வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

நான் கொலை செய்யும் பெண்கள்

நான் கொலை செய்யும் பெண்கள் ( சிறுகதைத் தொகுப்பு )  - லதா



இலங்கையில் பிறந்த லதா தற்போது சிங்கப்பூரில் வசிப்பதாக ஆசிரியர் குறிப்பு சொல்கிறது. சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசு பத்திரிகையின் துணை ஆசிரியரும் கூட.

இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு - நான் கொலை செய்யும் பெண்கள்.

அடையாளம்

மழை - அப்பா

நாளை ஒரு விடுதலை

இதுவரை

பயணம்

தமிழுக்கு அமுதென்று பேர்

முகாந்திரம்

வீடு

அறை

படுகளம்

என பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய கச்சிதமான தொகுப்பு இது. 102 பக்கங்கள்.

முதல் கதை அடையாளம் மற்ற பெண் எழுத்தாளர்கள் எழுதும் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது.

இந்திய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் சிங்கப்பூர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு அவள் படும் இன்னலை கதை பேசியிருக்கிறது.

கதையின் தொடக்கமே இவ்வாறு இருக்கிறது. 'யூ இண்டியா...?'

இந்தியக்குடும்பத்து பெண்களைப் போலதான் அவளும் சிங்கப்பூரில் சமைக்க, துவைக்க, கடைத்தெருவிற்குச் செல்ல, குழந்தைகளை வளர்க்க என இருக்கிறாள். கணவன் ,மாமனார்,பிள்ளைகளுக்கு விரும்பும் உணவுகளை சமைத்துகொடுக்கும் அவள் பழைய சோத்தையும் ஊறுகாயும் சாப்பிட்டு பசியாறுகிறாள். ஒருமுறை கணவன் அவளிடம் 'என்ன இது பிச்சைக்காரி மாதிரி சாப்பிட்டுக்கிட்டு' எனக்கேட்குமிடமும் , அதைப் பொறுக்கமுடியாத அவள் சாப்பாட்டை கொட்டுமிடமும் கதையின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிள்ளை படிக்கக்கூப்பிட அவர்கள் அப்பாவிடம் படித்துக்கொள்கிறேன் என ஓட 'நான் எம்.ஏ உங்க அப்பா ஏ லெவல்தான்' எனச்சொல்ல அதற்கு குழந்தை இந்திய படிப்பெல்லாம் சிங்கப்பூருக்குச் செல்லாது என குழந்தை சொல்லிச்செல்கிற இடத்தில் வாசகன் ஒரு கணம் நின்றுவிடத்தான் செய்கிறான்.

தோழியின் திருமணத்திற்கு செல்கிறாள் அவள் . பல வெள்ளிகள் செலவில் மேக்கப் செய்து... திருமணம் இந்திய திருமணத்தைப்போல ரசிக்கும் படியாக இல்லை. எந்த திருமணத்திற்கு சென்றாலும் அவளுக்கு கணவன் குமரன் நினைவிற்கு வருகிறான்.  ஏன் இங்கே யாருமே தனக்கு நெருக்கமாக இல்லை.... என்கிற யோசனையுடன் மொய் எழுத பர்ஸை திறக்க அதற்குள் சிவப்பு நிற சிங்கப்பூர் குடியுரிமை அட்டை இருக்கிறது.

' ஐ யெம் சிங்கப்பூரியன் '  கட்டுப்படுத்தமுடியாமல் அழுகிறாள் அவள்.

இக்கதை  இரண்டு விடயங்களைப் பேசுகிறது. ஒன்று குடும்பத்தில் பெண்கள் படும் அவலம். மற்றொன்று இந்திய பெண்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றாலும் சக வாசிகளுடன் அவர்கள் சந்திக்கும் அவலம் இரண்டு கூறுகளை பேசியிருக்கும் இக்கதை சிங்கைத்தமிழ் சிறுகதையில் மிக முக்கியமான கதையென்றே எனக்குத் தோன்றுகிறது.

மழை - அப்பா

இக்கதை ஒரு நாள் மழை பெய்கையில் அப்பா ரேடியோ கேட்கிறார்.  நிலவில் நீல் ஆம்ஸ்டோரோங் கால் வைக்கப்போகும் செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அப்பா - அப்பா மீது வீசும் துர்நாற்றம், மது, புகையிலை, .....என அப்பா குறித்த நினைவுகளைக் கதை பேசிச்செல்கிறது. சில ஆண்டுகளுக்குப்பிறகு வீடு மாற்றுகிறார்கள்.

அதே போன்று ஒரு மழை கொட்டுகிறது. அவளுக்கு முப்பது வருஷத்திற்கு முன் நிலவிற்குச் சென்ற அப்பலோ நினைவிற்குச் சென்றதும் அப்பா ரேடியோ கேட்டதும் நினைவிற்கு வந்துச்செல்கிறது.

இக்கதையில் மாமனார் - மருமகன் - மகள் - பேரப்பிள்ளைகள் குறித்த பந்தம் அழகான காட்சிப்திவு என்றுதான் சொல்ல வேண்டும்.

படுகளம் என்கிற சிறுகதை தீமிதி திருவிழா காட்சியுடன் மகாபாரத இதிகாசக் கதையைத் தழுவி அபிமன்யூ சக்ரவியூகத்திலிருந்து தப்பித்து வர முடியாதச் சூழலைச் சொல்லி பெண்களை காவு வாங்கும் சூழ்ச்சியைச் சொல்லி நிற்கிறது.

இதே போன்று தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற சிறுகதை ஒரு மாறுபட்ட சிறுகதை. 2200 ஆம் ஆண்டுகளில் எழுத்துகளின் தேவை எப்படியாக இருக்கும் , குறிப்பாக தமிழ் எழுத்துகளின் அவசியமும் அதற்கான தேவையும் எப்படியானதாக இருக்கும் என்பதை நூறு நூறு ஆண்டுகளாக பிரித்து கதை புனையப்பட்டுள்ளது.

இக்கதையின் தலைப்பில் சிறு திருத்தம் செய்ய வேண்டும். பாரதிதாசனின் வரியைத்தான் நூலாசிரியர் கதைக்கு தலைப்பாகச் சூட்டியிருக்கிறார். தமிழுக்கும் அமுதென்று பேர் என்றே அவர் கவிப்பாடினார். அப்படியாகவே தலைப்பு சூட்டப்பட்டிருக்க வேண்டும். 'ம்'.மேலும் தலைப்பின் பெயரில் ஒரு கதையுமில்லை. பிறகு ஏன் இந்தத் தலைப்பு என்கிற கேள்வியும் எழவேச் செய்கிறது.

பொதுவாகச் சொன்னால் பெண்ணியமும் புனைவும் தமிழிசமும் புனைந்து தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு இது. சிறுகதையாசிரியர் லதா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

நான் கொலை செய்யும் பெண்கள்

சிறுகதைகள்

முதல் பதிப்பு - 2008

காலச்சுவடு பதிப்பகம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக