செவ்வாய், 23 அக்டோபர், 2018

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25

பரிநிர்வாணம்

- அண்டனூர் சுரா

'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம்,

புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன.

திரிபிடகம் - புத்தரின் மெய்யியல் திரட்டு. (திரி - மூன்று.  பிடகம் - கூடை அல்லது திரட்டு) திரிபிடகம் - சுத்த, வினய, அபிதம்ம. புத்தரின் பரிநிர்வாணத்திற்குப் பிறகு கூடிய பௌத்த சங்கம் திரிபிடகத்தை வரையறுத்து தொகுத்தது என்கிறார் சு.மாதவன்.

அது என்ன, பரிநிர்வாணம்?

திசம்பர் 12-2018  முரசொலி இதழ், 'அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் நிகழ்வும் சிந்தனைகளும் ' என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதியது. முதல் பத்தி, '6.12.2018 அண்ணல் அம்பேத்கரின் 62 ஆவது நினைவுதினம் 'மகா பரிநிர்வாண் திவாஸ்' தினமாக கடைபிடிக்கப்பட்டது' .

தில்லி, அலிப்பூர் சாலை , இலக்கம் 26, அம்பேத்கர் உயிர் துறந்த இல்லத்திற்கு 'டாக்டர் அம்பேத்கர் மஹா பரிநிர்வாண் ஸ்தலம் ' எனப் பெயர்ச்சூட்டி அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 2003 , டிசம்பர் 2 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் .


அம்பேத்கரின் ஆசான் புத்தர் - ஏ.பி. வள்ளிநாயகம் எழுதிய கட்டுரையில் பரிநிர்வாணம் குறித்து அம்பேத்கர், உடல், உணர்ச்சிகள், மனம், செயல்கள் யாவும் அடங்கச் செய்வது என்கிறார்.

க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் என்கிற நூலில் நான்காவது அத்யாயம் -  பரிநிர்வாணம். அதில்,
'நிர்வாணமென்ப தேதோவென்றெண்ண வேண்டாம். உடலுயிர் சேர்க்கைக்கு வாணமென்றும் உடலுயிர் பிரிவிற்கு நிர்வாணம் என்றும் சொல்லப்படும்'.

புத்தர் மரணம் அடைந்தார் என்றும், புத்தர் நிர்வாணம் அடைந்தார் என்றும் கூறும் படியான இருவகை வார்த்தைகளின் பேதம் என்ன? என்கிற கேள்விக்கு அயோத்திதாஸப் பண்டிதர், துன்பத்திற்கு இன்பம் எதிரிடையாகவும், துக்கத்திற்கு சுகம் எதிரிடையாகவும் இருப்பது போல, மரணத்திற்கு நிர்வாணம் எதிரிடையாயிருக்கின்றது. ஆசாபாச பற்றுகளில் அழுந்தி மரணமடைந்தோர்களுக்கு பிறவியின் துன்பமும், ஆசாபாசங்கள் அற்று நிர்வாணமடைதோர்களுக்குப் பிறவியற்ற இன்பமும் உண்டாம்.

இதிலிருந்து பரிநிர்வாணம் என்பது மரணம் குறித்தச் சொல் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. இச்சொல் ஆன்ம ஞானம் அடைதல், இறந்து போகுதல், செத்துப்போகுதல்
சிவஞானம் அடைதல், முக்தி அடைதல், சமாதி அடைதல், இறைவனடி சேர்தல், சாயுஜ்ய பதவி அடைதல், கைலாசப் பதவி அடைதல், வைகுண்டம் சேர்தல், பரமபதம் அடைதல், புத்தராதல், சுவர்க்கம் அடைதல் ,...என பலவாறு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சி.பி.சரவணன் எழுதிய பௌத்த மதப் பிரிவுகள் என்கிற தொடரில் 'பௌத்தம், இருபதிற்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டது. அதில் ஹீனயானம் பெரிய பிரிவு. இப்பிரிவுதான் , புத்தரின் நல்லொழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தால் பரிநிர்வாணம் அடையலாம்' என்கிறது.

பரிநிர்வாணம் என்பது சமஸ்கிருதச் சொல். இச்சொல் பரிநிப்பாணம் என்கிற பாலி மொழியிலிருந்து  வந்தது. அருகதர் ( ஆன்மீக ஞான ஒளி அடைதல்). இதற்கு நிகரான சொற்கள் முத்தி, முக்தி, மோட்சம், ஜீனர். தமிழில் வீடுபேறு என்று சொல்லலாம்.




புதிய சொல் , பழைய தேடல் -23

குஞ்சரம்

-அண்டனூர் சுரா

திசம்பர் மாத காக்கைச்சிறகினிலே இதழில் ' ஊர்சுற்றிக் காக்கையாரின் குஞ்சரங்கள்' - பேரா.ந.சண்முகரட்ணம்  எழுதி முகுந்தன் தொகுத்த பத்திக் கட்டுரை. நோர்வே , கலாச்சார மையத்தில் 'ஞானரதம்'( பாரதியார் எழுதியது ) கவிதையின் நாட்டிய அஞ்சலி நடந்தேறியது.

பரம ஏழையாக இருப்பதால் உயர்ந்த இன்பங்கள் எதையும் பெற முடியவில்லையே, என வருந்தும் பாரதிக்கு ஈசன் ஞானம் என்கிற தேய்வீக ரதம் கிடைக்கிறது. அதைக்கொண்டு உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் சென்று பார்க்கிறான். நான்கு லோகத்திலும் கந்தர்வலோகம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அங்கு பர்வதகுமாரி என்கிற கந்தர்வ அழிகையைக் காணுகிறான். அந்த அழகியின் அழகில் சொக்கி,அவளுடன் பரவசத்தில் இருக்கும் கணத்தில் 'படேர்' என்ற ஒரு சத்தத்தினால் மூர்ச்சை போட்டு விழுந்தவன் கண் விழித்தபோது மீண்டும் பழையபடி தன் ஏழ்மை வீட்டில் இருப்பதை உணர்கிறான். இது ஞானரதத்தின் கதை. இக்கதைக் குறித்த விமர்சன போக்குடன், இன்னும் நான்கு பதிவுகள் கொண்ட பத்தி எழுத்திற்கு அவர் சூட்டியத் தலைப்பு ' குஞ்சரம் '.

அது என்ன குஞ்சரம்..?

விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் குஞ்சரம் என்றொரு  ஊராட்சி இருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சி துவக்கம், ஞாயிறு தோறும் ஒளிப்பரப்பாகும் ஒரு நடன நிகழ்ச்சிக்கு 'மானாட , மயிலாட' என கலைஞர் பெயர்ச்சூட்டினார். சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய நடராஜப்பத்து என்கிற பதிகத்திலிருந்து எடுத்தாளப்பட்ட வரி இது. 'மானாட மழுவாட மதியாட புனலாட' என்பதாகத் துவங்கும் இந்த பாடலில் குஞ்சர முகத்தனாட,... என்பதாக ஒரு வரி உண்டு.

2015 ஆம் ஆண்டு இலங்கை இறுதிக்கட்டப் போரில் நடந்தேறிய அத்துமீறல்களை  ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசுடன் இணைந்து விசாரித்து மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது.  இந்த அறிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் பல அறிக்கைகள் வெளிவந்தன. இதற்கிடையில் தமிழ் மிர்ரர் என்கிற பத்திரிகையில் ' இறக்கை இல்லாத அறிக்கை' என்கிற தலைப்பில்  ப. தெய்வீகன் ஓர் அறிக்கை வெளியிட்டார். '.....இந்த அறிக்கைக்கு அரிதாரம் பூசி குஞ்சரம் கட்டி அழகு பார்க்கும் தமிழர் தரப்புக்கள் தாம் எதற்காக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தெரியாமலேயே தமது ஆதரவு அறிக்கைகளை ஊடகங்களில் விளாசி வருகின்றனர்'.

விளக்குமாற்றுக்கு  குஞ்சரம் கட்டுவதைப் போல - ஒரு பழமொழி. இங்கு குஞ்சரம் என்பது சுருக்குப்பையில், சிகை அலங்காரத்தில் தொங்கும் உருண்டையான அணிகலன் அதாவது கருப்புக்குழல்.

குஞ்சி  அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்... ( நாலடியார் )இங்கு குஞ்சி என்பது தலை முடி.

உச்சி முச்சிக் குஞ்சி - மீனாட்சி பிள்ளைத் தமிழ்

குஞ்சி ஆண்மயிர் - சூடாமணி நிகண்டு.

குஞ்சம் -  ஆண் உறுப்பை மறைக்கப் பயன்படும் பண்டைய கால துணி. இதிலிருந்தே ஆணின் உறுப்பு குஞ்சு என்றானது.

சரி, முகுந்தன் குறிப்பிடும் குஞ்சரம் இதுதானா?

கவி குஞ்சர பாரதியார் என்றொரு கருநாடக இசைக்கலைஞர் இருந்தார். அவரது இயற்பெயர் கோடீஸ்வரன். சிவகங்கை மன்னர் அவரது இசைப்புலமையைப் பாராட்டி 'கவி குஞ்சரம் ' என்றொரு பட்டத்தைச் சூட்டினார். அதன்பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது.

பாலகுமாரன் எழுதிய உடையார் சரித்திர நாவலில் குஞ்சர மன்னன் என்றொரு  கதாப்பாத்திரம். இராசராச சோழன் இப்பெயரால் குறிக்கப்படுகிறார்.

குஞ்சரவொழுகை பூட்டி ( பதிற்றுப்பத்து).

குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை ( தொல்காப்பியம்).

மணி இலா குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா ' - இன்னா நாற்பது.

 யானையை சங்க இலக்கியங்கள் அறுபது பெயரில் குறிப்பிடுகின்றன. அதிலொன்று குஞ்சரம்.

இங்கு குஞ்சரம் என்பது வளைந்து தொங்கும் தும்பிக்கை உடைய விலங்கு.

சிவபெருமான், நடனமாடுகையில்  இடது பாதத்தை தூக்கி வளைத்து ஆடியதால் அது குஞ்சிதபாதம் என அழைக்கப்படுகிறது.

குஞ்சரம்,  இந்திய அனைத்து மொழியிலும் புழக்கத்திலுள்ள ஒரு சொல் என்கிறார் நா.கணேசன். இவரது சொல்லாய்வின் படி, மஞ்ஞை - மஞ்சை ( மயில்) எனத் திரிந்ததைப் போல குன்று போலிருக்கும் யானை குஞ்ஞரம். இச்சொல்   குஞ்ஞு - குஞ்சு - குஞ்சர- குஞ்சரம் என திரிந்தது என்கிறார்.

குஞ்சரம் வடமொழிச்சொல்லாகத் தெரிகிறது. இதன் வேர்ச்சொல் குஞ்ஞு தமிழ்ச்சொல்.

இதன்படி,  குஞ்சரம் என்பது களபம். ஆனை என்றும் சொல்லலாம்.



புதிய சொல் , பழைய தேடல் - 24

அபலை

Letter from an un-known woman என்றொரு குறுநாவல். ஜெர்மன் எழுத்தாளர் ஸ்ரிபன் செவாக் ( Stefan Zweig ) எழுதியது. ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளருக்கு எழுதும் கடிதமே இந்நாவல்.

 இரா என்கிற  எழுத்தாளரை ஒரு  பெண் வாசகர் தனியாக சந்திக்கிறாள். இருவருக்குமிடையே நீளும் உரையாடல் உடலிச்சையில் சென்று முடிகிறது. தவறான உறவால் ஒரு குழந்தை பிறந்து அது இறந்தும் விடுகிறது. குற்றவுணர்விற்குள்ளாகும் அப்பெண் நடந்த சம்பவத்தை தன்பெயர் குறிப்பிடாமல்  நாவலாசிரியருக்கு  கடிதம் எழுதுகிறாள். அக்கடிதமே நாவல். 

இந்நாவல் வெளியானதும் நாவலாசிரியரிடம் தவறாது கேட்டக் கேள்வி, ' இச்சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்ததா ? ' என்பதுதான்.

இந்நாவலை இலங்கை நாவலாசிரியர்
செ.கணேசலிங்கம்  'அபலையின் கடிதம் ' என்கிற தலைப்பில் மொழிபெயர்த்தார்.

The fox with the golden tail (பொன்வால் நரி  ) - மகாகவி பாரதி எழுதிய ஆங்கில சிறுகதை. இந்திய விடுதலைப் போராட்டம் திலகர், அரவிந்தர்,...தலைமையில் தீவிரமாக நடந்துகொண்டிருந்த பொழுது இவர்களின்  போராட்ட முன்னெடுப்பை கடுமையாக எதிர்த்தார் அன்னிபெசன்ட் அம்மையார். இவர் ஹோம் ரூல், தியாசபிகல் சொசைட்டி, ஆன்மீகம்,.. என பல்துறையின் வழியே இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்திருந்தார். இந்தியா முழுவதும் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு எதிராக தலைவர்கள் களம் கண்டார்கள். தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.உ.சி, பாரதியார் போன்றோர். அவரது கொள்கைகளை எதிர்க்கவும் நையாண்டி செய்யவும்  பாரதியாரால் எழுதப்பட்ட கதைதான் பொன்வால் நரி.

நரிகளின் தேசத்தில் (பிரிட்டன்) ஒரு கிழட்டு பெண் நரி ( அன்னிபெசண்ட்) இருந்தது. அதற்கு கர்வம் அதிகம் என்பதால் அதன் வாலை நறுக்கிவிட்டார்கள். அந்த நரி தங்கமுலாம் பூசப்பட்ட வாலைப் பொருத்திக்கொண்டு கழுதை,குரங்குகளின் தேசத்தில் (இந்தியா)நுழைந்து உங்களை விட நரிகளுக்கு ( பிரிட்டிஷ்காரர்கள்) அறிவு அதிகமென புகழ்பாடி திரிந்தது. தன் பேச்சுத் திறமையால் சில கழுதைகளை தன் நாட்டிற்கு அழைத்துச்சென்றது. அக்கழுதைகள் திரும்பி வர வேண்டுமென வழக்குத் தொடர, பொன்வால் நரி கழுதைகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தி முடிவெட்டாமல் பொன் வாலை இழந்து வேறொரு நாட்டிற்குத் தப்பி ஓடுகிறது.

டிசம்பர் 9-15  ஜனசக்தி இதழில் எல்லை.சிவக்குமார் இதேயே சற்று மாற்றி எழுதியிருந்தார். இங்கு நரிகளின் தேசம் ( அம்பானி, அதானி), பொன் வால் ( பாஜக, சங் பரிவார்), கழுதை ,குரங்குகளின் தேசம் (  ஏமாந்த அபலைகள் ) . முதலில் ஏமாறும் குரங்கு,கழுதைகள் பிறகு சுதாகரித்து பொன் வாலை பறித்துகொண்டு விரட்டி அடிக்கிறது.

