வியாழன், 13 அக்டோபர், 2016

அசோகமித்ரனின்‘ பிரயாணம்’

சாகாத நாக்குகள் - 10 பகுதியில் அசோகமித்ரனின் ‘ பிரயாணம்’ கதையை நானும் வாசித்திருக்கிறேன். முதலில் எனக்கு அக்கதை சொல்ல வரும் செய்தி சரியாகப் பிடிபடவில்லை. பிரபலமான எழுத்தாளர் எழுதிய கதையாயிருச்சே...என்று அக்கதையை திரும்பத்திரும்ப வாசித்தேன். அக்கதையை நான் புரிந்துகொண்ட விதம் இப்படியாக இருந்தது.குரு- சிஷ்யன் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை பரிசோதிக்கும் கதையாக இக்கதை எனக்குப்பட்டது.   
       இக்கதையில் குரு தன் சீடனுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறார். எத்தனை ஆண்டுகள் கற்றுக்கொடுக்கிறார். அவனை எப்படியாக பாவித்து கற்றுக்கொடுக்கிறார் என்கிற காட்சி கதையில் இடம் பெற வில்லை. ஆனால் இக்கதை சொல்லவரும் செய்திக்கு இருவருக்குமிடையேயான நெருக்கம், காலம் வேண்டியதில்லை என எழுத்தாளர் அசோகமித்ரன் நினைத்திருக்கலாம்.
       நான் கதையில் இடம்பெறும் குரு  துரோணாச்சார்யார் என்றும், சீடனை ஏகலைவனாகவும் பாவித்துப்பார்த்தேன்.
       கதைப்படி, சீடன் தன் குருவை மலையிலிருந்து சமவெளிப்பகுதிக்கு கொண்டு வருகிறான். குரு உயிரோடு இருக்கிறாரா...இல்லை இறந்துவிட்டாரா என்பது கதையை வாசிப்பவர்களின் புரிதலைப்பொருத்ததாக இருக்கிறது. குருவை கடைசி இரண்டு ஆசையில் ஏதேனும் ஒரு ஆசையையாவது நிவர்த்தி செய்திட வேண்டும் என்கிற வேட்கையோடுதான் குருவை அவன் சமதளப்பகுதிக்கு கொண்டுவருகிறான்.
       குருவை ஓநாய்கள் வேட்டையாடப்பார்க்கிறது. இந்த இடத்தில் வாசகர்கள் கவனிக்க வேண்டும். ஓநாய்கள் சீடனை ஒன்றும் செய்யவில்லை. குருவைதான் வேட்டையாடப்பார்க்கின்றன. இராமாயண, மகாபாரதம் காலத்தோடு ஒட்டி இக்கதையைப் பார்த்தோமானால் இந்த ஓநாய் வேட்டை குரு சீடனை சோதிக்கும் பொருட்டு அவர் நடத்தும் திருவிளையாடலாகத்தான் பார்க்க வேண்டும்.
       சீடன் குருவை மீட்க ஓநாய்களுடன் சண்டைப்பிடிக்கிறான். இந்த இடத்தில் மிஷ்கின் திரைபடம் நினைவிற்கு வந்தாக வேண்டும். அப்படத்தில் ஒரு ஆடு மெல்ல ஓநாயாக மாறுவதைப்போல சீடன் மெல்ல ஓநாயாக மாறி அவற்றுடன் சண்டைப்பிடிக்கிறான்.
       ஓநாயுடனான போராட்டத்தில் சீடன் சோர்ந்துவிட ஓநாய்க்கூட்டம் தன் குருவை இழுத்துச்செல்கிறது. அந்த ஓநாய்கள் நினைத்திருந்தால் சீடனையும் வேட்டையாடி இருக்கலாம். ஆனால் அது அப்படி செய்யவில்லை. ஓநாய்கள் குருவின் குடல்களை பிளந்து தின்றுவிட்டிருக்கிறது. அவரது தலையையும் துண்டித்து விடுகிறது.
       சீடன் மயக்கம் தெளிந்து குருவைத் தேடுகிறான். குரு வயிறு பிளக்கப்பட்டு இறந்திருக்கிறார். அவரது தலை ஓநாயால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு குருவின் கைப்பிடியில் இருக்கிறது. இத்துடன் கதை முடிகிறது.
       ஆனால் கதை மீதான விமர்சனம் இதற்குப்பிறகுதான் தொடர்கிறது. சீடன் தன் குரு இறந்துவிட்டதாக நினைத்து அவரது ஆசையை நினைவாக்க ஓநாயுடன் சண்டைப்பிடிக்கிறான். ஆனால் குரு உயிருடன் இருந்து தன் சீடன் தனக்காக சண்டைப்பிடிப்பதை உள்ளூர கண்டு ரசித்திருக்கிறார். தன்னை கடித்துக்கொல்கிற ஒரு ஓநாயின் காலைப் பிய்த்தெடுக்கும் அளவிற்கு அவரிடம் பலம் இருந்திருக்கிறது. ஆனால் மயக்கமுற்ற சீடனை வலுவூட்ட அவரிடம் பலம் இல்லை. பலம் இல்லாமல் இல்லை. மனது இல்லை.
       குரு துகில் கொள்கையில் சீடன் அவருக்கான பாதுகாப்பில் முழுமையாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும். சீடனால் முடியாத பொழுது குரு பிணமாக இருந்தாலும் உயிர்ப்பெற்று வந்து ஓநாயின் ஒரு கால் சப்பையை பிய்த்து எடுத்து சீடனுக்கு வியப்பு பாடம் கற்பிப்பார்...என்ன கொடுமையான பாடமய்யா இது!
       குருவின் உயிரைக் காக்கும் பொருட்டு ஓநாய்களிடம் ஓநாயாக மாறி சண்டைப்பிடித்த தன் சீடனுக்கு ஆறுதல் சொல்லாத குரு , சீடன் மயக்கத்தில் ஆழ்ந்து மீண்டு வருகையில் அவனுக்கு பாடம் கற்பிக்கிறார். சீடர்கள் குருக்களைத் தாங்க வேண்டும். அவர்கள் கேட்கும் கட்டை விரல்களைக் கொடுக்க வேண்டும். குருக்கள் சீடனின் மடியில் படுத்து தூங்குவார். சீடனின் தொடையை வண்டு குடையும். குரு தூக்கம் களையாமல் இருக்க சீடன் வண்டுக்குடையும் வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இத்தனை வலிகளையும் தாங்கி ஒரு சீடன் அவனது சொந்த முயற்சியால் முதன்மையான மாணவனாக வெளிப்படும்பொழுது குரு கொஞ்சமும் வெட்கப்படாமல் சொல்வார் ‘ இவன் என்னுடைய சீடன். இவனை சோதிக்கவே நான் இந்த திருவிளையாடல் நடத்தினேன்’ . என்ன கருமாந்திரம் பிடித்த சோதனையடா அது.

       இக்கதையில் குரு யார்...சீடன் யார்..என்பதைப் புரிந்துக்கொள்ளமுடியாமல் இருக்க நாம் என்ன பரமார்த்த குரு கதையில் இடம்பெற்றிருக்கும் சீடர்களா என்ன...?.பிரயாணம் மிகச்சிறந்தக் கதை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அக்கதை யாருக்கான கதை என்பதை அதற்கு முன் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக