ஞாயிறு, 2 அக்டோபர், 2016

இண்டமுள்ளு - நூல் விமர்சனம்


     எழுத்தாளர் அரசன் எழுதித் தொகுத்திருக்கும் ‘இண்டமுள்ளு’ சிறுகதைகளை வாசித்து முடித்ததும் எனக்கு சொல்லத் தோன்றுவது இதுதான். ‘ கிராமத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்னால் தாத்தா- பாட்டி காலத்துடன் சம வயதில் வாழ்ந்த திருப்தி வருகிறது.’
     வளர்மதி பதிப்பகம் மூலமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூலுக்கு சி.கருணாகரசு அணிந்துரை எழுதியிருக்கிறார். மிகச்சிறப்பான அணிந்துரை. பெருஞ்சொம கதையை பெரிய அளவில் சிலாகித்து எழுதியுள்ளார். அந்த அளவிற்கு அக்கதையும் இருக்கிறது. சற்றே பெரியக் கதை அது. இக்கதையின் மருதன் - பார்வதி பாத்திரம் கதை முழுக்க விரிந்து மனதில் பெரிய சலத்தை ஏற்படுத்துகிறது. மருதன் , அவரது பெரியப்பா - பெரியம்மா சார்ந்த குடும்ப நகர்வுகளை வாசிக்கையில் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த உணர்வைத் தருகிறது.
     கெடாவெட்டி கதை ஆடு உரிப்பு கதையாக நீண்டு ஒரு துக்கத்தை அதிர்ந்து பேசுகிறது. பிணம், துக்கம் சொல்லிப்போதல், மரம், அறுத்தல், அடுக்குதல், பாடையைத் தூக்குதல் போன்ற சம்பவங்களை சொல்லிச்செல்கிறது.
     பெருஞ்சொம, தூவானம்,வெள்ளாம,கெடாவெட்டி, தாய்மடி, காயடிப்பு,நலுவன்,எதிர்க்காத்து  என ஒன்பது கதைகளின் தொகுப்பாக இண்டமுள்ளு வந்திருக்கிறது.
          இண்டமுள்ளு ... அணிந்துரை சொல்வதைப்போல தான் படர்ந்திருக்கும் பரப்பினைக் கடக்கும் எவரையும் கொத்தாகப் பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது . இண்டமுள்ளு என்புது மொத்தக் கதைகளின் கதைக்களம். அதன் பெயரில் ஒரு கதை இல்லாமல் இருப்பது புதிய உத்தியாக இருந்தாலும்  இண்டமுள்ளின் நிழல் கதைகளில் பெரிய அளவில் படியாததால் அதன் முற்கள் மனதில் தைப்பதை உணர முடியவில்லை.

     கதைச்சொல்லி வகை சிறுகதைகளைக் கொடுத்திருக்கும் அரசன் வட்டார வழக்கு சிறுகதைகளில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துக்கொள்பவராக இருக்கிறார். அரசனுக்கு என் வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக