செவ்வாய், 20 செப்டம்பர், 2016

பிரச்சாரப் பீரங்கி


  ட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தினைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கக்கூடிய கட்சியின் மாவட்டத் தலைவர் அவர்களே....
       முன்னிலை வகித்திருக்கக்கூடிய கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் அவர்களே....
     இக்கட்சிக் கூட்டத்தினை நெறிப்படுத்த கட்சியின் தலைமையிடத்திலிருந்து வந்திருக்கக்கூடிய மத்திய பொதுக்குழு உறுப்பினர் அவர்களே....
      நன்றி நல்க இருக்கிற கட்சியின் பொருளாளர் அவர்களே...
      கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களே....
    கட்சிக்காகவும் நம் தலைவருக்காகவும் தன் இன்னுயிரையும் கொடுக்க இருக்கிற கட்சித் தொண்டர்களே....அனைவருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்கிறவன் முறையில் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.
       நண்பர்களே.....
       இது அவசரக்கூட்டம். தலைவரின் உணர்ச்சிப்பூர்வமான பொதுக்கூட்ட உரைக்குப் பிறகு கூடியிருக்கிற கூட்டம். மிக முக்கியமானக் கூட்டம். நம்மை , நம் கட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டுச்செல்கிற கூட்டம்.
       நாம் நம் கட்சியை எவ்வாறு வளர்த்தெடுத்து வருகிறோம்....நம்மால் நம் கட்சி எவ்வாறு வளர்ந்து வருகிறது. கட்சியால் நாம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்று இல்லை! நாம், நம் கட்சியை வளர்த்தெடுத்த விதம், மாநில தலைமை , மத்திய தலைமை இடத்துடன் நாம் கொண்டிருக்கக்கூடிய நெருக்கம் வேறு எந்த மாவட்ட நிர்வாகிகளும் கொண்டிறாத ஒன்று என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது போதாது...! மேலும் நம்மை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக உங்களை நான் தயார்ப்படுத்தவே இந்த இடத்தில்  நின்று கொண்டிருக்கிறேன். இப்படியொரு அவசர பொதுக்குழு கூட்டத்தினைக் கூட்டியிருக்கிறேன்.
       நண்பர்களே....
       நமது மாவட்டத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு நம் கட்சியின் பலம், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருந்தது. உங்களுக்கு ஒன்றும் தெரியாததில்லை. மாவட்ட செயற்குழு கூட்டினால் தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்கள் மூவரைத் தவிர வேறு யாரும் கூட்டத்திற்கு அவ்வளவு எளிதில் வந்துவிட மாட்டார்கள். வந்தாலும் கட்சியோடு ஐக்கியமாகிவிட மாட்டார்கள். அப்படியே ஐக்கியமானாலும் கட்சி கொடுக்கும் வேலைகளை மனமுகந்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
       இதை நான், நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. உள்ளபடியே கட்சியின் நிலை அந்தளவுளவே இருந்தது. ஆனால் இன்றைக்கு நம் கட்சியின் பலம் அவ்வாறாகவா இருக்கிறது என்பதை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.
       ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் நம்மை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறோம். அவ்விரு கட்சிகளின் வெற்றித் தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்திருக்கிறோம். நம்மை பிறர் கூட்டணிக்கு அழைக்கும் அளவிற்கு தவர்க்க முடியாத கட்சியாக உயர்ந்து நிற்கிறோம். நாம் இத்தகைய பலம் பெற யார் காரணம்.....?. நமது கட்சியின் தலைவர் அவர்கள்தான். அவரால்தான் நான் கட்சியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்திருக்கிறீர்கள்.
       அதுமட்டுமா.... நடைபெற இருக்கிற உள்ளாட்சித் தேர்தலிலும், அதை அடுத்து வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் நாம் ஒவ்வொருவரும் வேட்பாளராகத் தேர்வு பெற இருக்கிறோம். வெற்றிப்பெற இருக்கிறோம். ஆளுங்கட்சியாக இருக்கிறோம். அமைச்சராக இருக்கிறோம்.