அது என்னதாம் அபலை?

அபலை (1949), அபலை அஞ்சுகம் ( 1959)  - இவை இரண்டும் திரைப்படங்கள்.

ஓர் அபலையின் டயரி ( சமூக நாவல் ) - ஜரீனா முஸ்தபா ஏ.சி எழுதியது.

அகநானூறு அதிசயங்கள் - லண்டன் சுவாமிநாதன் எழுதிய ஒரு கட்டுரை. இதில் பெண்பாலின பெயர்கள் வடமொழியில் ' ஆ'  கொண்டும் இதுவே தமிழில் ' ஐ ' அல்லது 'இ' கொண்டு முடிவதாக குறிப்பிட்டு உதாரணமாக சீதா - சீதை , கோதா - கோதை , அபலா - அபலை எனக் காட்டியிருக்கிறார்.  தாவரத்திற்கு உயிருண்டு என நிரூபித்த ஜெகதீஸ் சந்திர போஷின் துணைவியார் பெயர் அபலா போஸ். 

சூத்திரம் என்கிற பத்திரிகை ' நந்தினி - தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை ' என்கிற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது. இதில் , 'அபலைப்பெண்ணைக் காதலிப்பதைப் போல நடித்து... 'என்பதாக அச்செய்தி விரியும்.

இச்சொல் குறித்து தேடுகையில்  தமிழ்ச்சொல் அகராதிகள் அபலை என்கிற சொல்லிற்கு பெண், துணையற்றவள் எனப் பொருள் தந்துள்ளன.

கல்கி 'அபலையின் கண்ணீர்' என்றொரு  குறுநாவல் எழுதினார் . இக்கதை Tears of a Damsel in Distress என ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இங்கு Damsel என்பது அபலை.  காரிகை என்றும் சொல்லலாம்.






புதிய சொல் , பழைய தேடல்

கோதாட்டம்

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு  அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா குறித்து  கருத்துத் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிச்சேர்ந்த  ப்ரபுல் படேல் ' இதுவும் ஒருவகை ஜும்லாஸ் '   என்றார்.

பிஜேபி உடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசக்கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கச்சொல்லி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. வாக்கெடுப்பு நாளன்று  உரையாற்றிய ராகுல்காந்தி , 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதம்  'ஜூம்லா தாக்குதல்' என்றவர் இதன் அறிகுறிகள் முதலில் உற்சாகம், அடுத்து மகிழ்ச்சி, கடைசியாக பெரும் அதிர்ச்சி ' என்றார். இச்சொல்  இந்திய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் தென் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட சொல் இதுதான்.

'மோடியின் நான்காண்டுகால வேதனைகள் ' சீத்தாராம் யெச்சூரி எழுதிய ஒரு கட்டுரையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ' நரேந்திர மோடியின் முழக்கங்கள் அனைத்துமே தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட ‘ஜும்லாஸ்’ ((‘jumlas’)  வாக்குறுதிகளே'. இக்கட்டுரை ' ச.வீரமணி மொழிபெயர்ப்பில் மே 28 2018 , தீக்கதிரில் வெளியானது.  டிவிட்டர் இணையதளம் நரேந்திர மோடியை  ' பக்கோடா ஜூம்லா மனிதன்' என்றது. காமதேனு ஆகஸ்ட் 31,  வார இதழ் ' இந்த மாயமொழிக்காரரை என்ன செய்வது ? ' - பிரசாந்த் பூஷன் சாடல் பேட்டியில் மோடியை ' ஜூமல்மேன் ' என்றிருந்தார்.

அது என்ன ஜூம்லா?

ஆக்ஸ்போர்டு அரபிக் சொற்களஞ்சியம் ஜூம்லா என்பது உருதுச் சொல் என்கிறது. இதன் பொருள் ' மொத்தம், மதிப்பீடு , உட்கூறு , ஒரு வாக்கியம் ' என்பதாகும்.
மிர் ஜூம்லா , முகலாய ஷாஜகானுக்கு தளபதியாக இருந்தவன். இவனொரு வைர வியாபாரி. இவன் ஷாஜகானுக்கு கொடுத்த அன்பளிப்பு வைரமே கோஹினூர் வைரம் என்பதாக ஒரு கதை உண்டு.

' ஜூம்லா - ஒரு செவிலியரின் கதை ' நேபாள எழுத்தாளர்  ராதா பவுடல் எழுதிய  சிறுகதைத் தொகுப்பு. இங்கு ஜூம்லா என்பது நேபாளம் நாட்டிலுள்ள ஒரு மாவட்டம்.

இதே சொல் இந்தியிலும் உண்டு. 1500000×1250000000 = 1875000000000000 / - இத்தொகையை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? இதன் பெயரே ஜூம்லா என்கிறார் கியூக்வான் புலு. அதாவது, எந்தவொரு காலத்திலும் நிறைவேற்ற  வாய்ப்பில்லாத பொய்யான வாக்குறுதிகளே  'ஜூம்லாஸ்' ( Jumlas ). இச்சொல்லிருந்து உருவான புதிய ஆங்கிலச் சொல் Jumlanomics - Jumla - Economocs .

ஜூம்லா என்பது பித்தலாட்டம் என்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. பித்தல் என்பது  முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏமாற்றுவது. இச்சொல் பித்தலாடகம் என்பதின் திரிபாகும். பித்தலை +ஆடகம்=பித்தலாடகம். ஆடகம் என்பது ஹாடகம் எனும் சம்ஸ்கிருத மொழியின் திரிபு; இதன் பொருள் பொன் என்பதாகும். ஆகவே பித்தலாடகம் என்பதற்கு பித்தலையைப் பொன் என ஏமாற்றுதல் என்றாகி பிறகு அது எல்லாவித ஏமாற்றுதலுக்கும் அப்பதமாகிப் போனது. ஒன்றை  வேறொன்றாக  ஏமாற்றுவது பித்தலாட்டம். அப்படியென்றால் முடியாத  ஒன்றை அல்லது இயலாத ஒன்றை என்னால் முடியும் என்று ஏமாற்றுவதை எச்சொல்லால் அழைக்கலாம்...?

'கோதாட்டம்'

 'கோதாட்  டொழி ' என்கிறது ஔவையாரின் ஆத்திசூடி. பேச்சால் ஏமாற்றும்  குற்றமுள்ள ஆட்டத்தை தவிர் என்பது இதன் பொருள். பண்டிதர் அயோத்திதாசர் கோது என்பது பிறருக்குத் துன்பத்தைத் தருவிக்கும் படியான சொல்லுதல் என்கிறார்.

சுன்னாகம் அ.குமாரசுவாமிப்பிள்ளை அகராதி கோது - குற்றம் , உள்ளீடில்லது.

A Dictionary Of The Tamil And English Languages, Volume1 By Johann Peter Rottler அகராதி கோதாட் டொழி என்பதை  cease to play a sinful play என்கிறது.

கோதாகொடுத்தல் என்பது சென்னை வழக்கு. அதாவது,  ஏமாற்றிவிட்டுப் போதல். Chennai Univercity Tamil Lexicon Dictionary - Page 1184.

கோத்துவிடுதல், கோத்துவாங்குதல், கோத்தல் இதன் தொடர்புடைய பிற சொற்கள். இதன் வேர்ச்சொல் ' கோதல்' . இதன் பொருள் கேடு விளைவித்தல் அல்லது ஏமாற்றுதல்.

இதலிருந்து ஜூம்லா என்பதை பித்தலாட்டம், வஞ்சிக்கை என பல சொற்களால் விளித்தாலும் கோதாட்டம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.



3.2.2019


புதிய சொல் , பழைய தேடல் - 21

நக்கன்

- அண்டனூர் சுரா

'சிந்துசமவெளிக்கு ஒளி தந்தவர் ' - 27.11.2018 அன்று தினமணியில் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவு குறித்து முனைவர் ம. இராசேந்திரன் எழுதிய கட்டுரை.

கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு  மைசூரிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அது மத்திய அரசு நிறுவனம் என்பதால் பெயர் பலகையில் இந்தி கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும். ஆகவே  மாற்றுவழியில் யோசித்து பேரா.இராசவேலு உதவியுடன் பெயர் பலகை தமிழ் பிராமி எழுத்தில் எழுதி கலைஞரிடம் கொடுக்க , அவர் அதை ஐராவதம் மகாதேவனிடம் காட்டி சரிப்பார்த்து வர வேண்டுமென கேட்க, அவரது பார்வைக்கு பிறகு பெயர்ப்பலகை தமிழ் பிராமி எழுத்தில் எழுதப்பட்டது.

ஜேஎன்யூ தலைவரும் காலச்சக்கரம் நாளிதழின் ஆசிரியருமான கா.குமார் எழுதிய இரங்கல் கட்டுரையில் 'பிராமி எழுத்து எனச் சொல்லிக்கொண்டிருந்தவர்களை தமிழ் பிராமி எனத் திருத்தியவர் ஐராவதம் மகாதேவன்..'.  செம்மொழி மாநாட்டு இலச்சனையில் திருவள்ளுவரைச் சுற்றி  இடம் பெற்ற எழுத்துருக்கள் ஐராவதம் சரிபார்த்த தமிழ் பிராமி எழுத்துகளே.

ம.ரா,கட்டுரையின் தொடர்ச்சியில் "சித்தனவாசல் கல்வெட்டிலிருக்கும் 'நக்கன்' என்கிற சொல் ஆண், பெண் இரு பாலருக்குமான பொதுவானச் சொல் என்கிற அவரது விளக்கம் பலரால் பெரிதும் பாராட்டப்பெற்றது" என்றிருந்தார்.  இக்கட்டுரை டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஆய்வு மைய வெளியீடான வரலாற்று ஆய்விதழ் தொகுதி 12, 13 இல் இடம் பெற்றுள்ளது.

ஐராவதம் மகாதேவனின்  மரணம் தமிழ் உலகிற்கு பேரிழப்பே!.

சரி, நக்கன் என்பது என்ன?

எஸ். குலசேகரன் எழுதிய சரித்திர புதினம் - அம்பலவன் பழுவூர் நக்கன்.

முதல் இராசசிம்மனின் குழுமூர்ப்போரில் பராந்தகப் பள்ளி வேளானான நக்கன் புள்ளன் பங்கேற்றுள்ளான்.

'வெல்வினையறியா நக்கன்' என்கிறது திருவிளையாடல் புராணம்.

இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரியில் குடியமர்த்தப்பட்ட 400 பெண்கள் தன் பெயருக்கு முன்னால் நக்கன் பெயரை சேர்த்துக்கொண்டார்கள் என்பது வரலாற்றுப்பதிவு.

குலசேகரதேவர் பாண்டியன், நக்கன் நாச்சியார் என்கிற நடன மங்கைக்கு மூவாயிரத் தலைக்கோலி என்கிற பட்டத்தை வழங்கியிருக்கிறான். முதலாம் இராசராசனின் மனைவி நக்கன் பஞ்சமன் மாதேவி.

சித்தனவாசல் கீழ்குகையில் இச்சொல் வடிக்கப்பட்டுள்ளதால்,  சமண முனிவர்கள்  நிர்வாணமாக வாழ்ந்தார்கள் எனப் பொருள் கொள்ள முடிகிறது.

நக்கன் என்கிற சொல்லின் வேர்ச்சொல் - நக்ந. இது வடமொழிச்சொல் என்கிறது பிங்கல நிகண்டு. நக்ந என்றால் நிர்வாணி.

பிற்கால சோழர்களின் காலத்தில் நக்கன் என்பது சிவனைக் குறிக்கும் சொல்லாக மறுவியிருக்கிறது. நக்கன் என்றால் நரியைக் குறிக்கும். சிவன் , நரியை பரியாக மாற்றியதால் அவனுக்கு அப்படியொரு பெயர். நக்கா- நக்கனை வழிபடும் சொல். "நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே - தேவாரம்.

வீட்டுக்கு வீடு சன், டண்டநக்கா டண் - சன் டிடிஎச் விளம்பரம்.

டண்டணக்கா நக்கா நக்கா - ஒரு திரைப்பட பாடல்.

நக்கன் - அன் என்பது ஆண் பாலைக்குறிக்கும் விகுதி என்றாலும் இச்சொல் பெண்ணைக்குறிக்கும், அம்மன் போன்று.

நக்கன் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டின் படி உறவு முறையைக் குறிக்கும் சொல் என்கிறார் ஐராவதம். உடன்பிறவா சகோதரி நங்கை, நக்கன். இச்சொற்களின் வேர்ச்சொல் அக்கை .

'நகு +அன் ' எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். நகு என்பது தமிழ்ச்சொல். இதன்படி நக்கன் என்பது இன்முகத்தினன்

பெரம்பலூர் மாவட்டத்தில் நக்கசேலம் என்கிற சிற்றூர் உண்டு. சைலம் - மலை. நக்கன் - நரி அல்லது சிவன்.

இதன்படி, நக்கன் என்கிற சொல்லிற்கு அருகன், நரி, சிவன், நிர்வாணி எனப் பல பொருள் உண்டு. ஆயினும் தற்காலத்தில்  இச்சொல் ஆண், பெண் பாலின வேறுபாடின்றி வதைக்கும் 'ஏழ்மை ' யைக் குறிப்பதாக இருக்கிறது.

- தொடரும்...

06.01.2019


புதிய சொல் , பழைய தேடல் - 20

துறக்கம்

- அண்டனூர் சுரா

24 ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு  'முகமது ரசூல்லா' திரைப்படத்தை திரையிடும் பொருட்டு வந்திருந்த ஈரானிய திரைப்பட கலைஞர் மஜூத் மஜூதிவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், 'மிகக் கடுமையான தணிக்கை விதிகள் கொண்ட ஒரு  நாட்டிலிருந்து எப்படி உங்களால் மிகச் சிறந்த படங்களை வெளிக்கொணர முடிகிறது...?'. அதற்கு  அவர் சொன்னப் பதில்  ' தணிக்கைத் துறையினர், நிறைய சட்ட விதிகளையும் , கட்டுப்பாடுகளையும் தன் வசம் வைத்திருக்கிறார்கள். என் படைப்பிற்குள்ளாக நுழைந்து துருவிப் பார்க்கும்படியான  காட்சிகளை அவர்களுக்கு நான் கொடுப்பதில்லை...'.

உலக திரைப்பட கலைஞர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட இவரது அடுத்தடுத்த இரு திரைப்படங்கள் சில்ரன் ஆப் ஹெவன்,  த கலர் ஆப் பாரடைஸ். ஹெவன் , பாரடைஸ் இரண்டுமே சுவர்க்கம்தான், இரண்டிற்குமான வித்தியாசம் என்ன, மொழியாளர்கள்  விளக்கம் தேடத் துவங்கினார்கள் ,

 சுவர்க்கத்தை சுவர்க்கம் என்றும்  சொர்க்கம் என்றும் இரு சொற்களால் சுட்டுகிறோம்.  இரண்டில் எது சரி..?

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...? , சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்...இரண்டும் திரைப்பட பாடல் வரிகள்.

டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம்  - சொர்க்கம்.  'நான் தேடிய சொர்க்கம் ' என்றொரு திரைப்படம் உண்டு.

சுஜாதாவின் ஒரு நாவல் 'மூன்று நாள் சொர்க்கம் '. மீண்ட சொர்க்கம் - பானுமதி பார்த்தசாரதியின் நாவல் .

அபிதா நாவலில் லா.ச.ரா சுவர்க்கம் என்கிற சொல்லைப்  பயன்படுத்தியிருக்கிறார். இதே சொல் எச்.முஜீப் ரஹ்மான் எழுதிய தீர்க்கத்தரிசி  நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது .

பேரறிஞர் அண்ணாவின் பிரபல மேடை நாடக வசனம் இது.

' அடேய்  முட்டாள் புரூனோ, நீ சொல்வதைப் போல உலகம் உருண்டை என்றால் சுவர்க்கம் எங்கேயடா இருக்கும்...?'' அதைத்தான் நானும் கேட்கிறேன் சுவர்க்கம் எங்கே இருக்கும்..?'

இச்சொல் குறித்து தேடுகையில் சங்க இலக்கியத்தில் சொர்க்கம் , நரகம்  என்கிற இரண்டும் துறக்கம் , நிரயம் என்றே  பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் ( கலித்தொகை )

மறப்படைக் குதிரை, மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை( அகநானூறு)

சேர நாட்டு புலவரான ' பாலைக் கௌதமனார் ' துறக்கம் சென்றதாக பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்துப்பதிகம் பேசுகிறது. இலக்கியத்தில் துறக்கத்தைத் சிலரும்,
நிரயத்தைச் சிலரும் பேசியிருக்கிறார்கள். இரண்டையும் பேசிய  ஒரே புலவர் பரணர் மட்டுமே.

துறக்கம் என்கிற தமிழ்ச்சொல்லுடன் ஸ்வர்கம் என்கிற வடசொல் சேர்ந்து உருவான சொல் சுவர்க்கம். அது மெல்லத் திரிந்து  சொர்க்கமாகியிருக்கிறது.

ஆங்கிலத்தில் heaven, paradise இரண்டும் சுவர்க்கம்தான் என்றாலும் ஹெவன் என்பது மேலுலகம். கற்பனையானது. அனைத்து மதங்களும் கட்டமைப்பது. இது பலரால்  சொர்க்கம் எனச் சுட்டப்படுகிறது.

நான்கு புறமும் வேலியால் அமைக்கப்பட்ட மனிதன் வாழ்வதற்கு உகந்த வனம் சுவர்க்கம்.  ஆங்கிலத்தில்  paradise.  ஜான் மில்டன் படைத்தது  பாரடைஸ் லாஸ்ட் ( இழந்த சுவர்க்கம்). தஞ்சாவூரில் ராணி பாரடைஸ் என்றொரு திரை அரங்கமிருக்கிறது.

சொர்க்கம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீஜே அளித்த பதில் சமீபத்தில் சர்ச்சையானது. ' சொர்க்கம் என்பது வானத்தில் இல்லை. அது பூமியில் படைக்கப்பட வேண்டும்....'

சொர்க்கம் என்கிற ஒன்று இல்லைவே இல்லை என்றார் புரூனோ. புரூனோ மட்டுமா அறிவியலும் கூட.  சுவர்க்கம் இருக்கிறது என்கிறது மதவியல்.  துறக்கம் - ஸ்வர்கம் - சுவர்க்கம் - சொர்க்கம் இந்த பரிணாம வளர்ச்சியின் மூலச் சொல் துறக்கம் என்பது நம் எத்தனை பேருக்குத் தெரியும்.

அட, ஸ்வர்கமே என்றாலும் நமூர் துறக்கம் போல் வருமா...?

30.12.2018


புதிய சொல் , பழைய தேடல் - 26

அஞரின்பர்

- அண்டனூர் சுரா

திசம்பர் 16,  சோனியா காந்தி , ராகுல்காந்தி கலந்துகொண்ட அண்ணா அறிவாலய கலைஞர் சிலை திறப்பு விழாவிற்குப் பிறகான பொதுக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் நரேந்திர மோடியை 'சேடிஸ்ட் ' பிரதமரென விமர்சனம் செய்தார். இச்சொல் குறித்து தினசரிகள் அவ்வளவாக கண்டுகொள்ளாமல்  கடந்து போக முரசொலி இவ்வாறு தலைப்புச் செய்தியாக்கியிருந்தது. 'பரம்பரை மன்னர் போல் செயல்படும் 'சேடிஸ்ட்'மோடியின் நாசிச, பாசிச ஆட்சியை வீழ்த்தி  புதிய இந்தியாவை உருவாக்க ராகுலே வருக!நல்லாட்சித்  தருக!'.

இதே சொல்லை அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தின் மீதான அறிக்கையில் 'தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் சேடிஸ்ட் மனப்பான்மையுடன் அதிமுக அரசு செயல்படுகிறது' என்றிருந்தார்.

தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இதே சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆந்திரப்பிரதேசம் நந்தியால் தொகுதி எம்.எல்.ஏ பூமா நாகிரெட்டி மரணமடைய அத்தொகுதிக்கு நடைப்பெற்ற  இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ‘ஆந்திரப்பிரதேச மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் முதல்மந்திரி சந்திரபாபு நாயுடுவை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர் கலியுக ராட்சசனாக இருந்து வருகிறார்’ என குறிப்பிட்டார். இது ஆந்திராவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு  'என்னை சுட்டுக் கொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறிய கருத்துக்கள் அவரது ’சேடிஸ்ட்’ மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது' என்றிருந்தார்.(மாலைமலர் ஆகஸ்டு -8).

நடிகர் வடிவேலு '  எலி ' திரைப்படத்தின் குறைகளை மட்டும்  சுட்டிக்காட்டி  விமர்சனம் செய்தவர்களை ' சைக்கோ, சேடிஸ்ட் ' என்றார்.

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன் எழுதிய நாவலில் ஓரிடம் ' கடவுளே...நல்லவர்களை மட்டும் ஏன் இந்த சோதனை சோதிக்கிறாய்?' ' கடவுள் ஒரு சேடிஸ்ட்'.

சேடிஸ்ட் மன்னர்களென சிலரை வரலாறு பட்டியலிட்டுள்ளது.

அட்டியா, செங்கிஸ்கான், நேரோ, ட்ராகுலா, வ்லாடு டெபெஸ், நான்காம் இவான், கலிகுலா, மாக்ஸிமிலியன், இப்ராஹிம் சுல்தான், தாமஸ் டி டர்குவெமடா,...

சேடிஸ்ட் -  நாசிஸ்ட், பாசிஸ்ட் இவ்விரு சொற்களை விடவும் கடுஞ்சொல் .

அது என்னது சேடிஸ்ட் ?

பிரெஞ்ச் சொல் SADISME  என்கிற சொல்லிலிருந்து பிறந்தது SADISM - SADIST.

சேடிஸ்ட் குறித்து தமிழில் தேடுகையில்

சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம் - வரந்தரு காதையில்

'ஆற்றாத் தன்மையள் ஆரஞரெய்தி' என்கிறது. அதாவது, மாலதி என்கிற பெண், மாற்றாந்தாய் குழந்தைக்கு முலைப்பாலூட்ட அக்குழந்தை முந்தைய கருமத்தின் பயனாய் இறந்துவிட அதனால் ஏற்படும் துன்பம் என்பது பொருள்.

ஆரஞர் உற்றன் கண் ( குறள் 1179 )

பிரிந்துசென்ற காதலனுக்காக துஞ்சாத கண், அவன் வந்ததன் பிறகும் துஞ்சாது. இத்துன்பத்தை வள்ளுவன் 'ஆரஞர்' என்கிறான்.

தடித்தனன் அவனுந் தானும் ஆரஞர் உழந்து ( கந்த புராணம் )

'ஆரஞர் உற்ற வீரபத்தினி' ( சிலப்பதிகாரம் ) .

அஞர் - ஆரஞர் இரண்டும் துன்பத்தைக் குறிக்கும் சொற்கள். ஆரஞர்  என்பது  தான் வரவழைத்துக்கொள்ளும் துன்பம் . அஞர் என்பது அடுத்தவர்  ஏற்படுத்தும் துன்பம்.

'ஆரவுண்டு பேரஞர் போக்கி ' - பொருநராற்றுப்படை.

'கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ' என்கிற நற்றிணை பாடலில் 'வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே' என்பது கடைசி வரி.
தலைவி  மீது பல துன்பங்கள் படர  அதிலிருந்து மீண்டெழும் தவிப்பு.

SADISM ( கொடுமகிழ்வு )இதன் நிகர்சொல் MASOCHISM அதாவது, வலியேற்பு வெறி, துன்பவேட்கை, தாக்கின்பம், வல்லுறவின்பம், சித்திரவதை செய்வதில் இன்பம்,...இத்தகைய துன்பத்தை கைக்கொட்டி ரசிக்கும் மனோபாவம் கொண்டவர்களே சேடிஸ்ட். இவர்களை தமிழில் 'அஞரின்பர்'எனச் சொல்லலாம்

23.12.2018


புதிய சொல் , பழைய தேடல் - 19
யக்ஞம் 
16.12.2018

'இராஜலெட்சுமியும் தீபாவளியைக் கொண்டாடியிருப்பாள்' 06.11.2018, தீக்கதிரில் களப்பிரன் எழுதிய கட்டுரை. சேலம் மாவட்டம் , தளவாய்ப்பட்டி கிராமம் , பதின்மூன்று வயது குழந்தை  இராஜலெட்சுமியை , தினேஷ்குமார் என்கிற சாதி வெறியன் தாயின் முன்பாகவே கழுத்தை அறுத்து ,  கொலை செய்கிறான். அவளுக்காக அவ்வூரில் ஒரு சுவரொட்டி இல்லை, கண்டன அறிக்கையோ, இரங்கல் கூட்டமோ இல்லை.  உலகமே, தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்க, இராஜலெட்சுமி வீட்டில் 15 ஆம் நாள் காரியம் நடந்துகொண்டிருக்கிறது...இச்சம்பவத்தை  வாசிக்கையில் யாருக்குத்தான் நெஞ்சு பதைக்காது.

 தமிழ், இனம், திராவிடம், பாரதம், தேசியம்...என்கிற பெயரால் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் தலைவர்களின் திருவாய் சட்டென மௌனித்துப் போனதை என்னவென்று சொல்வது..! இவர்களின் மௌனம் தலித்களை ' யக்ஞம் ' என்கிற சிறுகதையில் சீதாராமுடு எடுத்த முடிவை நோக்கித்  தள்ளுவதாக இருக்கிறது.

தெலுங்கு இலக்கிய உலகில் 'காளீபட்னம் ராமாராவ் ' எழுதிய ' யக்ஞம்'என்கிற சிறுகதை,  இந்திய இலக்கியத்தை மட்டுமல்ல, சனாதன கட்டமைப்பை ஒரு அசைவு அசைக்கவே செய்தது.

 'கோபண்ணா என்கிற வியாபாரியிடம் அப்பல்ராமுடு என்கிற தலித் கடன் வாங்குகிறார். அவரால் உரிய நேரத்தில் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. ஸ்ரீராமுலு நாயுடு என்கிற மேற்சாதிக்காரனிடம்  பஞ்சாயத்து செல்கிறது. அவன் , கடனைத் தீர்க்க அப்பல்ராமுடமிருந்து நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிகொள்கிறான். இது அப்பல்ராமுடுவின் மகன் சீதாராமுடுக்கு தெரியவருகிறது. அவன், விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனைத் தேடிப்பிடித்து பஞ்சாயத்து மண்டபத்திற்கு அழைத்துச்சென்று ,  அவர்கள் பார்க்க மகனின் கழுத்தை அறுத்து, தலை வேறு, உடம்பு வேறாகக் கிடத்துவிட்டு சொல்கிறான். 'என் அப்பன் உங்களுக்கு அடிமை. அவருக்குப் பின்  நானும் அடிமை. எனக்குப்பிறகு என் மகன் அடிமையாக இருக்கமாட்டான்...'.

யக்ஞம்...?

கமலாதேவி அரவிந்தன் எழுதிய எங்கேயும் மனிதர்கள் என்கிற சிறுகதையில் இச்சொல் இடம்பெற்றுள்ளது.

ஜெயகாந்தனின் ஒரு நாவல் - மஹா யக்ஞம்.
மலையாள எழுத்தாளர் கே.பி.ஸ்ரீதேவியின்  ஒரு நாவல் - யக்ஞம்

தமிழை ஆண்டாள் - வைரமுத்து எழுதிய  கட்டுரையில் ' யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டு கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்படுகின்ற...' என்பதாக ஒரு பத்தி.

மரக்கால் - சோலை சுந்தரபெருமாள் எழுதிய ஒரு வரலாற்று நாவல். இந்நாவலுக்கு அவர் எழுதிய முன்னுரையில்
'  களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமணர்களிடமிருந்து பிரமதேயங்களும் பட்டமங்களங்களும் பறிக்கப்பட்டன. பிறகு ஆட்சிக்கு வந்த பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியால் வேள்விக்குடி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. வேதம் என்பது ஸ்மிருதியைக் குறிக்கிறது. ஸ்மிருதி என்பது அருவவழிபாடு.  நெருப்பில்  ஆகிருதிப் பெய்து கடவுளை வழிபடுவது. கடவுளுக்கும் மனிதனுக்குமான சாதனம் நெருப்பு.  இந்த நெருப்பிற்குப் பயன்படும் ஓமகுண்டலம் யக்ஞம்...

இச்சொல் குறித்து தேடுகையில் ரிக் வேதகால சொல்லாக இருக்கிறது.  இச்சொல்லுக்கு வேள்வி, தியாகம், யாகம் என பல பொருள்கள் தருகின்றன. ஆங்கிலத்தில்  sacrifice. தமிழில் நரபலி என்றும் சொல்லலாம்.
- தொடரும்...





புதிய சொல், பழைய தேடல் -18

காலதர்

- அண்டனூர் சுரா

மனத்தின் தோற்றம் - பேரா.சுந்தர சண்முகனார் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில் 'தொழுது பேசுதல்' என்றொரு தலைப்பு.  அதற்கு மணிமேகலை காப்பியத்திலிருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறார். எட்டி குமரன் என்பவன் யாழ் வாசிக்கிறான்.  அவன் வாசிக்கும் யாழின் சுதி மாறுகிறது. ஏன் மாறுகிறது, என உதயக்குமாரன் கேட்க , எட்டிகுமரன் உதயக்குமாரனை  தொழுது வணங்கிவிட்டு சொல்கிறான். ' மணிமேகலை நடந்து செல்வது காலதர் வழியில் தெரிந்தது. அவளைப் பார்த்ததும் சுதி மாறிவிட்டது'.

அம்மாவின் ரகசியம் - சுநேத்ரா ராஜகருணாநாயக, ஆங்கிலம், சிங்களம் இரு மொழிகளில் எழுதப்பட்ட குறுநாவல். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் எம்.ரிஷான் ஷெரிப்.   இந்நாவலின் களம் ஒரு சிற்றூர். அவ்வூரை சிங்கள இராணுவ படையினர் சுற்றி வளைக்கிறார்கள். அதற்குள்  ஒரு ஏழை சிங்களக் குடும்பமும் அடங்குகிறது. அப்படையினரிடம் அக்குடும்பம் படும்பாடுதான் கதை. கதையின் நாயகி முத்துலதா,  மனதிற்குள் நீண்ட நாள் வைத்திருந்த ஒரு ரகசியத்தை  கடைசியில் அவிழ்க்கிறாள்.


 இந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கு முன்னுரை தந்திருப்பவர் அம்பை. ' சுநேத்ராவின் படைப்புலகை எட்டிப்பார்க்க அமைந்த ஒரு காலதர்தான் இந்த மொழிப்பெயர்ப்பு. இதன்பின் அப்படைப்புலகின் பெருஞ்சன்னல்கள், கதவுகள் திறக்கப்படும் வாய்ப்புகள் உண்டு என்று கட்டியம் கூறும் மொழியாக்கக் காலதர் ..' என்பதாக ஓரிடம்.

அது என்ன, காலதர்...?.

இச்சொல்லை தமிழ்க்கவிதைகளில் நிறைய காண முடிகிறது. கவிஞர்கள், காதலர் என்பதை அவசரத்தில் காலதர் என மாற்றி எழுதிவிடும் சொல்லாக அது இருக்கிறது.

கவிஞர் மகுடேசுவரன், இச்சொல்லை பல இடங்களில் விரும்பி பயன்படுத்தியிருக்கிறார். இவர் எழுதித் தொகுத்த ஒரு கட்டுரை நூலின் தலைப்பு ' காலதர் '.

'மான்கள் காலதர் மாளிகை ' என்கிறது   சிலப்பதிகாரம். மானின் கண்களைப் போல வழிகள் கொண்ட மாளிகை என்பது அதன் பொருள்.

காலதர் அருகே காதலர் - என்கிறது ஒரு கவிதை. காலதர், ஒரு

எழுத்தாளரின் புனைப்பெயராகவும் கூட இருக்கிறது.

சரி, காலதர் என்பது என்ன...?

அகநானூறில் கானமானதர் என்றொரு சொல் உண்டு.  காட்டு விலங்குகள் செல்லும் வழி என்று அதற்குப் பொருள். இதே போன்று, கல்லதர் - கல்லினாலான வழி.

ஆக்கம் அதர் வினாய்  என்கிறது  ஒரு குறள்.

கால் என்பதற்கு செல்லுதல், ஓர் உறுப்பு, காலம், காற்று என பல பொருள் உண்டு.


இங்கு ,
காலதர் என்பதை கால் ( காற்று ),  அதர் ( வழி )  எனப் பிரித்து பொருள் கொள்ளலாம். அதாவது காற்று வரும் வழி.

ஆர்.சி.சம்பத்,  தமிழ் வளர்த்த கிருத்தவர்கள் என்கிற நூலில் போர்த்துகீசியர்கள் வருகைக்கு முன்பு வரைக்கும்  இச்சொல் புழக்கத்திலிருந்தாக சொல்கிறார்.

இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் சாளரம், சாலேகம்,ஜன்னல் என பல பொருள் தருகின்றன.

ரா.பி.சேதுப்பிள்ளை 'தமிழ்விருந்து' என்கிற நூலில் ஜன்னல் என்பது போர்த்துகீசிய சொல் என்கிறார்.

கணினி உலகிற்கு, 2014 சூலை 29, மிக முக்கியமான நாள். அன்றைய தினம்தான் விண்டோசு 7,8,8.1 ஆகிய மென்பொருளுக்கு மாற்றாக விண்டோசு 10 அறிமுகம் செய்யப்பட்டது.  இதை இணையத்தமிழ் 'காலதர் 10 ' என தமிழ்படுத்தியது.


இதிலிருந்து நாமொரு முடிவிற்கு வரலாம். இனி ஜன்னல், சன்னல், விண்டோ, சாளரம் என்பதை காலதர் எனச் சொல்லி பழகலாம்...










25.11.2018


புதிய சொல் , பழைய தேடல் - 17

காந்தர்வம்

- அண்டனூர் சுரா

திருமண வயது - ஆண்களுக்கு அநியாயம் நடக்கிறதா?  யுவகிருஷ்ணா எழுதிய ஒரு கட்டுரை. ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க முடியாது உச்சநீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவை மையமாகக் கொண்ட  கட்டுரை இது.

1927 ஆம் ஆண்டு ராய்சாகிப் ஹர்பிலாஸ் சர்தா, குழந்தைத் திருமணத் தடுப்பு மசோதாவை பிரிட்டிஷ் இந்திய மத்திய சட்டமன்றத்தில் முன் வைத்தார். அதன்படி பெண்ணுக்கு திருமண வயது 14,ஆணுக்கு 18. இதுவே பிறகு 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் மூலம் 18 மற்றும் 21 என்றானது.

இக்கட்டுரையில் இப்படியாக ஓரிடம், காதல், கத்தரிக்காய், காந்தர்வ விவாகம் போன்ற அடாத செயல்பாடுகளால் குடும்ப மானம் என்கிற வேலியைக் காக்கும் பொருட்டு  குழந்தைத் திருமணங்கள் நடந்தேறின.

அது என்னதாம் காந்தர்வம்?

திருத்தக்கத்தேவர் இயற்றிய  சீவகசிந்தாமணி  13 இலம்பகங்களாலானது. இலம்பகம் என்பதற்கு மாலை என்று பொருள். பதின்மூன்றில் ஒன்று காந்தருவதத்தையார் இலம்பகம்.

சாவி எழுதிய ஆப்பிள் பசி என்கிற நாவலில் இச்சொல் இடம் பெறுகிறது. டெல்லி தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் காந்தர்வ இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.

பாரதி இயற்றிய ஞானரதத்தில் ' காந்தர்வ பாஷை ' என்பதாக ஓரிடம் வருகிறது.    கும்ப ராசி, தனுசு நட்சத்திரத்தை காந்தர்வம் என்கிறது ஜோதிடம்.

காந்தர்வம் என்பது வேதச்சொல். நான்கு வகை வேதங்களில் சாம வேதத்தின் உபவேதம் காந்தர்வம். அதாவது நுண் கலைகள் குறித்த அறிவியல்.

பெருஞ்சித்திரனார் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரை - எட்டுவகை திருமணங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறது. அதில் ஒன்று காந்தர்வம். இதையே ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணியும் பட்டியலிடுகிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல் புரிந்து, மணம் செய்து கொள்வது.

பிலிகணீயம் என்கிற வட நூலினைத் தழுவி பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிக்கவி என்றொரு இலக்கியம் படைத்தார். பிறகு அதுவே அவருக்கு புரட்சிக்கவிஞர் என அடைமொழிக்கு காரணமும் ஆனது. இதில் அமுதவல்லி என்கிற அரசனின் மகளுக்கு, உதாரன் என்கிற  இளைஞன் மீது  காதல் வர, இருவரும்  காந்தர்வ மணம் புரிய போராடுகிறார்கள். அரசனின் மகளை ஒரு சாமானியன் மணம் முடிப்பதா..? அவனுக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதனால் மக்களிடம் புரட்சி வெடிக்க மன்னராட்சி , மக்களாட்சியாக மலர்கிறது.  தமிழ்நாட்டில் சங்கர், இளவரசன்கள் படுகொலை செய்யப்பட காரணம் காந்தர்வமே. ஆனால் புரட்சியைத்தான் காணோம்.

காந்த துருவம் எதிர் துருவத்தை கவர்ந்திழுப்பதைப் போல இரு பாலினங்கள்  ஒன்றையொன்று கவர்ந்துகொள்வது காந்தர்வம்.
காந்தர்வ திருமணத்தை பெரியார் சாதி மறுப்பு திருமணமாக நடத்தி வைத்தார்.

காந்தர்வம் குறித்து சங்கப்பாடல்களில் தேடுகையில்  அகப்பாடல்கள் களவு, களவொழுக்கம் என்கின்றன. இனி நாம் அப்படியே சொல்லலாமே....?






புதிய சொல் , பழைய தேடல்  -16

சம்பாசனை

- அண்டனூர் சுரா

எங்கே போகிறோம் ? கே.எஸ்.சுதாகர் எழுதிய ஈழ சிறுகதை.
செல்வராசா, சந்திரன் இருவரும் ஒரே  பேருந்தில் பயணம் செய்கிறார்கள். சந்திரன் துபாயில் பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து நாடு திரும்பியவன்.  விதவையான தங்கைக்கு வரன் தேடுகையில் சகபயணி செல்வராசாவைப் பார்க்கிறான். வெண்முடி தரித்த வயது. அவனுக்கே தங்கையை முடித்துவிடலாமென நினைக்கிறான்.  இதற்கிடையில் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைக்கும் கீழே ஒருவர் வாழை இலைக்கட்டை வைத்துவிட்டு செல்கிறார். அதற்குள் புலிகளின் இலட்சணையுடன் கூடிய  நோட்டிஸ் இருக்கிறது. அது சிங்கள சிப்பாய்களின் பார்வைக்கு வர, நோட்டிஸ் வைத்தவர்களைத் தேடுகிறார்கள். பேருந்திற்குளிருந்த   ஆறு  தமிழக பயணிகளைக்  கைது செய்து வதைக்கிறார்கள்.  இதை யார் வைத்ததென சொல்லவில்லையென்றால் ஆறு பேரையும் சுடுவேன் என்கிறார்கள். ஐந்து பேர்களைக் காப்பாற்ற சந்திரன் செய்யாத ஒன்றைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறான்.

இக்கதையில் செல்வராசா, சந்திரன் இருவரும்  உரையாடுகிறார்கள்.  ' உங்களுடைய பிள்ளையா, எதுவரை போறீங்க?' ' ஆச்சிக்கு சுகமில்லை' . சந்திரனின் பதில் சம்பந்தமில்லாமல் இருந்தாலும் சம்பாசனை வாழைக்குருத்து போல் மளமளவென தொடர்ந்தது.

அது என்ன சம்பாசனை?

 சிங்கப்பூர் அப்பொழுது மலேயா நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்தது.   1888 ஆம் ஆண்டு மகுதூம் சாய்பு ,  'சிங்கை நேசன்' என்றொரு நாளிதழைத் துவங்கினார்.
அதில் வாரம் ஒரு சிறுகதை எழுதினார். இக்கதைகளே சிங்கைத் தமிழின்  முதல் சிறுகதை முயற்சி என்கிறார்கள். இக்கதைகளை எழுத சாய்பு பயன்படுத்திய புனைப்பெயர்  ' வினோத சம்பாசனை '.

வ.ரா எழுதிய ஒரு நூல் 'சுவர்கத்தில் சம்பாசனை'

ஜெ'வின் உடைத்தேர்வுகள் அவரது ஆழ்மனதின் வெளிப்பாடா ? திசம்பர் 09, 2016 நாளிட்ட  தினமணியில் கார்த்திகா வாசுதேவன் ஒரு கட்டுரை எழுதினார். ஜெயலலிதா உடை தேர்விற்கும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அக்கட்டுரை. ' நேற்று என் வீட்டருகே இருந்த குடியிருப்பு பெண்களுக்கிடையே நிகழ்ந்த சம்பாசனையே இக்கட்டுரையை எழுதத் தூண்டியது' என்கிறார் அவர்.

சம் என்கிற உரிச்சொல்லுடன் பாசனை  என்கிற  நிலைச்சொல் இணைந்து  உருவாகும் சொல்லாக சம்பாசனை இருக்கிறது. சம் என்பதற்கு கலப்பு , கூட்டு , கூட,  பிறப்பு எனப் பொருளிருக்கிறது. இரு வேறின இனங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை மநு சாஸ்திரம் சம்கரர் என்கிற சாதியின் கீழ் வகைப்படுத்தியிருக்கிறது என்பது இது தொடர்பான கூடுதல் செய்தி .

பாசனை குறித்து தேடுகையில் சோலை சுந்தரபெருமாள் எழுதிய பெருந்திணை நாவலில் ' இவரோட யோசனை பாசனை இல்லாமல் வேலை செய்தது இல்லை ' என்பதாக ஓரிடம் வருகிறது.

உஜ்ஜைன் நாட்டு மன்னர் சூத்திரகன், வடமொழியில் ' மிருச்சகடிகம்' என்றொரு நாடக நூலை இயற்றினார். அதை பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் ' மண்ணியல் சிறுதேர் ' என தமிழில் மொழிப்பெயர்த்தார். இதை 'மண்ணியல் சிறு தேர் - ஒரு மதிப்பீடு' என மீரா அவர்கள் இந்நூலினை மதிப்பாய்வு செய்தார். இந்த ஆய்வு நூலுக்கு முன்னுரை எழுதிய பேரா.இராமாநுசன் ' இந்நூலுக்கு பாசனை ஆசானாக்குவது தகுமா? '  என்கிற கேள்விக்கு விடை தேடுவதாக மீராவின் ஆய்வு இருக்கிறது என்கிறார். அதாவது 'இந்நாடகத்தின்  உரையாடலே வாசகனுக்கான ஆசான்'.

இதைக்கொண்டு பார்க்கையில்  சம் + பாசனை என்பதை  கலந்துரையாடுதல் எனப் பொருள் கொள்வோமே

- தொடரும்...


-18.11.2018 தீக்கதிரில்...




புதிய சொல் , பழைய தேடல் - 15

வகிபாகம்

- அண்டனூர் சுரா

'தமிழகத்தில் புரத வண்ணார்கள்' - த.தனஞ்செயன் எழுதிய ஒர் ஆய்வு நூல். திருநெல்வேலி , தாமிரபரணி பகுதிகளில் வண்ணார் குடும்பங்கள்  ஓர் ஊராக வாழும் நிலையைக் கொண்டிருக்க  சோழர் ஆட்சிப் பகுதிகளான திருச்சி, தஞ்சை பகுதிகளில்  ஊருக்கு ஒரு குடும்பம் என்கிற அளவில் தனித்த குடும்பமாக வசித்து வருகிறார்கள். பிற்கால சோழர் ஆட்சிக்  (கி.பி 6 - 12 ) காலத்திற்கு
முன்பு வரை எந்தவொரு குடித்தொழிலையும் குலத்தொழிலாக  பார்க்கும் போக்கு இருந்திருக்கவில்லை. இவர்களே, மநு தர்மத்தையும் வருணாசிரமத்தையும் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புப்படுத்தி ;  செய்யும் தொழிலைக் கொண்டு சாதி,  சாதிக்குள் சாதி ; சாதி சார்ந்த குடிகளை வளர்த்தெடுக்கச் செய்தார்கள் என்கிறது இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர்  பேரா.வீ.அரசு. ' தமிழ்ச்சமூக வரலாறு எழுதியலில் ' குடித்தொழில் பெறும் வகிபாகம் ' .

அக்கினிக்குஞ்சு இதழில் ஜெயராமசர்மா ' ஔவையார் தொடக்கம் அன்னை தெரசா வரை ' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இப்படியாக ஓரிடம் " சமூகத்தில் ஆணின் வகிபாகமும் பெண்ணின் வகிபாகமும் காலத்துக்குக்காலம் மாறுபட்டு வருகிறது ".

இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய  நாளிதழ்  'வீரகேசரி'. சமீபத்தில் அந்நாளிதழ் 89 ஆவது வயதைத் தொட்டிருந்தது. இதை நினைவு கூறும் பொருட்டு லெ.முருகபூபதி பதிவுகள் என்கிற இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார் ' கலை இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் '. இப்படியாக ஈழத்தமிழ் சார்ந்த எழுத்தாளர்களிடமும் புலம்பெயர் பத்திரிகைகளிலும் இச்சொல் அதிகமாக புழக்கத்திலிருந்து வருவதைக் கவனிக்க முடிகிறது. அது என்னதாம் 'வகிபாகம்' ?

பேரா.கார்த்திகேசு சிவதம்பி -  தமிழ்நல்லுலகு அறிந்த அறிஞர்.  இவர் பத்திரிகைத் துறையில் பயன்பாட்டிலிருக்கும்
பொருத்தமற்ற சில சொற்களைத் திருத்தி பயன்பாட்டிற்கேற்ப புதிய சொற்களாகப் பயன்படுத்தத் துவங்கினார். அதன்படி  உதவி ஆசிரியர் என்பதை செம்மைப்படுத்துனர் என மாற்றினார். பிரதம ஆசிரியர் எழுதும் அல்லது தரும் கட்டுரைகளைத் திருத்தம் செய்து செம்மைப்படுத்துவதால் அதற்கு அப்படியொரு பெயர். அதேப்போன்று காப்பி எடிட்டிங் என்பதை செம்மைப்படுத்துதல் என்றார். அந்த வரிசையில் அவர் பயன்படுத்திய  ஒரு சொல்தான் வகிபாகம்.

கொழும்பு இதழியல் கல்லூரி - ஊடகத்துறை தொடர்பான ஒரு நூலுக்கு அவர் எழுதிய ஒர் அணிந்துரையில் 'ஏதேனும் ஒரு துறையில் யாரேனும் ஒருவர் முக்கிய பங்களிப்பு செய்தால் அல்லது வரலாற்று ரீதியாக ஒன்றை குறிப்பிடுவதாக இருந்தால்  அதனை வகிபாகம் என்று கூறுவது  பொருத்தமாக இருக்கும் ' என்றார்.

இச்சொல் குறித்து தேடுகையில் தற்கால தமிழ் அகராதிகளும், ஈழத்தமிழ் அகராதிகளும் இச்சொல்லை சொற்களஞ்சியத்தில் சேர்க்கவில்லை எனத் தெரியவருகிறது.   ஆனால் ஆங்கில அகராதி இச்சொல்லைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. Role allocation - வகிபாகம் ஒதுக்குதல்
Role of environment - சூழல் வகிபாகம்...இப்படியாக.
இதிலிருந்து வகிபாகம் என்பதை இப்படியாகப் பொருள் கொள்ளலாம். ஒரு பாத்திரமாக பங்கு வகித்தல்.


புதிய சொல்- பழைய தேடல் -14
ஏகன்

சிறுபான்மையினரின் பாதுகாவலர்களே பெரும்பான்மையினர் - முனைவர் செபாஸ்டியன் பால் அக்டோபர் -10, தீக்கதிரில்  எழுதிய கட்டுரை இது.  மொழிபெயர்ப்பு கே.சதாசிவன்.

‘ஒரு மனிதன் ஏகனாக இருப்பது நன்றல்ல. அவனுக்குப் பொருத்தமான இணையை நான் கொடுப்பேன் ’ (ஆதியாகமம்) வாசகத்தோடு கட்டுரை துவங்குகிறது. குற்றத்தண்டனைச் சட்டம் 377 பற்றிய இக்கட்டுரையில் ‘ தன்பாலின உறவு அறநெறி அடிப்படையில் சரியானதோ, ஏற்றுக்கொள்ளத் தகுந்ததாகவோ உள்ளதல்ல’ என்று கேரளா கத்தோலிக்க ஆயர்கள் சபையும் ;அதையொற்றியே ஜமா - அத்தே - இஸ்லாமி அமைப்பும் கருத்துத்தெரிவிக்கின்றன. பிரான்சிசின் திருச்சபை ‘ பாலியல் உறவுகளில் உள்ள மாறுபட்ட தன்மைகளை பாவமாகக் கருதவில்லை' என்றும் இதுகுறித்த மற்றொரு கேள்விக்கு ‘ அவர்களைத் தண்டிக்க நான் யார்?’ என்கிறது. தன்பாலின உறவு செல்லும் என ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு சிறுபான்மையினருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்பட வேண்டும். தன்பாலின உறவு குறித்து கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவில்லை என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

 சரி, ஏகன் என்பது என்ன...?

சிவபுராணம் ‘ ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க’ என்கிறது.
ஏகன் வருவானா? ஞானம் சஞ்சிகையில்  எஸ்.முத்துமீரான்  எழுதிய  ஒரு சிறுகதை. 

'பெர்டிடுர்கே ( FERDYDURKE )' என்றொரு நாவல். போலந்து நாட்டு 'விடோல்டு கோம்ப்ரோவிச் ( Witold Gombroqicz )' 1937 ஆம் ஆண்டு எழுதியது. இந்நாவலின் படி, 30 வயது வாலிபன் திடீரென பள்ளி வயது மாணவனாக உருவம் மாற பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அங்கு அவன் வயதுடைய மாணவர்களிடம் படும்பாடுதான் கதை. இக்கதையை தழுவி ஹாலிவுட் படம் எடுத்தார்கள். படத்தின் பெயர் 'நெவர் பீன் கிஸ்டு'. வாலிப பெண் மாணவப் பருவமாக மாறி  பத்திரிகை பெண்ணாக பள்ளிக்குள் நுழைகிறாள்.  இதே கதையை 'மெயின் ஹீன் னா' என்று ஷாருகானை வைத்து இந்தியில் எடுத்தார்கள். தமிழிலும் எடுக்கப்பட்டது. கதாநாயகன் அஜித். படத்தின் பெயர் ஏகன்.

அன்றைய எகிப்திய நாட்டில் ஏகநாதன் (Akhenaton ) என்றொரு மன்னன் இருந்தான். அவனது ஒரே கடவுள் ஏதேன். இச்சொல்தான் இவ்வாறாக மறுவுகிறது ஏதன் - ஏகன் - ஏக் - ஏகம் - ஒரு - ஒருமை - ஒரே இறைவன். தமிழும் இத்தாலியும் - மத வழிபாடுகளில் தொடர்புடைய சொற்கள் என சொற்களை ஆய்வு செய்திருக்கும் தமிழ்செல்வா, ஏகன் என்கிற சொல்லின் மூலம் தமிழின் 'ஏகத்துவம்' என்கிறார்.

இதன் தொடர்புடைய சொற்களாக ஏகம், ஏகாதிபதி, ஏகாதி , ஏகபத்தினிவிரதம், ஏகபாதம் ...என நிறைய சொல்லலாம்.

ஏகன் சொல் குறித்து தேடுகையில் அபிதான சிந்தாமணி இரேயன் குமரன் என்கிறது. தமிழ் அகராதிகள் -  ஒருவன், இறைவன், இணையற்றவன்,  சிறப்புடையவன்,..என்கின்றன.

கட்டுரையின் துவக்க வரியிலிருந்து அதன் பொருளைத் தேடுகையில் ஏகன் என்பதை 'தனி ஒருவன்' எனப் பொருள் கொள்ளலாம்.
-நவம்பர் 04, 2018








புதிய சொல் - பழைய தேடல் 13

பிலாக்கணம்

கு. சின்னப்ப பாரதி எழுதிய நாவல்களில் 'தாகம்' மிக முக்கியமானது. நாவலின் மைய பாத்திரம் மாரப்பன். இவர் வளர்க்கும் எருமை , கன்று ஈனப்போவது தெரிந்து நடு சாமத்தில் கை பக்குவ கிழவரை அழைத்து வருகிறார். எருமை கன்று ஈனும் வலியை நாவலாசிரியர் அத்தனை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இதற்கிடையில் நடு சாமத்தின் காட்சி இவ்வாறு விரியும். ' ஊரே உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தது. எங்கும் நிசப்தம். இடையிடையே மனிதர்களின் இருமல் சத்தமும் மாடுகளின் அசை போடும் அரவமும், எதையாவது கண்டுவிட்டுக் குரைக்கும் நாய்களின் குரைப்பும், வறண்ட மண்ணில் குழி தோண்டிப் படுத்திருக்கும் தவளைகளின் செவியைப் பிளக்கும் பிலாக்கணமும் கேட்டுக்கொண்டிருந்தன'.

அது என்னது பிலாக்கணம்?

ரவிச்சந்திரன் என்கிற கவிஞர் 'அசல் தேடும் நகலின் பிலாக்கணம்' என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் அவர் அடிக்கடி ரோம் நகரிலுள்ள மரியா டெஜிலி ஆஞ்சியோலி என்கிற தேவாலயத்திற்கு  சென்று வருபவராக இருந்தார். காரணம் அங்கு அவரது ஆழ்மனதை சாந்தப்படுத்தும் ஓவியமொன்று இருந்தது. இயேசுவின் பிலாக்கணம் என்கிற ஓவியம் அது. இதைத் தீட்டியவர்  பெர்னார்டினோவ் லியூனி. இதுக்குறித்து பேரா.கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஒரு கட்டுரை பேசுகிறது.

எஸ்.பொன்னுத்துரை 'குழி ' என்கிற சிறுகதையை மனிதன் பிலாக்கணம் வைத்துக்கொண்டே வாழ்கிறான் என முடித்திருப்பார்.
யுவன் சந்திரசேகரின் ஒரு சிறுகதை 'முடிவற்று நீளும் கோடை'. இக்கதையில்  சமகால வயதுடைய இரு வயோதீக பாடகர்களின்  கதையுடன்;  கதைசொல்லி அவர் ஊரில் சிறந்த பாடகராக இருக்கும் பானு அக்காள் என்கிற பாத்திரத்தின் குரல் வளத்தைப் பேசியிருப்பார். துக்கவீட்டில்  பானு இராமாயணம் பாடுகையில் ' அந்த தெய்வீகமான பிலாக்கணம் எப்படா முடியும் எனக்காத்திருப்போம். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பானு அக்காள் இறந்து போக அந்த கானமும் இறந்து போனது ' என்பதாக அக்கதை நீளும்.

 புதுமைப்பித்தன் ' எப்போதும் முடிவிலே இன்பம் ' என்கிற சிறுகதையில் ' ஓய், என் வீட்டு வாசலில் உட்கார்ந்து பிலாக்கணம் வைக்காதேயும் ' என்பதாக ஓரிடம் வரும். விலங்குகள் பேசிக்கொள்ளும் கதை இது.

பேரா.மு.இளங்கோவன் 'தமிழில் ஒப்பாரி இலக்கியம் ' என்கிற ஆய்வு நூல் பிலாக்கணம் என்பது பிணக்கானம் என்பதன் திரிபு என்கிறார்.
'கி.வ.ஜா பதில்கள்  ' என்கிற நூலில் இப்படியாக  ஒரு கேள்வி - பதில் . பிலாக்கணம் எப்படி வந்தது?.  அதற்கான பதில், பிணக்கானம் என்பதே பிலாக்கணம் என்றானது.

இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் நர்மதா அகராதி துக்க வீட்டில் பெண்கள் பாடும் பாடல் என்கிறது. ஆங்கிலத்தில் lementation.
நாம்  ஒப்பாரி எனப் பொருள் கொள்ளலாம்.

தீக்கதிர் - வண்ணக்கதிர் அக்டோ28, 2018






புதிய சொல் , பழைய தேடல் - 12

தினவு

அண்டனூர் சுரா

வேள்வித் தீ,  எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இந்நாவல் , சௌராஷ்டிரா மக்களின் வாழ்க்கை பின்னணி,நெசவு தொழிலின் நலிவு குறித்து பேசியிருக்கிறது. இந்நாவலின் நாயகன் கண்ணன் நெசவு தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர உழைக்கிறவன். பணமே வாழ்க்கையெனக் கொண்ட உறவுகள், பணத்திற்காக அல்லாடும் மனைவி கௌசலை, பணம் உதவி செய்ய முன்வரும் ஹேமாவுடன் நெருங்கி  மனைவியிடமிருந்து விலகும் கண்ணன்,...என நெசவுத்தொழில் சிக்கலுடன் உறவுச் சிக்கலையும் இந்நாவல் பேசியிருக்கிறது.

நெசவு தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் குதிக்கிறார்கள். இரு தொழிலாளர்கள் பேசிக் கொள்ளும்படியாக ஓரிடம் வருகிறது. ' இப்படி எல்லாரும் பொறுப்பில்லாமப் பேசிதான், காளை மாட்டுக்குத் தினவு கொடுத்து சண்டித்தனம் செய்யுது. சாட்டையைச் சொடுக்கி, ரெண்டு வச்சாத்தான், காளை மாட்டுக்கு ரோசம் பிறக்கும்!'

இவ்விடத்தில் காளை மாடு என்பது  ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் என்பதைக் கொண்டு இந்நாவலின் காலத்தை நாம் கணித்துக்கொள்ளலாம். சரி, அது என்னதாம் தினவு ?

வயிறு என்கிற சிறுகதையில் ஹரன் பிரசன்னா இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ' மெல்ல எடுப்பான அவளது பல் மறைய அவள் உடலின் தினவு தெரிய ஆரம்பித்தது'. அப்படியென்றால் தினவு என்பது உடலுடன் தொடர்புடைய ஒரு சொல் என்பதாக ஒரு புரிதலுக்கு வரலாம்.

உயிர்த்தலம் என்றொரு சிறுகதை. ஆபிதீன் எழுதியது. அதில் இப்படியாக  ஒரு வரி ' பசி போன்றதொரு தினவு ' இங்கு தினவு என்பது அரிப்பைக் குறிக்கிறது . நெஞ்சுக்கொம்பு என்கிற கதையில் ம.நவீன் இதே சொல்லை  பயன்படுத்தியிருக்கிறார்.

இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் திவான் பஹதூர் ச.பவானந்தம் பிள்ளை தொகுத்த தற்கால தமிழ்ச்சொல் அகராதி , தினவு என்பதற்கு  சொறி என்கிற  ஒற்றைப் பொருளை மட்டுமே தந்துள்ளது.  மேலும் சில அகராதிகள் அரிப்பு, அதீத உணர்ச்சி என்பதாக பொருள் தந்துள்ளன.

'சொறிந்து தீர்வுறு தினவினர்' என்கிறது கம்பராமாயணம்.

வாசந்தி ,  இந்தியா டுடே  இதழில் தினவு என்றொரு சிறுகதை எழுதினார். அக்கதை அன்றைக்கு பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருந்தது.  இக்கதை அன்றைய உத்திரபிரதேசம் மாநிலத்தின்  முதலமைச்சராக இருந்த மாயாவதியை முக்கிய பாத்திரமாக வைத்து பேசியிருந்தது.  ' அவர் குருட்டு அதிர்ஷ்டத்தில் பதவிக்கு வந்தவரென்றும் மேலும்.....' என்பதாக கதை  விரிய, இக்கதை அவரது புகழுக்கு களங்கத்தை விளைவிக்கிறதென எதிர்ப்புகள் கிளம்ப, வேறு வழியில்லாமல் எழுத்தாளரும் இதழாசிரியரும் அதற்காக வருத்தம் தெரிவித்தார்கள்.

' என்னைக் கொன்று விட்டார்கள்' என்கிற சிறுகதையில் கோ.புண்ணியவான் ' ஆண் தினவு நொறுங்கிவிட்டது ' என்பதாக ஒரு வரியைப் பயன்படுத்துகிறார்.

க்ரியா தற்கால தமிழ் அகராதி  தினவு என்கிற சொல்லுக்கு மூன்று விதமான பொருளைத் தந்துள்ளன. 1. சொறி , அரிப்பு 2. தீவிர உந்துதல் 3. திமிர் .

வேள்வித்தீ நாவலில் இடம்பெற்ற தினவு என்கிற சொல்லுக்கு திமிர் எனப் பொருள் கொள்ளலாமே...

- தீக்கதிர் வண்ணக்கதிர் ( அக்டோ,20 -2018)



புதிய சொல் , பழைய தேடல்  - 11

சண்டமாருதம்

- அண்டனூர் சுரா

எஸ்.ராமகிருஷ்ணனின் ' முடிவற்ற சாலை' தொடரில் காந்தியெனும் நெருப்பு என்கிற தலைப்பில் காந்தியின் சமாதி குறித்தக் கட்டுரை வாசித்தேன்.  ராஜ்கோட்டிலுள்ள காந்தி சமாதி குறித்து பேசும் அவர் , காந்தியின் குரல் குறித்தும் எழுதியிருந்தார். அவரது உரைகள் இணையத்தில் கேட்கக் கிடைக்கின்றன. அவரது குரல் மென்மையானது. சண்டமாருதம் போல மேடையில் அவர் பேசவில்லை. ஒரு தந்தை மகனிடம் பேசுவதைப்போல, ஒரு தாய் பிள்ளைகளிடம் பேசுவது போல பேசுகிறார்....

அது என்ன சண்டமாருதம் ?

தமிழின் முதல் சிறுகதை என சொல்லக்கூடிய குளத்தங்கரை அரசமரம் ( வ.வே.சு  ஐயர் ) கதையில் ஓரிடம் 'ஆகாயத்தில் சந்திரன்,நட்சத்திரங்கள் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் அந்தகாரம். பூமியெங்கும் கிடுகிடு என்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும் போலே இடி இடிக்க, காற்று ஒன்று சண்டமாருதம் போல அடித்துக்கொண்டிருந்தது'.

சேலம் வேலுச்சாமி கவிராயர் ' சண்டமாருதம் ' என்கிற பெயரில் ஒரு இதழ் நடத்தியிருக்கிறார். அதே பெயரில் மற்றொரு பத்திரிகை துவக்கப்பட்டச் செய்தியை  04.01.1931 தேதியிட்ட குடிஅரசு இதழ்  அ.பொன்னம்பலனார் துவங்கும் சண்டமாருதம் வார பத்திரிகை என விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. இதே பெயரில் சுயமரியாதைக்காரர்களுக்கான தினசரி இதழ் என்கிற அடைமொழியுடன் சொ.முருகப்பா ஒரு இதழ் துவங்கியிருக்கிறார். இந்த இதழில்தான் தேசிக விநாயகம் பிள்ளையின் முதல் கவிதை வெளியானதாக ஒரு குறிப்பு இருக்கிறது. 1940 களில் திரை ஒளி என்கிற பத்திரிகை திரைத்துறை சார்ந்த செய்தியைப் பேசுவதற்கென்று துவக்கப்பட்டது. இதற்கு போட்டியாக மாடர்ன் தியேட்டர்சார் சண்டமாருதம் என்கிற பெயரில் ஒரு பத்திரிகை துவங்க , அதன் ஆசிரியராக கண்ணதாசன்  பொறுப்பேற்றிருக்கிறார். ஆக , சண்டமாருதம் என்கிற சொல் பத்திரிகைத்துறையில் அதிகம் புழங்கிய பெயராக இருந்திருக்கிறது என்பது உண்மை.

 புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை 'பயம்'. ஒரு நள்ளிரவில் ஒரு கிழவர் ஒருவனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார்.  ஒவ்வொரு வருடமும் அந்த நாள் வருகையில் கொலை செய்யப்பட்டவன் வருகிறானென துப்பாக்கி எடுத்து சுடும் மனப் பிராந்திக்கு ஆட்பட்டவனின் கதை இது. ' கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்து உறங்குகிறது. அதற்கு இந்தப் பயம் தெரியுமா?' வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சட சடா' என்று ஒரு இடி முழக்கம்...

இதலிருந்து சண்டமாருதம் என்பது வானிலையுடன் தொடர்புடைய சொல் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

இச்சொல் குறித்துத் தேடுகையில் சண்டம் + மாருதம் எனப் பிரித்து பார்க்க வேண்டியிருக்கிறது. சண்டம் என்பது கொடுமை அல்லது விரைவு என்றும் மாருதம் என்பது காற்று அல்லது வாயு எனவும் பொருள் கொள்ள வேண்டும். இதிலிருந்து பார்க்கையில் சண்டமாருதம் என்பது சூறாவளி, பெருங்காற்று எனலாம். நாம்  ஊழிக்காற்று எனப் பொருள் கொள்வோமே...

தீக்கதிர் வண்ணக்கதிர் அக்டோ 13, 2018



புதிய சொல் ,பழைய தேடல் - 10

துவாய்

அண்டனூர் சுரா

தளம் ஆகஸ்ட் இதழில் தவிப்பு என்றொரு சிறுகதை இலங்கை எழுத்தாளர் ச. இராகவன் எழுதியது.

மலர்விழி குழந்தையாக இருக்கையில் சிங்கள ஆர்மிக்காரர்கள் தந்தையைக் கொன்று விடுகிறார்கள். தாய், தம்பியுடன் வாழும் மலர்விழி தாயின் ஆசைப்படி மேற்படிப்பு பயிலாமல் இயக்கத்தில் சேர்கிறாள். இயக்கத்திலிருந்த மாறனை கயல்விழி காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள். மலர்விழி ஒரு குழந்தைக்கு தாயாகையில் இறுதி கட்டப் போர் மூழ்கிறது. அவளுக்கு இயக்கத்திடமிருந்து அழைப்பு வருகிறது. அவளுக்கு பதில் அவளுடைய கணவன் போருக்குச் செல்கிறான். அவள் வசிக்கும் பகுதி ஆர்மி வசம் வர அவள் குழந்தை, தாயுடன் இடம் பெயர்கிறாள். அவள் கண் முன்னாலேயே தாயின் தலை துண்டிக்கப்படுகிறது. நிலை குலையும் மலர்விழி குழந்தையைத் துவாயால் போர்த்திக்கொண்டு பாதுகாப்புத் தேடி அலைகிறாள். விடுதலைப்புலி இயக்கத்தில் ஒரு நாளேனும் இயங்கியவர்கள் சோதனை சாவடியில் பெயர் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு சிங்கள இராணுவம் அறிவிக்கிறது. அவள் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு பெயரைப் பதிவு செய்கிறாள். அதற்கு பிறகு அவள் அதிலிருந்து வெளியேற முடியவில்லை.

ஈழத் தமிழ் மொழியில் எழுதப்பட்ட  இக்கதையில் 'துவாய்' என்கிற சொல் வாசிக்கப் புதிதாக இருந்தது. புலம்பெயர் எழுத்தாளர் தாமரைச்செல்வி 'யாரோடு நோவோம்? ' என்கிற சிறுகதையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
'துவாயால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்'. அகரமுதல்வன்  எழுதிய கோமா சக்தி என்கிற சிறுகதையில் ' ரோஸ் நிற துவாயில் ' என்பதாக ஓரிடம் வருகிறது. ஜீவகுமாரன், நவீன் போன்றவர்களின் கதைகளில் இச்சொல்லை நிறைய இடங்களில் காணமுடிகிறது.

தமிழ் இலக்கணத்தில் , சீர் மோனை வகைகளில் கீழ்க்கதுவாய் , மேற்கதுவாய் என இரு வகைகள் இருக்கின்றன. வியட்நாம் நாட்டில் பின்ஹ் துவாய் என்றொரு மாகாணம் இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு நுகே கோட நகரில் 'துவாய் மட்டும் அணிந்து பேருந்தில் ஏறிய வாலிபன்' என்கிற செய்தி பரபரப்பிற்கு உள்ளானது. அது என்னதாம் துவாய்?

துண்டு , டவல்  இரு சொற்களின் சேர்க்கை துவால் - துவாய் என மறுவி வந்திருப்பதாக மயூர்நாதன் ஆய்வு  குறிப்பிடுகிறது. மேலும் அவர், கொழும்பில் வாழும் தமிழர்கள் பகுதியில் துண்டு என்றால்  பெண்களை கேலி செய்யும் சொல்லாக இருக்கிறது. ஆகவே அவர்கள் முகம் துடைக்கும் துண்டை துவாய் எனப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார். துண்டு , துவாய் இரண்டும் ஒன்றுதான் என்றாலும் இவ்விரு சொற்களையும் பயன்பாட்டில் வைத்திருப்பவர்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்க அவர்கள் தேடுவது துவாயைத் தான்.

இதிலிருந்து நாமொரு முடிவுக்கு வர முடியும், துவாய் என்பது பெரிய துண்டு எனலாமே!

அக்டோ,7- 2018




புதிய சொல் - பழைய தேடல் - 9

வியர்த்தம்

- அண்டனூர் சுரா

தூக்கு மேடைக்குறிப்பு ,  ஜூலியஸ் பூசிக் ஆங்கில மொழியில் எழுதி தமிழில் எம்.இஸ்மத் பாஷா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல். கம்யூனிஸ்ட்டுகள் எனத் தெரிந்தாலே  அவர்களை கைது செய்து விஷவாயு கொடுத்தும், துப்பாக்கியால் சுட்டும் அழித்தொழிப்பு செய்கிறது ஹிட்லரின்  நாஜிக் படை. சிலரை விசாரணைக்காக அடைத்து வைக்கிறது. அப்படியாக அடைத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஜூலியஸ் பூசிக். அவர் சிறையிலிருக்கையில் இரகசியமாக எழுதிய குறிப்புகளின்  தொகுப்பு இந்நூல்.

நாஜிக் படையினர் , ஜூலியஸ் பூசிக்கை  விசாரிக்கிறார்கள். ' உன் முயற்சியில் நீ தோற்றுவிட்டாய்'
' நான் ஒருவன் மட்டுமே தோற்றிருக்கிறேன் '
'பொதுவுடைமை வெற்றியில் இன்னுமா நம்பிக்கை வைத்திருக்கிறாய்?'
' நிச்சயமாக'
' உன் திட்டத்தில் மண் விழுந்து உன் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகி விட்டன'

இப்படியாக நீள்கிறது விசாரணை.அது என்னதாம் 'வியர்த்தம்' ?

புதுமைப்பித்தன், தான் மொழிபெயர்த்த 57 சிறுகதைகள் தொகுப்பில் மார்க்ஹீம் கதையில் இச்சொல்லைப் பயன்படுத்திருக்கிறார்.

தமிழ்நேசன் , வியர்த்தம் என்றொரு கதை எழுதியிருக்கிறார்.  பிரபல எழுத்தாளர் தேசிகனும் வளரும்  எழுத்தாளர் சிட்டியும் கதாப்பாத்திரங்களாக இருந்து பேசும் கதை இது. இக்கதையில் தமிழின் முதல் நாவல் எது என்பது குறித்து விவாதம் நடக்கிறது. பிரதாப முதலியார் சரித்திரமே முதல் நாவல் என்று தேசிகன் சொல்ல சிட்டி அதை மறுக்கிறான். லண்டன் லைப்ரரியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சேஷய்யங்கார் எழுதிய அதியூர் அவதானி சரிதமே முதல் நாவல் என்கிறான். கதையின்படி, சிட்டி தொடர்ந்து  எழுதுபவனாக இருக்கிறான்.  தேசிகன் அவனை வழி நடத்துகிறார். ஒரு கட்டத்தில் மூச்சு மூச்சென எழுதுவதெல்லாம் வியர்த்தம் என்கிற முடிவிற்கு வருகிறான் சிட்டி. அவனை அத்தகைய அதிருப்தியில் மீட்டெடுப்பதே பிற்பகுதி கதை.

மனோன்மணீயம் நாடகத்தில் இச்சொல், ' முடிவிலாப் புரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் ஒருத்தியே யென்சொல வியர்த்தம் ஆக்குவேன் ' எனப் பாடப்பட்டுள்ளது.

 தமிழின் முதல் நாவல் எனச் சொல்லப்படுகின்ற பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில், இத்தனை ஸ்திரீகளுடையவும், பாலகர்களுடையவும் பிராத்தனை வியர்த்தம் ஆகாதென்று நினைக்கிறேன்.

'பாற்கடல்' பாடல் திரட்டில் ஒரு பாடல் இப்படியாக இருக்கிறது.

' பேச்சின் வியர்த்தம் அறிந்தபின் பேச்சு கீச் கீச்சுதான் '

திவான் பஹதூர் ச. பவானந்தம்பிள்ளை தொகுத்த
தற்கால தமிழ்ச்சொல்லகராதியில்  இச்சொல்லுக்கான பொருள் ' பயனின்மை ' என்கிறது.நாம் ' வீண் 'என்று பொருள் கொள்ளலாம்.

      - அக்டோ,1 - 2018
                                                    


புதிய சொல் பழைய தேடல் - 8

ஐவரி

- அண்டனூர் சுரா

நடிகர் சிவக்குமார் ஆனந்த விகடனில் 'கருணாநிதி கும்பிட்ட கடவுள் ' என்கிற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் கலைஞர் உடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அதிலொரு அனுபவம் : சிவக்குமார், தான் எழுதித் தொகுத்த ' ராஜபாட்டை' என்கிற கட்டுரை நூலுக்கு   அணிந்துரை எழுதித் தர வேண்டி கலைஞரிடம் கொடுத்திருக்கிறார்.  அதை வாங்கி வைத்துகொண்ட கலைஞர் இரண்டு நாட்கள் கழித்து போன் செய்து வீட்டுக்கு வரச்சொல்லி அவர் எழுதிய அணிந்துரையை சிவக்குமாரிடம் கொடுத்திருக்கிறார்.  அவர் எழுதிய அணிந்துரை இவ்வாறு இருந்தது. ' தம்பி சிவக்குமார், இந்த ' ராஜபாட்டை 'நூலைக்கொடுத்து ஒரு வரி அணிந்துரை எழுதித் தரச்சொன்னார். இதிலுள்ள அத்தனை வரிகளும் ஐவரி '.

அது என்னதாம் ' ஐவரி '?

 ஆப்பிரிக்க கண்டத்தில் ஐவரி கோஸ்ட் என்றொரு நாடு இருக்கிறது. இந்நாடு சாக்லெட்டின் தாயகம் என அழைக்கப்படுகிறது. இந்நாடு பலரால் ஐவரி என்றே அழைக்கப்படுகிறது. சிவக்குமாரின் கட்டுரைகள் சாக்லெட் அளவிற்கு தித்திப்பாக இருக்கிறது என அந்த அணிந்துரையின் வாயிலாக சொல்ல வருகிறாரா கலைஞர்?

மனு.எஸ்.பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் ஐவரி த்ரோன்  என்றொரு சுயசரிதை நூல் எழுதினார். அந்நூலுக்குக்கூட 2017 ஆம் ஆண்டு யுவ புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இச்செய்தி ஐவரியுடன் தொடர்புடைய ஒன்று அவ்வளவே

 கலைஞர் சுட்டிக்காட்டிக்கும் ஐவரி பெயர்ச்சொல் தொடர்பானது அல்ல. இலக்க வடிவத்துடன் தொடர்புடைய காரணப் பெயரினாலான ஒன்று, அப்படியாகவே அவரது அணிந்துரையிலிருந்து  புரிந்துகொள்ள முடிகிறது.

திரைப்பட பாடல் ஆசிரியர் மதன்கார்க்கி ஏப்ரல் 22, காமதேனு இதழில் இதன் தொடர்பாக ஒரு பத்தி எழுதியிருக்கிறார்.வெண்பா, வஞ்சிப்பா, ஹைக்கூ வடிவம் போல ஐந்து வரிகளைக் கொண்ட ஒரு புதுக்கவிதை ஐவரி. லிமரிக்கூ என்றொரு கவி வடிவமுண்டு. அதே போன்ற வரி வடிவம்தான் ஐவரி. அதாவது ஐந்து வரிகள் கொண்ட ஒரு கவிதையில் முதல் இரண்டு வரிகள் ஒத்த அசை அமைப்பைக் கொண்டும் மூன்றாம்,நான்காம் வரிகள் ஒத்த அசை அமைப்பைக் கொண்டும் ஐந்தாம் வரி இரண்டு சொற்களில் முடிந்தால் அக்கவிதை ஐவரி என்பதாக கார்க்கி வரையறை செய்துள்ளார்.

இந்த வரையறையை வைத்துகொண்டு தேடுகையில் தேவிவேலு என்கிற கவிஞர் எழுதிய கவிதை ஐவரி இலக்கணத்துடன்  பொருந்தி போயிருந்தது

மயிலாட மேகங்கள் இருக்கு
உறவாட மோகங்கள் இருக்கு
சொன்னாலென்ன நேரேதான்
வந்தாலென்ன கூடத்தான்
அழகே அழகே


ஐவரி என்கிற கவி வடிவம் இன்னும் பெயரால் பெரிய அளவில் புலக்கத்திற்கு வரவில்லை. ஆயினும் கலைஞர் இருபது வருடங்களுக்கு முன்பே அவர் எழுதிய அணிந்துரையில் இச்சொல்லை கையாண்டிருப்பது வியப்பளிக்கவே செய்கிறது.

ஐவரி என்பது ஐந்து வரி இலக்கணக் கவிதை எனலாமே!

தீக்கதிர் - வண்ணக்கதிர் செப்டமபர் 23- 2018


புதிய சொல் - பழைய தேடல் -7

'ஆகிருதி'
- அண்டனூர் சுரா

எழுத்தாளர் பிரபஞ்சன் , உடல் நலிந்து புதுச்சேரி மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க கவிஞர் லீனா மணிமேகலை சென்றிருந்தார்.  அப்பொழுது பிரபஞ்சன் நண்பர்கள் குறித்து விசாரித்துவிட்டு சொன்னார் ' ஒருத்தனுக்கு வாழும்போது ஆகிருதி சிறுத்துப்போறது துயரம் மணி' . மணிமேகலை கண்ணீரை அடக்கிக்கொண்டு சொன்னார் ' உங்களுக்கென்ன, அதே கம்பீரமும் மிடுக்குமாத்தான் இருக்கிறீங்க'

பிரபஞ்சன் அவரது எழுத்தைப் போலவே அத்தனை கம்பீரமானவர். அவர் தமிழுக்காக இன்னும் ஒரு நூற்றாண்டு வாழத்தான் வேண்டும்.

அது என்னதாம் ஆகிருதி?

மாலன் அடிமைகள் சிறுகதையில் இசசொல்லை பயன்படுத்தியிருக்கிறார். ' அறைக்குள் நுழைந்த போது அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் - முன்பின் அறிந்திராத நபர்கள். நான்கு பேர். நடுத்தர வயது. நல்ல ஆகிருதி'

க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி ஆகிருதி என்பது ஆண்களுடன் தொடர்புடைய சொல் என்கிறது.  ஆனால் சொல்லை  பெண் பாலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்  ' ஆத்தா' சிறுகதையில் ஜி.கோமளா .  கண்களை மூடி சம்மணமிட்டு குலவை கொட்டிக்கொண்டிருந்தாள் கூரியாயி. ஆறடிக்கு அரையடி குறைவு உயரம். அதற்கேற்ற சதைப்பிடிப்பு. ஓங்கு தாங்கான ஆகிருதி.

மதுரைத் தமிழ் பேரகராதி அடிதோறும் இருபத்திரண்டு அசை கொண்டு நான்கடியாய் ஒற்றற்ற சந்தமாய் முடியும் பாட்டை ஆகிருதி என வகைப்படுத்தியுள்ளது கூடுதல் தகவல்.

பிரபஞ்சன் பயன்படுத்திய ஆகிருதி என்பது உடல் குறித்தது.  இதை ஆங்கிலத்தில் physique என குறிக்கப்படுகிறது. உடம்பு என்றும் , வடிவம் என்றும் , உடல்வாகு என்றும் அகராதிகள் பல பொருளைத் தந்துள்ளன.

ஆகிருதி என்பது 'உடம்பின் வடிவம்' எனப் பொருள் கொள்ளலாம்.


புதிய சொல் , பழைய தேடல் -6

கிரமம்

   - அண்டனூர் சுரா

'அனொனிமா ( முகம் மறைந்தவள் ) ' இரண்டாம் உலகப் போரின் போது தனது கற்பை தற்காத்துக்கொள்ள தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணின் நாட்குறிப்பு பதிவுகள் . இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர் ஆதவன் தீட்சண்யா. மொழிப்பெயர்ப்பு  சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் தேவா.

'ஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் வேறு பாதையில் செல்லவும்' என்பது ஆதவன் தீட்சண்யா எழுதியிருக்கும் முன்னுரையின் தலைப்பு.  முன்னுரையின் நடுப்பகுதியில் இப்படியாக ஓரிடம்.

"தங்களில் இன்னும் கன்னி கழிக்கப்படாதவளாய் இருப்பது யார் என்று பெண்களுக்குள் நடக்கும் விவாதங்கள் அவளுக்கு ( அனோனிமா) சிரிப்பையே வரவழைக்கிறது. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருத்தி 24 முறை வல்லுறவுக் காளானாள் என்ற பத்திரிகைச் செய்தியைக் கேள்விப்பட்டதும் , இதையெல்லாம் அருகிலிருந்து யார்தான் கிரமமாக எண்ணுகிறார்களோ என்று கேலி செய்கிறாள்...''

வாசிக்கும் பொழுதே இதயத்தை நடுங்கச் செய்யும் வரிகள் இவை. அது என்னதாம் ' கிரமம்..? '

 யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' என்கிற நூலில் பாரதி செல்லம்மாள் உரையாடல் வருகிறது. செல்லம்மாள்  சொல்கிறார் ' வீட்டின் ஓடுகள் உடைந்து கூரை ஒழுகுகிறது. வேறொரு  வீடு பாருங்கள் ' என்கிறார். அதற்கு பாரதி "செல்லம்மா, நீ அவ்வளவு தூரம் அலுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதை பேசி முடித்துவிட்டேன். நல்ல நாள் பார்த்துகொண்டு நாம் அங்கே போக வேண்டியதுதான் பாக்கி. இனி மாதத்தில் சில நாள் மௌன விரதம் என்று கிரகம் செய்து விடுகிறேன். புதிய சொல், அதாவது ஓம் எனபதைப் போல தமிழில் ஒரு பதம் கண்டுபிடித்தாக வேண்டும்...."

இதே சொல் இயற்கணிதத்தில் குலம் , கிரமம் என்கிற பதமாக வருகிறது. அக்கிரமம், ஆக்கிரமம், அபக்கிரமம், அனுக்கிரமம்,பராக்கிரமம்,...இவை இதனுடன் தொடர்புடைய பிற சொற்கள்.

வை. சுந்தரேச வாண்டையார் தொகுத்த '30 கல்வெட்டுகள்' என்கிற நூல் , கிரமம் என்பது வேதம் ஓதும்  வகைகளில் ஒரு வகை என்கிறது.  சம்ஹிதா, பதம், கிரமம்,கனம்,ஜடா . இதில் கிரமம் என்பது முறைப்படி வேதத்தை ஓதுதல். கி.ரா தொகுத்த வழக்குச் சொல்லகராதி கிரமம் என்பது இயற்கையாகக் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறை என்றும் சீட்டாட்டத்தில் பயன்படும் சொல்  என்றும் விளக்கம் தந்திருக்கிறது. 

இதிலிருந்து நாமொரு முடிவிற்கு வரலாம். கிரமம் என்கிற சொல்லிற்கு 'ஒழுங்கு' எனப் பொருள் கொள்ளலாமே.




புதிய சொல் - பழைய தேடல் - 5

வியஞ்சனம்

 - அண்டனூர் சுரா

'என் ராஜா' அபிராமி துர்காதாஸ் எழுதிய  சிறுகதை . தாய் இட்டலி, வடை சுட்டுத் தருவதை மகன் தலையில் சுமந்துபோய் விற்று வருகிறான். அவனின் ஆசிரியர் மாணவர்களை அழைத்துகொண்டு சுற்றுலா செல்கிறார்.  தாயிடம் நாலணா காசு வாங்கிக்கொண்டு அவனும் செல்கிறான். அங்கு பலரும் பலதை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.  அவன் அக்காசை பத்திரமாக வைத்திருக்கிறான் ' இந்த நாலாணாவைக் கொண்டு தேங்காயும், பொட்டுக்கடலையும்  வாங்கினால் நாளைக்கு இட்டலிக்கு வியஞ்சனம்  ஆகுமே ' என்று.

அது என்னதாம் வியஞ்சனம்...?

 உ.வே.சா எழுதிய 'என் சரித்திரம்' சுய சரிதத்தில்  இச்சொல்  இடம் பெற்றிருக்கிறது.  'ஆகாரத்திற்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதையும் சாப்பிடுவதுண்டு'.

'மனோமணியம் ' நாடகத்தில் வரும் தமிழ்த்தாய் வாழ்த்து  நீராரும் கடலுடுத்த.... பாடலின்  நீட்சியில்

"தக்கவழி விரிந்து இலகும்
சங்கத்தார் சிறுபலகை
மிக்க நலம் சிறந்த உன்றன்
மெய்ச்சரித வியஞ்சனமே"

இவ்விடத்தில் வியஞ்சனம் என்பது குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம் எனப் பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ சர்வஞானோத்தரம்  பக்தி பாடலில் இச்சொல் நிறைய இடங்களில் வருகிறது.  திருப்புவனம் மன்னன் வீரபாண்டியன் கல்வெட்டில் இச்சொல் இடம் பெற்றுள்ளது.  இதிலிருந்து வியஞ்சனம் என்பது ஒரு வடமொழி சொல் என்கிற தெளிவிற்கு வந்துவிடலாம்.

காரைக்குடி பகுதிகளில் இதே சொல் சற்று திரிந்து வெஞ்சனம் என்றும் வெஞ்சினம் என்றும்  வட்டார வழக்காகியிருகிறது. நத்தை வெஞ்சனம், பருப்பு வெஞ்சனம், மோர் வெஞ்சனம்... என்று இன்றைக்கும் சொல்வதைக் கேட்கலாம். இதைக் கொண்டு பார்க்கையில் வியஞ்சனம் என்பது சில இடங்களில் குழம்பாகவும், சில இடங்களில் கூட்டுப் பொரியலாகவும், சில இடங்களில் கறி வகைகளையும் குறிப்பதாக பொருள் கொள்ள முடிகிறது.

இராஜம் கிருஷ்ணன் எழுதிய 'பாதையில் பதிந்த அடிகள்' நாவலில் இப்படியாக ஓரிடம்.

' உன் மாமா மக தானே உன் பொஞ்சாதி , அவளைப் போய் ஏன் அடிச்சே?'

'காலாம கஞ்சி கொண்டாந்தா, தொட்டுக்க ஒரு வியஞ்சனம், உப்பு மொளவா வச்சி அரச்சிக் கொண்டாந்தா என்னவாம்? '

இதிலிருந்து ஒரு முடிவிற்கு வரலாம். பல பொருட்கள் சேர்ந்த குழம்பு அல்லது கூட்டுப் பொரியல் செய்கையில் எப்பெயரில் அது அழைக்கப்படுகிறதோ அதுவே வியஞ்சனம். உதாரணமாக,  என் அம்மா சமையலில் எனக்கு பிடித்தது வெண்டைக்காய் வியஞ்சனம்.  உங்களுக்கு தக்காளி வியஞ்சனமாகக் கூட இருக்கலாம்.
ஆகஸ்ட் - 26, 2018




புதிய சொல் - பழைய தேடல் -4

'தூக்காய்'
                         - அண்டனூர் சுரா


சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்காக நிலம்  கையகப்படுத்தும் பணியை அரசு இயந்திர தனத்துடன்  துவங்குகையில் நீல. பத்மநாபன் எழுதிய பள்ளிகொண்டபுரம்  நாவலில் இடம்பெற்ற  ஒரு கதை நினைவிற்கு வந்தது. 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக டி.ஆர். பார்த்தசாரதி ஐயங்கார் இருக்கையில், திடீரென்று ஒரு நாள் இந்த சாலை பஜாரின் இருபக்கங்களிலுமுள்ள கடைகளை எல்லாம் இடித்து நீக்கி அகலப்படுத்தப் போவதாக அவர் விட்ட அறிக்கையைக் கண்டு , சாலைக்கடை முதலாளிமார்கள் எல்லோரும் பதறிப் பரபரத்து விழுந்தடித்துகொண்டு திவானிடம் ஓடிச்சென்று , பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்கியதாகவும் , இறுதியில்தான், சர்க்கார் கஜானா காலியாக இருப்பதை அறிந்து அதை நிரப்ப திவான் கையாண்ட ராஜதந்திரமெனவும் தெரியவந்தது'

நீல. பத்மநாபன் இக்கதையை சொல்வதற்கு முன்பு நாவலின் கதை மாந்தரான  அனந்தன் நாயர் கோட்டை வாசலில் நின்று கோட்டையைப் பார்க்கிறார். அவரது பார்வையில் கோட்டையின் வாசல், கிழக்கு மேற்காக தூக்காய் நீண்டு செல்வது தெரிகிறது.


அது என்னது 'தூக்காய்..?'.

தூக்காய் என்கிற சொல்லின் வேர்ச்சொல் தூக்கு. தூக்கு என்பதற்கு காய்கறிக் கூட்டு என்றொரு பொருளுண்டு.  ஒரே தட்டு கொண்ட தராசும் தூக்குதான். அபிதான சிந்தாமணி தூக்கு என்பது தாளங்களின் மேல் வரும்  பேதம் என்கிறது.  தூக்குத்  தண்டனை இதே சொல்லில் குறிக்கப்படுகிறது. தூக்கு என்றால் மேலே என்கிற பொருளும் உண்டு.

அத்தூக்கு, அத்தூக்காய் என்கிற சொல் இன்றும் நாஞ்சில் பகுதியில் வழக்கத்திலிருக்கிறது. பார்வைக்கு அல்லது மனித புழக்கத்திற்கு  அப்பால் எனப் பொருள் கொள்ளலாம்.  அத்தூக்காய் என்கிற சொல்லின் சுருங்கிய வடிவமே தூக்காய். அதாவது  மனித புழக்கத்திற்கு அப்பால் எனப் பொருள் கொள்வோமே...

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை  தூக்காய் இத்தனை அவசரத்தில் நிறைவேற்ற என்ன  ராஜதந்திரமோ...?


தொடர் - 3

புதிய சொல் , பழைய தேடல்

கோவில்

                     #  அண்டனூர் சுரா

 எல்.கே. அத்வானியின் சுயசரிதை ' என் தேசம் என் வாழ்க்கை ' . ஒரு பக்கத்தில் சிந்தி கவிஞர் தான்சேன் என்று புகழப்படும் பகத் கன்வர் ராம்(1885-1938) பற்றி இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.  'கன்வர் ராம் எழுதி இசையமைத்து பாடிய  பாடல்களுக்கு இந்து, முஸ்லீம்கள் மெய் மறந்து நடனமிடுவார்கள் . அத்தகையவரை 1938 ஆம் ஆண்டு ஒரு முஸ்லீம் மத வெறியன் சுட்டு கொலை செய்தான்'.  

இதற்கும் முந்தைய பக்கங்களில் இந்திய பிரிவினை  குறித்தும், அதன் பேரில் நடத்தி முடித்த  காந்திஜியின் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் பெரிதாக பேசாமல் அத்தனை எச்சரிக்கையாக கடந்து செல்லும் அவர் , பகத் கன்வர் ராம் சம்பவத்தை திட்டமிட்டு எழுதுவதன்  காரணம்  நமக்கு புரியாததில்லை.  .

சரி, நான் தலைப்பினூடே விடயத்திற்கு வருகிறேன். பகத் கன்வர் ராமின் பாடலைக் கேட்பவர்கள் இன்றும் மெய் மறவாமல் இருக்க முடியாது. அவரது பாடலில்தான் என்னவொரு காந்தம்! என்னே வரிகள் !. ' நான் முஸ்லிமா இருந்து தொழட்டுமா? அல்லது ஹிந்துவாக இருந்து கோயிலுக்கு செல்லட்டுமா? அல்லது துடிதுடிப்பான இசைக்கு நடனமாடி ,எனது பக்தியை காட்டட்டுமா? எது உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது? '  ஒரு பக்தன்  கடவுளைப் பார்த்து  கேட்கும் பாடல் இது. 

இந்துகளால் தூக்கிப்பிடிக்கப்படும் மகா கவிஞராக இன்று போற்றப்படுகிறார் பகத் கன்வர் ராம். மதம் கடந்த எவரும் இப்பாடலுக்கு ஆட்படாமல் இருக்க முடியாது. இதே பாடலை கவிஞர் இப்படியாக எழுதியிருந்தால் இந்துத்துவவாதிகள் அவரைத் தூக்கிப்பிடித்திருப்பார்களா? எல்.கே. அத்வானியும் தன் சுய சரிதைக்குள் இதைக் கொண்டு வந்திருப்பாரா..? சற்றே யோசியுங்கள்...

'நான் முஸ்லிமாக இருந்து தொழட்டுமா? அல்லது இந்துவாக இருந்து கோயிலுக்குள் செல்லட்டுமா?'.

கோயிலுக்கு, கோயிலுக்குள் இரண்டில் பின்னதை இந்துத்துவவாதிகள் ஏற்க மாட்டார்கள். கோயில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத இடமாகவே இருந்திட்டு போகட்டும். கோயில் என்பது சரியா...?


கோயில் என்பதை கோ + இல் எனப் பிரிக்கலாம். இதில் நிலைமொழி ஈற்றும் வருமொழி முதலும் இணையாது. ஆகவே இரண்டையும் இணைக்க உடம்படு மெய் என்கிற ய்,வ் தேவைப்படுகிறது.

அ,ஆ,உ,ஊ,ஓ உயிரொலிகளுள் ஒன்று கடைசியிலிருக்க முதலில் உயிர் எழுத்துகளில் ஒன்று வருமொழியாக வந்தால் ' வகர மெய் ' தோன்றும்.

இதன்படி, நா + இல் = நா + வ் + இல் = நாவில்

திரு + ஆரூர் = திரு +  வ் + ஆரூர் = திருவாரூர்

கோ + இல் = கோ + வ் + இல் = கோவில்

 நா.வானமாமலை திரட்டிய 'கான் சாகிபு சண்டை 'கதைப்பாடலில் மனைவி மாஷாவிடம் கான்சாகிபு இவ்வாறு கூறுகிறான்.

அடிபெண்ணே துரைமகளே மாசா
ஆண்பிள்ளையொரு வயணஞ் சொல்லுகிறேன் கேளு
மலையாளம் பார்த்து வர வேணும்
மன்னாரு கோவிலும் பார்த்து வரவேணும்

என்ன நண்பர்களே , இனி கோயில் என்பதை  இனி கோவில் எனத் திருத்தி  எழுதுவோமே....
   
தொடர் -2

புதிய சொல் - பழைய தேடல்

'ஆரோகணித்து '
                   - அண்டனூர் சுரா


ஆனந்த விகடன் 18.7.18 தேதியிட்ட இதழுக்கு எழுத்தாளர் பொன்னீலன் ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் கடைசி கேள்வியும் அவரது பதிலும்.

கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த எழுத்தாளராக இருப்பதை எப்போதாவது அசௌகரியமாக உணர்ந்துள்ளீர்களா?

" எழுத்தாளர் , எந்த கட்சிக்குள்ளும் தன்னை அடைத்துகொள்ளக்கூடாது என்று என் அனுபவம் எனக்கு உணர்த்துகிறது. அது , எழுத்தாளனின் சுதந்திரத்தை ஒடுக்கிவிடும். எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் சொல்வார், ' எழுத்தாளர்கள் கொள்கையைக் குதிரையாக்கி அதன் மீது ஆரோகணித்துச் சுதந்திரமாகத் தன் படைப்புலகில் வலம் வர வேண்டும். குதிரையைத் தோளில் ஏற்றிச் சுமக்கக்கூடாது' என்று. இதன் பொருள் என்ன?".

இதை வாசிக்கையில் 'ஆரோகணித்து ' என்கிற சொல் வாசிப்பில் இடறியது. இது குறித்து தேடுகையில் இச்சொல்லை கல்கி, 'பார்த்திபன் கனவு'  நாவலில் பயன்படுத்தியிருக்கிறார். நரசிம்ம சக்கரவர்த்தி குதிரை மீது ஆரோகணித்து ராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகச் சென்றார்.

கோகுல சேஷாத்ரி ' இராஜகேசரி' என்கிற நாவலில் ஓரிடத்தில் ' மழடியாருக்கு வேறு வழியில்லை. ஒரே ஓட்டமாக ஓடி அவருடைய புரவியை அடைந்து, அதன் கடிவாளத்தை மரத்திடமிருந்து விடுவித்துகொண்டு நொடியில் ஆரோகணித்து அவர் சென்ற திசையில் முடிந்த வரை வேகமாக புரவியைச் செலுத்திக்கொண்டு போனார்.

G.M.பாலசுப்பிரமணியன் எழுதிய சிறுகதை ' விளிம்புகளில் தொடரும் கதை ' . ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தன்னுடன் குடும்பம் நடத்திய கணவர் மரணப்படுக்கையில் கிடக்க அவருடைய மனைவி கணவர் தூங்குகிறாரா, இறந்துவிட்டாரா என தவிக்கும் பாட்டை இக்கதை பேசியிருக்கும். ஓரிடத்தில் மனைவி கணவரின் இளமைப்பருவத்தை  நினைத்து பார்க்கிறார். ' என்ன தைரியம் இவருக்கு? சம்யுக்தையை குதிரையில் கவர்ந்து போன பிருதிவிராஜா என்ற நினைப்பு. இருந்தாலும் அவர் சைக்கிளில் ஆரோகணித்து வருவது கம்பீரமாய் குதிரையில் வருவது போலிருந்தது'

சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்ற கிர்கீஸிய எழுத்தாளர் எழுதிய ஜமீலா நாவலில் ( மொழிபெயர்ப்பு - பூ.சோமசுந்தரம்) ஓஸ்மோன் குதிரையின் மேல் ஆரோகணித்து இங்குமங்குமாக நகர்ந்து சென்றார்.

ஆரோகணித்து - இச்சொல் தமிழ்ச்சொல்லாக  இருக்க  வாய்ப்பில்லை. காரணம், இச்சொல் குதிரையுடன் தொடர்புடையது. ஆங்கிலத்தில் Arrow என்றால் அம்பு. இச்சொல் ஸ்பானிய மொழியின் திரிபு. அம்பு என்கிற ஒன்று  குதிரையில் பயணம் செய்யும் ஒரு வீரனின் உருவத்தை ஒத்தது. அம்பின் தலைதான் வீரனின் தலை. பின்னாலிருக்கும் இரு விளிம்புகள் வீரனின்  இரு கால்கள். ஓர் அம்பின் வேகத்தில் குதிரையில் சவாரி செய்வதுதான் ஆரோகணித்து என பொருள் கொள்ளலாம்.

இச்சொல்லை G.M பாலசுப்பிரமணியன் தன் கதையில் சைக்கிள் ஓட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.  இன்று, விரைவாக பைக் ஓட்டுபவர்கள் இச்சொல்லை  அதிகமாக பயன்படுத்துகிறார்கள்....
தொடர்

 புது சொல் ; பழைய தேடல் - 1

கறள்

          அண்டனூர் சுரா


ஜூலை 22, 2018 காமதேனு இதழில் இரண்டு டொலர்  என்கிற சிறுகதை வாசித்தேன். கதையின் ஆசிரியர் அ.முத்துலிங்கம் .

அவரது வழக்கமான சிறுகதையைப் போலவே இக்கதையும் கனடாவில் பயணிக்கிறது. ஒரு இளைஞன் வேலை தேடி அவசரமாக  ஒரு பேருந்தைப் பிடித்து பயணிக்கிறான். அவனது அவசரத்திற்கு ஏற்ப பேருந்தின் வேகமிருக்கவில்லை.  ஓரிடத்தில் பேருந்து நின்று  ஒரு மாற்றுத்திறனாளியை சக்கர நாற்காலியுடன் உள்வாங்கிக்கொள்கிறது. பேருந்து திரும்பவும் பழையபடி பயணிக்கிறது. பயணச்சீட்டு வாங்க மாற்றுத்திறனாளி பாக்கெட்டுக்குள் துழாவுகிறார். அவரிடமிருக்கும் பாக்கெட் ஒன்றா, இரண்டா,... எட்டு இருக்கின்றன.  ஒவ்வொரு பாக்கெட்டாகத் தேடுகிறார். இரண்டு டொலர் கிடைக்கவில்லை. வேலை தேடும் வாலிபன் உதவி செய்யலாமென்று இரண்டு டொலரை எடுத்து கையில் வைத்திருக்கிறான். அதற்குள் பேருந்து நிற்க மாற்றுத்திறனாளியை இடையில் இறக்கி விடுகிறது. சக்கர நாற்காலியுடன் கீழே இறக்கிவிடப்படும்  அவருக்கு இரண்டு டொலர் கிடைத்துவிடுகிறது. அதை உயர்த்தி காட்டுகிறார். பேருந்து பின் வந்து மாற்றுத்திறனாளியை ஏற்றிக்கொண்டு திரும்பவும் விரைகிறது. இதுதான் கதை.


இக்கதையில் பேருந்து ஓட்டுநரை அவர் சாரதி எனச் சொல்லியிருப்பார். நாம் ட்ரைவர் என தூய தமிழில் அழைப்போம் ஹிஹி.. அல்லது ஓட்டுநரை ஓட்டுனர் என்போம். ஓட்டுநர் பெண்ணாக இருப்பார். அவரை வர்ணனை செய்யும் அ.முத்துலிங்கம் கறள் நிறம் என்கிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக