.   பட்டிக்குள்ளேயே கிடநான் ஒனக்கு ஓட்டலுக்கு போயி இல சோத்துகள அள்ளிக்கிட்டு வந்து தாறேன். ம்......’ சொல்லிக்கொண்டாள். அவளுடைய உதடுகள் ‘மெல்ல...மெல்ல....’ என உச்சரித்தப்படி இருந்தன.
                 முதல் குட்டி  ‘பொத்தென தரையில்  விழுந்தது.
                ‘ அய்....’ அவளுடைய முகம் பட்டாசு போல சிரித்தது.
        அடுத்தடுத்து மூன்று குட்டிகள் விழுந்தன. காவ்யாவின் முகம் பூரித்தது. மகிழ்ச்சியின் பெருக்கில் பொங்கியது.
       செவிட்டியின் வாலிடத்தில் நஞ்சுக்கொடி தொங்கியது. குட்டிகள் கிடந்த பக்கமாகத் தாய்ப்பன்றி  திரும்பியது.  குட்டியை நுகர்ந்து பார்த்தது.     ‘ அம்ம...அம்ம... குட்டிக காதில ஊதும்மா....’
       போதும்பொண்ணு சிரித்தாள். மகளின் மூக்கு நுனியை அள்ளிக் கொஞ்சினாள். குட்டிகளின் காதுகளில் ஊதினாள்.  ‘ நீ வளர்ந்து காவ்யாவிற்கு நிறைய காசுகளக் கொடுக்கணும்...’ குட்டிகளின் காதிற்குள் கிசு,கிசுத்தாள். வாயை இரண்டு விரல்களால் அழுத்தி ‘ ஆ...’ என அகற்றி வாயிற்குள் விரல்களை விட்டு சளியை வழித்து அள்ளினாள்.  பாதக்கொழம்புகளில் சுண்டினாள்.    
                ‘ அம்ம... குட்டிக காதில நல்லா ஊதும்மா...தாயப்போல குட்டியும் செவிட்டியாகிடப்போகுது......’
       ‘ நல்ல ஊதிட்டேன்... வேணுமெனா நீ  ஒருக்கா ஊதிக்கோ.....’
       காவ்யா ‘ அய்..’ யெனச் சிரித்தாள். முழங்காலிட்டு குனிந்து குட்டிகளின் காதுகளில் ‘ பொஸ்...பொஸ்.....’ என ஊதினாள்.
        “எத்தன பெட்ட....? எத்தன கிடாம்மா.....?’
       அவளது கண்களில் ஆர்வமும்,ஆவலும் மின்னின. எதிர்ப்பார்ப்பு குவிந்தன.
                போதும்பொண்ணு குட்டிகளின் வாலினைத் தூக்கிப்பார்த்தாள். ‘ மூனு கிடா.   ரெண்டு பெட்ட’
                 அப்ப...ஒரு கிடாக்குட்டியை கோயிலுக்கு எசவு விடுவோம்மா
                போதும்பொண்ணு சிரித்தாள். மகளை மார்போடு அணைத்தாள்.  மகளின் வேண்டலுக்கு  சம்மதம் தெரிவித்தாள்.   காவ்யாவின்   முகத்தில் சந்தோசம் பீறிட்டது. எம்பிக்குதித்தாள். கலகலவெனச் சிரித்தாள். அவள் சிரிப்பில் முப்பத்திரண்டு பற்களும்  சிரித்தன.
                                                              & & &
       காவ்யா வீட்டு வாசலில் இரண்டு வியாபாரிகள் நின்றுகொண்டிருந்தார்கள்.
       அவள் பட்டிக்குளிலிருந்த அத்தனை உருப்படிகளும் மொத்தமாக விலை பேசப்பட்டிருந்தன.  நெட்டையும் குட்டையுமாக மொத்தம் இருபத்திரெண்டு உருப்படிகள். மூன்று தாய்கள். ஐந்து கிடாக்கள். பத்து பெட்டைகள். நான்கு குட்டிகள்....அவசரம் அவசரமாக பேசி முடித்திருந்த விலையாக அவ்விலை இருந்தது. செவிட்டியும், அது ஈன்றெடுத்த குட்டிகளும் வயிற்றிலடிக்கும் படியான விலைக்கு விலைபோயிருந்தன.
       காவ்யா முருங்கைப்போத்தைப்போல மனமுறிந்து போயிருந்தாள். அவளுடைய செல்லம் செவிட்டியும் அதன் குட்டிகளும் கை நழுவிப்போவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்ணீர் கம்பலையுடன் பரிதாபத்துடன் நின்றாள். வாசலுக்கும் திண்ணைக்குமாக கால் கைகளை உதைத்துகொண்டு உருண்டாள்.
       ‘ஏ செவிட்டிய விற்காத....ஏ செவிட்டிய விற்காத.....’ அவளுடைய உதடுகள் கெஞ்சியவண்ணமிருந்தன. அவளது அழுகை, கெஞ்சல் அவளது அப்பா சங்கிலிமுத்து கண்களில் ஈரத்தைத் துளிர்க்க வைத்திருந்தது. போதும்பொண்ணு முந்தாணையைச் சுருட்டி வாயிற்குள் திணித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.
       காவ்யா தலை முழுவதும் மண். கன்னங்களில் தாரையாக ஒழுகிய கண்ணீர் பிசுபிசுத்துப்போயிருந்தது. ‘ எனக்கு ஏ செவிட்டி வேணும்....’
       மகளை வாறி அள்ளினாள் போதும்பொண்ணு. தோளில் கிடத்திக்கொண்டு ஒட்டிக்கிடந்த மண், தூசிகளைத் தட்டிவிட்டாள். காவ்யா கால் கைகளை உதறியவாறு உடம்பை வளைத்துத் துள்ளினாள்.
       ‘ எனக்கு ஏ செவிட்டி வேணும்......செவிட்டி வேணும்.....’
       ‘ பன்றிகள வளர்க்கக் கூடாதாம்மா.... பஞ்சாயத்தில சொல்லிட்டாங்க.....புரிஞ்சிக்கோம்மா....ஏ செல்லம்ல.....ஏ தங்கம்ல......’
       காவ்யா எதையும் காதினிலும் வாங்கிக்கொள்வதாக இல்லை. அவள் சொன்னதையே கிளிப்பிள்ளையைப்போல சொல்லிக்கொண்டிருந்தாள்.‘ எனக்கு ஏ செவிட்டி வேணும்.....எனக்கு ஏ செவிட்டி வேணும்....’ அவளது கண்களில் கண்ணீர் தெப்பமாக நிறைந்து உடைந்து வழிந்தது. உதடுகளால் வெம்பினாள்.
ரு வாரமாக பஞ்சாயத்து ஆபீஸில் பன்றிகள் பற்றிதான் பேச்சு. பன்றிகளால் பன்றிக்காய்ச்சல் வருதாம். யானைக்கால் வருதாம். மூளைக்காய்ச்சல் வருதாம்....
தண்டோரா போட்டாகி விட்டது. நோட்டீஸ் அடித்து தெருவெங்கும் ஒட்டியாகி விட்டது.
‘ ஊருக்குள் பன்றிகள் வளர்க்கத் தடை
மீறி வளர்த்தால் தண்டனையும் அபராதமும்....’
சங்கிலிமுத்து, போதும்பொண்ணு மனமுடைந்து உட்கார்ந்துவிட்டார்கள். வாயிற்குள் விரலை விட்டு தின்னும் சோற்றை அள்ளும்படியான நடவடிக்கையாக அது இருந்தது. என்ன செய்வது.....? ஏது செய்வது....? விரல்களைப் பிசைந்து கொண்டு சங்கத்தலைவரை பார்ப்பதும், சங்கத்தைக்கூட்டுவதும் கெஞ்சுவதுமாக இருந்தார்கள்.
ஒரு நாள் பஞ்சாயத்து தலைவரை வீடு வரைக்கும் சென்று பார்த்து காலில் விழுந்துவிட்டு வந்தார் சங்கிலி முத்து. இன்னொரு நாள் கண்ணீரை மொத்தமாக வழிய விட்டு கூப்பியக் கையுடன் நின்றாள் போதும்பொண்ணு.
‘ போதும்பொண்ணு.....’
‘ சொல்லுங்க அய்யா....?’
‘ நாளைக்குள்ள எல்லா பன்னியையும் வித்துப்பிடணும். என்ன சொல்றே....?’
‘ இப்படி திடுத்திப்பெனச் சொன்னால் எப்படிங்க.....?’
‘ ஒரு மாசமாக சொல்லிக்கிட்டு தானே வாறேன்....’
போதும்பொண்ணு என்ன பேசுவது என்று தெரியாமல் விரலைப் பிசைந்துகொண்டு நின்றாள்.  
                ‘ என்ன ஒரு சத்தத்தையும் காணோம்....’
 ‘ பன்னி வளர்க்கிறது எங்க குலத் தொழிலுங்க.அதை  நாங்க வளர்த்தே தீருவோம்ங்க.....’
                ‘ ஆத்தா.... நத்தத்திலே நாய் பெருத்தமாதிரி பன்னி பெருத்துக்கிடக்கு. தெருவே பொதுக்கழிவறையாகிக்கிடக்கு தெரியுதுல..... பன்னி வளக்குறது ஒங்க தொழிலா இருக்கலாம். ஏன்... பன்னி ஒங்க தெய்வமாக் கூட இருக்கலாம். பஞ்சாயத்து தீர்மானம் போட்டு வளர்க்கலாமெனச் சொன்னால்தான் வளர்க்கலாம். கூடாதுனா கூடாதுதான்....பஞ்சாயத்து தலைவர் வார்த்தைகளை நெருப்பாக உமிழ்ந்தார்.
பன்னி வளக்கக்கூடாதா...? இல்ல வளக்கிற பன்னி  தெருவுல நடமாடக்கூடாதா...?’
நடமாடக்கூடாது’
 மீறி நடமாடுனா ?’
பன்னிய சுட்டுப்பிடிப்போம். அந்தக் கூலிய நீந்தான் தரணும்.....’
சங்கிலிமுத்து மிரண்டுபோயிருந்தார். போதும்பொண்ணுதான் அவளுக்குத் தெரிந்த நடைமுறை சட்டத்தை எடுத்து வீசினாள். இது எந்த ஊர் நியாமுங்க....நீங்க  ஆடு வளர்க்கலாம், மாடு வளர்க்கலாம், கோழி வளர்க்கலாம், குதிர வளர்க்கலாம்.  நாங்க பன்னி வளர்த்தா மட்டும் அபராதம் போடுறீங்க... உங்க சட்டம் கடவுளுக்கு அடுக்குமா....?’
போதும்பொண்ணு அப்படி கேட்டதும் ஒருத்தனுக்கு மீசை துடித்தது. மக்களுக்கு சீக்க வருதுல, யானைக்காலு நோயீ வருதுல...’
நாங்க   பன்னி வளர்க்கிறதனாலே சீக்கு வருதா...? மக்க கண்டத தின்னு போற வழி, வாற வழில பேண்டு வக்கிறதனால சீக்கு வருதா?’
ஒருத்தன் நாற்காலியை விட்டு சட்டென எழுந்தான். போதும்பொண்ணை அடிக்கப் பாய்ந்தான்.
உங்க பாய்ச்சல வேற ஆளுக்கிட்ட காட்டுங்க. நீங்க வீடு வாசல சுத்தாம வச்சிருந்தா நாங்க ஏன்க பன்னி வளர்க்கப்போறோம். ம்......?’
ஏய்... சங்கிலிமுத்து என்ன உன் பொஞ்சாதி பெரிசா நூல் பிடிச்சு பேசுறா ?’   ஊராட்சி மன்றத் தலைவர் மிரட்டும் தொனியில் கேட்டார்.
 ‘எங்களுக்கு பன்னிதானேங்க வருமானம். அதயும் வளர்க்கக்கூடாதுனு சொன்னா எப்படிங்க?’
அட வளர்க்கக்கூடாதுனு நானே சொல்றேன். பஞ்சாயத்து தீர்மானம் சொல்லுது’
                சங்கிலிமுத்து போதும்பொண்ணு இருவரும் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப்போல தலையைக் கீழே தொங்கவிட்டுகொண்டு நடக்கலானார்கள்.                                         $ $ $
                காவ்யா திண்ணையில் மனம் உடைந்துபோய் உட்கார்ந்திருந்தாள். பள்ளிக்கூடம் போகையில் நின்றிருந்த அத்தனை பன்றிகளும் பள்ளி முடிந்து திரும்பி வருகையில் இல்லை. ஏமாற்றம் நெஞ்சுக்குழியை முட்டியது. தொண்டை விக்கி விக்கி அடைத்தது. அவள் முகம் வீங்கிப்போயிருந்தாள். செவிட்டியும் அதன் குட்டிகளும் இல்லாத வீடு அவளுக்கு வெறிச்சோடித் தெரிந்தன.
       அந்திமப்பொழுதில் அவளது வீட்டிலிருந்து கிளம்பிய குட்டியானை புகையைக் கக்கிக்கொண்டு  வாசலில் வந்து நின்றது. காவ்யா அதைப் பார்த்துக்கொண்டு அறைந்த சோகமாய் உட்கார்ந்திருந்தாள். அவளது அப்பாவும்,அம்மாவும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அவர்களைப்பார்க்க அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. நாசியின் வழியே அனல் காற்று வெடித்தது.
                ‘ செவிட்டியையும், குட்டிகளயும் ஏம்மா வித்தே...?’ அம்மாவின் சேலையைப் பற்றிக்கொண்டு அவளை அடித்தாள். அவளது  தலை முடிகளைப் பிய்த்தாள்.
                ‘எனக்கு செவிட்டி வேணும்,...செவிட்டி வேணும்......’ தரையில் உருண்டுப்புரண்டு அழுதாள்.
                ‘ கொர் ... கொர்,...’ என்றொரு அரவம் வாகனத்திற்குளிருந்து வெளிப்பட்டது. காவ்யா சட்டென அழுகையை நிறுத்தினாள். பார்வையால் நாலாபுறமும் துலாவினாள். பன்றியின் உறுமலின் அரவம் வரும் திசையைத் தேடினாள். சங்கிலிமுத்து ஒரு பன்றியைத் தூக்கி மார்போடு அணைத்துகொண்டு நின்றார்.
                ‘காவ்யா....இந்தா... வாங்கிக்கோ......’
       காவ்யா வெறித்த முகமாய் பார்த்தாள்.
       ‘ வா....இதோட பேரும் செவிட்டிதான்...சினையா இருக்கு. ஒரு மாசத்தில குட்டிக போட்டுடும்... வா...இந்தா...என்றவாறு அதை மகளிடம் நீட்டினார்.
                ‘ போங்க... நா வாங்கமாட்டேன். இதையும் நீ வித்துப்புடுவே....’ கொஞ்சலும் அழுகையும் கலந்த குரலில் சொன்னாள் காவ்யா.
ஊகூம்....மாட்டேன்டியம்மா....இதொண்ணும் சாதா செவிட்டி இல்ல. ஒஸத்தி. சேர்மன் பண்ணையிலிருந்து வாங்கிக்கிட்டு வாறோம்....இது வெள்ளைச்செவிட்டி. வா... இந்தா....வாங்கிக்கோ....’ மெல்ல வாகனத்திலிருந்து இறங்கிய சங்கிலிமுத்து அதை காவ்யாவின் மடியில் கிடத்தினார். அதை வாங்கி மார்போடு அணைத்தாள் காவ்யா. அதன் காதிற்குள் கொர்....கொர்..’ என்றாள். பதிலுக்கு அதுவும் ‘ கொர்....கொர்....’ என்றது.