       இதை நான், நீங்கள் கைக்கொட்டி ஆராவாரத்துடன் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நம் பலம், நம் கட்சியின் பலம் இந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதைப் புரிய வைப்பதற்காகச் சொல்கிறேன். நமது கிராமத்தை , நமது தொகுதியினை, நமது மாநிலத்தை, நமது தேசத்தை ஆளும் தகுதி நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை நினைவூட்டுவதற்காச் சொல்கிறேன்.
       நண்பர்களே....
       இந்த நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை நாம் தொடர்ந்து பார்த்துகொண்டுதான் இருக்கிறோம். உலகளாவிய கட்சிகள், சர்வதேச தலைவர்கள் நம் கட்சியையும் கட்சித் தலைவரையும் எவ்வாறு புகந்து பேசுகிறார்கள். அதே நேரம் நம் தேசத்தில் நம் கட்சியையும் , நம் கட்சித் தலைவர்களையும் எவ்வாறு இகழ்ந்து பேசுகிறார்கள் என்பதை பத்திரிக்கை செய்தியின் ஊடாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் நாமும், நம் கட்சியும்தான் காரணமா.....?
        நம் தலைவர் நேற்றைக்கு முந்தையத் தினம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உணர்ச்சி பெருக்கோடு உரையாற்றினார். அவரது உரை பல்வேறு பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. நம் தலைவரின் முகத்தில் இதற்கு முன் இப்படியொரு உணர்ச்சியைப் பார்த்திருக்க முடியாது. அத்தனைக் கோபம், அத்தனை உணர்ச்சி . அவரது உரையை , அவரது வேண்டுகோளினை என்ன விலைக்கொடுத்தேனும் நிறைவேற்றிக் கொடுத்தாக வேண்டிய நிலையில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.
       நண்பர்களே....
       நாம், நம் தலைவரின் உரையை அறியாதவர்கள் இல்லை. அவரது வேண்டுகோளினை புரிந்துக்கொள்ளாதவர்கள் இல்லை. தலைவர் என்ன எதிர்ப்பார்க்கிறார், எப்படி எதிர்ப்பார்க்கிறார்....என்ன அளவில் எதிர்ப்பார்க்கிறார்....என்பதைப்புரிந்துகொண்டு நாம் கட்சியை வளர்த்தெடுத்து வந்திருக்கிறோம். அவரைக் கொண்டாடிக் கொண்டாடியே கட்சியை பலப்படுத்தியிருக்கிறோம்.
       ஐந்து வருடத்திற்கு முன்பு தலைவர் அதுநாள் வரைக்குமில்லாமல் ஒரு அறிக்கையை விட்டிருந்தார். அவர் என்னச் சொல்லிருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கும்... ‘ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...’ என ஒரு சுற்றறிக்கை விட்டிருந்தார். ‘ இந்த வருடம் எனது பிறந்தநாளை கட்சித் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் ’ என அறிக்கை விட்டிருந்தார். நாம் என்னச் செய்தோம்.... அதுநாள் வரைக்கும் அவரது பிறந்த நாளினைக் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த நாம் அந்த வருடம் அவருடைய பிறந்த நாளினை நமது மாவட்டம் குலுங்கும் அளவிற்கு  ஜாம் ஜாம்மெனக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
       அவரது வயதினைக் குறிக்கும் விதமாக கிலோ கேக் ஆடர் கொடுத்து கட்சி அலுவலகத்தில் வைத்து ஒரு நாள் முழுமைக்கும் வெட்டி வருகிறவர்கள் , போகிறவர்களுக்கு ஊட்டிக்கொண்டிருந்தோம் இல்லையா! அதை நம்மால் மறக்க முடியுமா....? கட்சிப்பத்திரிக்கை, வெகுஜனப்பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் அந்த பிறந்தநாள் கொண்டாட்டம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. என்னை உள்ளிட்ட பலரையும் முதற்பக்கத்தில் பிரசுரத்திருந்தது. அதை நாம் இன்னும் மறக்கவில்லை. நமது கொண்டாட்டத்தைப் பார்த்த தலைவர் நம்மை கட்சித் தலைமையிடத்திற்கு அழைத்திருந்தார். மாவட்ட எல்லையைத் தாண்டி பயணம் மேற்கொள்ளாத நாம் முதன்முறையாக விமானத்தில் கட்சித் தலைமையிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரது பிறந்த நாளினை மிகப்பெரிய அளவில் கொண்டாடியத்திற்கு கிடைத்த பரிசு என்ன....? எனக்கு மாவட்ட செயலாளர் பதவி.  அண்ணனுக்கு தலைவர் பதவி. இவருக்கு பொருளாளர் பதவி.
       இந்தப் பதவிகள் நமக்கு எப்படிக் கிடைத்தது. தலைவரின் பிறந்த நாளினை மிக எழுச்சியோடும், பகட்டோடும், ஆடம்பரத்தோடும் கொண்டியதால் கிடைத்தது. என் பிறந்த நாளை கட்சித் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்கிற  அவரது வேண்டுகோள் , சுற்றறிக்கையை கண்டுக்கொள்ளாமல் அவரது மனத்திற்குள் இருந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகக் கொண்டாடியதால் நமக்கு இத்தகையப் பதவிகள் கிடைத்திருக்கிறது . இதை யாராலும் மறுக்க முடியுமா....?’
       நண்பர்களே....
       இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். கட்சித் தலைவர் நம்முடைய மாவட்டத்திற்கு வருகைத் தந்தார். மாநில மற்றும் மாவட்டப் பொருப்பாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை விட்டிருந்தார். என்ன விட்டிருந்தார். ‘ என்னை எந்த அளவிற்கு எளிமையாக வரவேற்க முடியுமோ...அந்த அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுங்கள் ’ என விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் விருப்பம் என்ன அதுவா...? தலைவரின் ஆசைகளை நாம் அறியாதவர்களா....? நாம் என்னச் செய்தோம்....? ஒரு நாள் அவசரமாக மாவட்ட செயற்குழுக்கூட்டத்தினைக் கூட்டி ஒரு முடிவு எடுத்தோம். இதே இடத்தில் நின்று கொண்டு நான் தலைவர் அனுப்பியச் சுற்றறிக்கையை வாசித்தேன். தலைவர் வருகையை எப்படியெல்லாம்  கொண்டாடலாமென உங்களிடம் கருத்துக்கேட்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்து சொல்லிருந்திருந்தீர்கள். உங்கள் கருத்துகள் அத்தனையையும் உள்வாங்கி அவர் விட்டிருந்த சுற்றறிக்கையை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவரது உள்மனம் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது வருகையை அமர்களப்படுத்தினோம்...
       மாவட்ட முழுவதும் ப்ளெக்ஸ் வைத்தோம். கேரளத்து செண்டை மேளம்  என்ன...வாண வேடிக்கை என்ன.... பறை என்ன...., கரகம் என்ன...., புரவி ஆட்டம் என்ன....காசை நாம் காசாகவாப் பார்த்தோம். தண்ணீயாக அல்லவா செலவு செய்தோம். விமான நிலையத்திலிருந்து கட்சி அலுவலகம் வரைக்கும் சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்தோம். ஆயிரம் பெண்களை இருபுறமும் நிறுத்தி ஆலாத்தி எடுக்க வைத்தோம். யானையால் மாலை அணிவித்தோம். நான் கூட ஒரு பண மாலை அணிவித்தேன். நம் தலைவர் ஒரு படி மேலே போய் ஆயிரம் ரூபாயினாலான மாலையை அணிவித்தார்.
       அவர் கேட்டுக்கொண்டது எளிமையான வரவேற்பு. நாம் செய்தது...? மாவட்டம் குலுங்கும் அளவிலானக் கொண்டாட்டம். இதனால் என்ன பயன் கிடைத்தது....? கட்சி வளர்ந்தது. தலைவர் வளர்ந்தார். நாம் வளர்ந்தோம். நமக்கு பல்வேறு ஆதாயங்கள் கிடைத்தன.
       நடந்து முடிந்த தேர்தலில் கட்சி செலவுக்கான தேர்தல் நிதி நம் கைக்கு வந்தது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்....யாருக்கு சீட் கொடுக்கலாம்...யார்க்கு எந்தத் தொகுதியைக் கொடுக்கலாம்....எங்கெங்கே...யாரையெல்லாம் வைத்து கட்சிக்கூட்டம் நடத்தலாம்...பிரச்சாரத்திற்கு யாரையெல்லாம் அழைக்கலாம்....என்கிற முடிவு எடுக்கிற வாய்ப்பு நம் கைக்கு வந்திருந்தது. இல்லையா....!
       அதுமட்டுமா....? வருகிற உட்கட்சித் தேர்தலில் மாநில பொறுப்பாளர்கள் தேர்வு பட்டியலில் நான் உட்பட பலரும் இருப்பதற்கானக் காரணம் அந்தக் கொண்டாட்டம் தானே...மற்ற மாவட்ட நிர்வாகிகள் இன்னும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம் நம் எதிர்ப்பார்பையும் மீறி வளர்ந்து உயர்ந்து நிற்கிறோம்.....
       நம் தலைவர் நாம் வளர்வதற்கு இன்னொரு வாய்ப்பினைத் தந்திருக்கிறார். நேற்றைக்கு  முந்தைய தினம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உணர்ச்சிப் பொங்க உரையாற்றியிருக்கிறார். கோபம் கொப்பளிக்க, கண்களில் நெருப்புத் தெறிக்க, நாசி விடைக்க வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். அவரது பேச்சில் கெஞ்சல் இருந்ததைக் கவனித்திருப்பீர்கள். அவரது பேச்சு வழக்கமானப் பேச்சாக இருந்திருக்க வில்லை. தேசத்தின் நலனை விடவும் கட்சியின் நலன் அதிகமிருந்தது.
       தலைவர் விடும் ஒவ்வொரு அறிக்கையையும் உள்வாங்கிக்கொண்டு வழக்கம் போல நாம் எப்படி அவரது ஆசையை நிறைவேற்றிக் கொடுப்போமோ அதைப்போலவே இந்த வேண்டுகோளையும் நாம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அவரது ஆசையை நாம் மெய்யாக வேண்டும்.
       நண்பர்களே...
       நான் பேசி முடித்ததன் பிறக கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் ஒவ்வொருவராக எழுந்து எப்படியெல்லாம் தலைவரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்பதை அவரவர் கோணத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். யாரும், யாருக்காகவும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை.        கருத்து தெரிவிக்க இயலாது என்றோ, முடியாது என்றோ தட்டிக்கழிக்க வேண்டியதில்லை. அது நமக்கும் நாம் சார்ந்திருக்க கட்சிக்கும் உகந்ததாக இருக்காது. நமக்கும் நம் வளர்ச்சிக்கும் அது உதவாது
       நமக்கு நம் தேசம் முக்கியம். அதை விட நம் கட்சி முக்கியம். கட்சியை விடவும் நமக்கு நம் பதவி முக்கியம். இவை எல்லாவரையும் விடவும் நமக்கு நாம் முக்கியம். நமது வரலாறு முக்கியம்....
       தலைவர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் என்னப் பேசினார் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்...நீங்கள் பத்திரிக்கைகளில் படித்ததுதான்....தொலைக்காட்சிகளில் பார்த்ததுதான்.....அவர் கட்சித் தொண்டர்களைப் பார்த்துக்கேட்டுக்கொண்டார். கட்சி நிர்வாகிகளை, தேச நலவிரும்பிகளை, அபிமானிகளைப் பார்த்துக்கேட்டுக்கொண்டார். ஒரு முறை அல்ல. ஒரு முறைக்கு மூன்று முறை. கும்பிட்டு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.‘ தலித்களைக் கொல்லாதீர்கள்...கொல்லாதீர்கள்... கொல்லாதீர்கள்.....’
       தலைவரது வேண்டுகோளினை நிறைவேற்ற கட்சி அபிமானிகளாகிய நீங்கள் உங்களால் முடிந்த கருத்துகளை நல்க வேண்டுமாய் கூறி வாய்ப்பிற்கு நன்றி கூறி இடம் அமர்கிறேன். நன்றி வணக்கம்!

3 கருத்துகள்: