வியாழன், 15 அக்டோபர், 2015

நந்தனார் இன்னும் நந்திக்கு வெளியே.....
       தீண்டாமை ஒரு பாவச்செயல்
       தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
       தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்றச்செயல்
       சமச்சீர் கல்வி வருவதற்கு முன்பு வரை பாட நூல்களில் இடம்பெற்ற வாசகங்கள் இவை. தீண்டாமையினால் அவமரியாதைக்கு உள்ளாகும் தாழ்த்தப்பட்ட மக்கள் கூனிக்குறுவதைப்போல இன்றைக்கு இவ்வாசகங்கள்  ‘தீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்என்று குறுகிப்போயிருக்கின்றன.
       காமராசர் ஆட்சிக்காலத்தில் மேற்காணும் வாசகங்கள் காலை வழிப்பாட்டு கூட்டங்களில் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அந்த மூன்று வரிகளையும் மனப்பாடப்பாடலாக வழிப்பாட்டு கூட்டத்தில் ஒப்பிக்கப்பட்டது. இன்று இந்தியா எனது தாய்நாடு என்கிற உறுதிமொழியும், ‘சாதிகள் இல்லையடி பாப்பாஎனும் பாரதியாரின் அரிச்சுவடியே போதுமென  தீண்டாமைக்கான  உறுதிமொழியை ஒதுங்கிவிட்டார்கள். தீண்டாமை என்கிற சொல் கூட தீண்டத்தகாத சொல்லாக மாறுவது தமிழ்நாட்டில் மட்டுமே நிகழக்கூடிய ஒன்று.
       நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் தமிழாசிரியரிடம் கேட்டிருக்கிறேன்.‘தீண்டாமை ஒரு பாவச்செயல் என்கிற மூன்று வரிகளும் மனப்பாடப்பாடலா?‘ என்று. அதற்கு அவர்  சிரித்துக்கொண்டு ஒட்டக்கூத்தரைப்போல தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டுஅடேய்.... அது காந்தி மகான் சொன்ன வாசகம்டாஎன்றார். அவரிடமே மறுபடியும்கேட்டேன்.அய்யா... காந்தி சொன்னார் என்றால் அதை அவர் எப்போது சொன்னார்? , எங்கே சொன்னார்?” .அவர் பிரம்புக்கம்பை தேடி எடுப்பதற்குள் நான் ஓடி வந்துவிட்டேன.
        தீண்டாமையை பற்றி பலரும் பலவிதமாக சொல்லிருக்கிறார்கள்.அதில் முக்கியமான இரண்டு வாசகங்கள்சாதிகள்இரண்டொழிய வேறில்லை‘-ஔவையார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘- திருவள்ளுவர்.
தீண்டாமைக்கு எதிராக பலரும் பலவிதமாக கூறியிருந்தாலும் பலருக்கு பிடித்தது பாரதியார் சொன்னதுதான்.சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் .நீதி நிறைந்த மதி கல்வி , அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். இப்படி சாதிகளே இல்லையென உறுதியாக  பாப்பாக்களுக்கு சொன்ன பாரதி , பின்னொரு பாடலில் பெரியவர்களுக்காக பாடுகிறார். ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி. சாதிகள் விசயத்தில் சாதிகளே இல்லையென்றும், பி்ன்னொரு இடத்தில் சாதிகள் உண்டு, ஆனால் எல்லா சாதிகளையும் சமமாக பாவிக்க வேண்டுமெனவும் இருவேறு கற்பினைகள் கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இது ஒருபுறமிருக்க ....
எச்சில், மடி, விழுப்பு, தீட்டு என பல்வேறு சொற்களால் தீண்டாமை குறிக்கப்படுகிறது.சங்கப்பாடல்களில் இழிப்பிறப்பாளன், இழிப்பிறப்பினோன், இழிசினன், சூத்திரன், தாழ்ந்தோன், சேவகன்,ஈயேன்,இழிந்தவன்,இழிவன்,... என பலப்பெயர்களில் தீண்டாமை குறிக்கப்பட்டு வருகிறது.இப்படி தீண்டாமை பல்வேறு வடிவங்களில் சமுதாயத்தில் வேர்விட்டிருக்க காந்தியடிகள் சொன்ன தீண்டாமை மீதான தேடல் எனக்குள் இருந்துக்கொண்டிருந்தது.தேடலுக்கான பலன் பாரதியார் இயற்றிய தராசு என்கிற நூலிலிருந்து கிடைக்கப்பெற்றது.சென்னையில்  ஒய்.எம்.ஸி. ( வாலிபர் கிறிஸ்துவ சங்கம்) சங்கத்தினர்  ஒரு பொதுக்கூட்டதைக்கூட்டி காந்தியடிகளை சிறப்பு விருந்தினராக பேச அழைத்திருக்கிறார்கள். ஆமதாபாதில் சத்யாக்கிரஹ ஆசிரமத்தைத் காந்தியடிகள் தொடங்கியிருந்த காலக்கட்டம் அது.அப்பொதுக்கூட்டத்தில் பதினொறு விரதங்களை கடைப்பிடிக்கச்சொல்லி பேசியிருக்கிறார் காந்தியடிகள்.( பார்க்க -சுப்பிரமணியபாரதி  ‘தராசு‘- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்  47, 48 பக்கம்)
1. சத்ய விரதம் ( எப்போதும் , யாரிடத்திலும், என்ன துன்பம் நேரிட்டாலும் பிரஹ்லாதனைப்போல ஒருவன் உண்மையே பேச வேண்டும்)
2. அஹிம்ஸா விரதம் ( எவ்வுயிருக்கும் துன்பஞ் செய்யலாகாது. யாரையும் பகைவராக நினைக்கலாகாது. ஒருவன் உன்னை அடித்தால் நீ திரும்பி அடிக்கக்கூடாது).
3. பிரமசரியம் ( விவாகம் பண்ணிக்கொள்ளக்கூடாது. ஏற்கெனவே மனைவியிருந்தால் அவளை சகோதரம் போல நடத்த வேண்டும்.
4. நாக்கைக்கட்டுதல் ( உணவிலே மஸாலா சேரக்கூடாது. ருசியை விரும்பி உண்பது பிழை. அதனால் உஷ்ணம் அதிகரித்து , போக இச்சையுண்டாகிறது).
5. உடைமை மறுத்தல் ( ஒருவன் ஒரு பொருளையும் தனது சொத்தாகக் கொள்ளக்கூடாது.
6. சுதேசியம் ( நமது தேசம் , நமது ஜில்லா, நமது கிராமத்து அம்பட்டன் நேரே க்ஷவரம் செய்யாமல் போனாலும் அவனுக்குப்பயிற்சி உண்டாகும்படி செய்து நாம் அவனிடமே க்ஷவரம் செய்துக்கொள்ள வேண்டும். வெளியூர் அம்பட்டனை விரும்பக்கூடாது.
7. பயமின்மை ( எதற்கும் நடுங்காத நெஞ்சம் வேண்டும். அஃதுடையவனே பிராமணன்.
8. தீண்டல் ( தீண்டாத ஜாதி என்று ஒருவரையொருவர் அமுக்கி வைப்பது பாவம். அது பெருங்கேடு. பெருங்குற்றம். யாரும்எந்த ஜாதியையும் தீண்டலாம்).
9 தேச பாஷை ( தேச பாஷையிலேயே கல்வி பயில வேண்டும்).
10. தொழிற்பெருமை ( எல்லாத் தொழில்களுக்கும் ஸமான மதிப்புண்டு. ஒரு தொழில் இழிவாகவும் மற்றொரு தொழில் உயர்வாகவும் கருதலாகாது
. 11. தெய்வ பக்தி ( பொதுக் காரியங்களிலும் ராஜீய விஷயங்களிலும் பாடுபடுவோருக்கு தெய்வ பக்தி வேண்டும்)
       இதுதான் காந்தியடிகள் செய்த பிரசங்கத்தின் சாராம்சம் என்ற பாரதியார் அவரது பிரசங்கத்தின் மீது பாரதியார் இவ்வாறு தனது விமர்சனத்தை வைக்கிறார்.
       அவர் சொல்லுகிற ஸத்ய விரதம் அஹிம்சை, உடைமை மறுத்தல், பயமின்மை- இந்த நான்கும் உத்தம தர்மங்கள் - இவற்றை எல்லாரும் இயன்றவரை பழக வேண்டும் .ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத்திரும்பி அடிக்கக்கூடாதென்று சொல்லுதல் பிழை.
       சுதேசியம், ஜாதி ஸமத்வம், தேசபாஷைப்பயிற்சி , தெய்வ பக்தி நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது தேசம் அழிந்து போய்விடும்.
       நாக்கைக் கட்டுதல், பிரமசரியம் இவையிரண்டையும் செல்வர்கள் , இடையிடையே அனுஷ்டித்தால் அவர்களுக்கு நன்மையுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவசியமில்லை.அவர்களுக்கு நாக்கை ஏற்கனவே கட்டிதான் வைத்திருக்கிறது.பிரமசரியத்தை ஜாதி முழுமைக்கும் ஸ்ரீ காந்தி தர்மமென்று உபதேசம் செய்யவில்லை.அந்த வேலை செய்தால் தேசத்தில் சீக்கிரம் மனதரில்லாமல் போயிவிடும்.
       காந்தி பதினொரு விரதம் சொன்னார்.நான் பனிரெண்டாவது விரதமொன்று சொல்லுகிறேன்.அது யாதெனில்எப்பாடுபட்டும் பொருள் தேடு.இவ்வுலகில் உயர்ந்த நிலைபெறுபனிரெண்டாவது விரதத்தை தேச முழுதும் அனுஷ்டிக்க வேண்டும் என்கிறார் சுப்பிரமணிய பாரதி.சாதிய வேறுபாடுகளை களைய ஒரே வழி பாரதியார் சொன்னது.பொருள்தேடு.உயர்ந்தநிலை பெறு.
காந்தியடிகள் வாழ்ந்த காலத்திலும் அதற்கு பிறகும் அவர் கடைப்பிடித்த சில கொள்கையின் மீது குறிப்பாக தீண்டாமைக்கு எதிரான கொள்கையின் மீது ஒரு விமர்சனம் இருக்கவும், இருந்துக்கொண்டுமிருக்கிறது. அதை மறுத்து எழுதலாமென தேடலில் இறங்கும் ஆய்வாளர்கள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
காந்தியடிகள் கொண்டிருந்த கொள்கையும் அதன் எதிர்முகத்தையும் பாருங்கள். இந்து, முஸ்லீம், கிறித்தவருடன் இன்னும் பிற மதத்தினரும் ஒரே இந்தியாவின் கீழ் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றார் காந்தி.ஆனால் விடுதலைக்குப்பிறகு இந்தியாவில் அமையும் அரசுராமராஜ்யமாக அமைய வேண்டும் என்பதே என்னுடைய கனவு என்றார். அவரது காலணியைஅவரே தைத்துக்கொண்டார்.ஆனால் நமது கிராமத்து அம்பட்டன் நேரே க்ஷவரம் செய்யாமல் போனாலும் அவனுக்குப்பயிற்சி உண்டாகும்படி செய்து நாம் அவனிடம் க்ஷவரம் செய்துக்கொள்ள வேண்டும்என்றார்.வெள்ளையர்களிள் மீதான பயத்திலிருந்து நாம் அனைவரும் மீண்டு வருதல் வேண்டும்என்றார்.ஆனால் பயமில்லாதவனே பிராமணன் என்றார்.
        தீண்டாமையின் மீதும் அவர் கொண்டிருந்த பிடிமானமற்ற புரிதலை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் காந்தியடிகளின் சேவையும் எண்ணமும் அளப்பரியது.காந்தி உண்மையில் ஒரு மகான்.அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.அதே நேரத்தில் கல்விக்கொள்கை, தீண்டாமை பற்றிய அவரும் கற்பித்தலை பார்க்கையில் அவர் ஒரு சராசரி அரசியல்வாதியாகவே பார்க்கத்தோன்றுகிறது.
காந்தியடிகளின் கொள்கையை கடைப்பிடித்த மூவருக்கு சமீப காலங்களில் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.நெல்சன் மண்டேலா ( தென் ஆப்ரிக்கா கறுப்பர் இனத்தலைவர் ) , ஆங் சான் சூகி ( மியான்மர் விடுதலை போராளி ) , பராக் ஒபாமா ( இன்றைய அமெரிக்க அதிபர்) . இவர்களுக்கு கொடுத்தது சரியென்றால் காந்தியடிகளுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து அவரைக் கௌரவப்படுத்திருக்க வேண்டும்.ஆனால் காந்தியின் பெயர் நான்கு முறை  முன்மொழியப்பட்டு வழிமொழிகையில் அவர் கடைப்பிடித்த கொள்கையே அவருக்கு முன் நந்தி போலிருந்து அவருக்கு கிடைக்க இருந்த பரிசை தட்டிவிட்டிருக்கிறது.
       மகாராஷ்ரம் மாநிலத்தில் மகர் இனத்தவர்இன்றும் தாழ்த்தப்பட்ட மக்களே.இந்தியாவிடுதலைப்பெற்ற ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் அவர்கள் கல்வியில்பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கியே இருக்கிறார்கள்.மகாராஷ்ரம் மாநில அரசியலில் அவர்களால் தன்னுரிமையை நிலைநாட்டிக்கொள்ள முடியவில்லை.ஆனால் முதல் வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர்க்கான  பிரதிநிதியாக கலந்துக்கொண்ட அம்பேத்கார் அவர்களை இம்மாநாட்டில் கலந்துக்கொள்ளும் தகுதியற்ற நபரென்றும் மகர் இனத்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களே அல்ல என்றும் பிரிட்டீசாரிடம்தன் கருத்தை பதிவுச்செய்ய காந்தியடிகள் கொஞ்சமேனும் தயங்கவில்லை.
       ‘நவ இந்தியாபத்திரிக்கையில் தீண்டாமையை ஒழிப்பதே என்னுடைய முதல் இலட்சியம் என்றார் காந்தி. அந்தப்பத்திரிக்கையைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவைச்செய்ய அரிஜன சேவா சங்கம்என்கிற ஒரு தன்னார்வ சங்கத்தைத்தொடங்கினார். அந்தச்சங்கத்தில் தங்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பிக்கேட்டுக்கொண்டனர்.ஆனால் காந்தியடிகள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.நான் நடத்துவது அரிஜனங்களுக்குச் சேவை செய்வதற்குத்தான்.ஆனால் அதில் உறுப்பினர்களாக அரிஜனங்களைச் சேர்த்துக்கொள்ள முடியாதுஎன்று அவர்களை நிராகரித்துவிட்டார். இந்த நிராகரிப்புதான் அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கான காரணமாக கருதப்படுகிறது.
       1937, 1938, 1939 , 1947 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் நோபல் விருதுக்காக அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 1937ல் காந்தியடிகள் விருதை அளிக்கும் நார்வேயின் கமிட்டியினாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேர்களில் ஒருவராக இருந்தார்.எனவே அவருடைய பெயர் அந்த வருடம் பரிந்துரைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை.அடுத்தடுத்த வருடங்கள் அவருடைய பெயர் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதற்கு காந்தி தீண்டாமை மீது கொண்டிருந்த கொள்கையே காரணம் என்றார் நார்வே நாடாளுமன்ற நோபல் கமிட்டியின் ஆலோசகரும், பேராசியரியருமான ஜாகப் வாம் முல்லர் . அவர் காந்தி மீது வைத்த விமர்சனம் இதுதான்: அவர் நல்ல உயரிய நல்லொழுக்கமும், தன்னடக்கமும் உடையவர். இந்திய மக்களின் அன்பிற்கும் , மரியாதைக்கும் உரியவர். சர்வாதிகாரம் படைத்தவர்.சுதந்திர போராட்ட வீரர்.முழுமையான தேசியவாதி.இந்திய மக்களின் மீட்பர் என்பதிலெல்லாம் எந்தவித சந்தேகமும் இல்லைஎன்ற போதிலும் மக்களை பிரித்துப்பார்ப்பதில் அவர் ஒரு சாதாரண அரசியல்வாதிபார்க்க-( நியூ சண்டே எக்ஸ்பிரஸ் - 8.10.2005 மற்றும் வட்ட மேசை மாநாடும் பூனா ஒப்பந்தமும்  - அன்பு பொன்னோவியம் ).
       கொள்கை ரீதியில் பார்க்கையில் காந்தியடிகளும் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் எதிரெதிர் துருவங்கள்.காந்திஅரிஜன மக்கள் கடவுளின் குழந்தைகள்என்றார். அதற்குஅம்பேத்கர்அப்படியென்றால் மற்றவர்கள் யாருடைய குழந்தைகள் ?‘ எனக் கேள்வி எழுப்பினார். காந்தி அரிஜன மக்களை பாவமாகப்பார்த்தார்.அம்பேட்கர் கோபமாகப்பார்த்தார்.காந்தி தாழ்த்தப்பட்ட மக்களும் இந்து பிரஜைகளே என்றார்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய பிரஜைகள் என்றார்.தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் இருவர்களின் வடிவடிங்கள் வேறு வேறு.காந்தியடிகள் அளவிற்கு அம்பேத்கர் சுதந்திரப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.காரணம்தாழ்த்தப்பட்ட மக்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதைவிட உயர் சாதியினரின் அடிமைப்பிடியிலிருந்து விடுதலைப்பெற வேண்டும் என்பதே அவரது  கனவாக இருந்தது.
       காந்தியடிகள் கொண்டிருந்த தவறான கொள்கைப்பிடிப்பு ஒன்று உண்டு.எந்தப்போராட்டம் என்றாலும் தானே தலைமைத்தாங்க வேண்டும் என்பது.ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய அரசிற்கு எதிராக காந்தியடிகள் தலைமைத்தாங்கி போராடுகையில் பல்வேறு இயக்கங்களை நடத்தி்க்கொண்டிருந்த  தலைவர்கள் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததைப்போன்று இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப்போராட்டத்தைத் தவிர்த்து மற்றப்போராட்டங்களுக்கு காந்தியடிகள் கொஞ்சமேனும் ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.
இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டி எகிப்து வாழ் இந்தியர்களும், பர்மா வாழ் இந்தியர்களும், தென் ஆப்பிரிக்கா வாழ் இந்தியர்களும், உலகத்தில் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களும் பல்வேறு கட்ட  போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் உண்மையான இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது இந்தியாவில் சுதந்திரத்தை பறிக்கொடுத்து அடிமையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்தியாவில் வாழும் இந்தியர்கள் எடுக்கும் போராட்டமே உண்மையான போராட்டமாக இருக்க முடியும் என்பதை உணர்ந்தும் தலைமைத்தாங்கவும் காந்தியடிகள் முன்வந்தார் என்றால்  தாழ்த்தப்பட்டவர், தமக்கான  உரிமைகள் கேட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒருவர் தலைமைத்தாங்கி போராடுவதை அவர் ஆதரித்திருக்க வேண்டும். அம்பேத்கரின் முன்வடிவ போராட்டத்திற்கு அவர் குரல் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா!.அதுவே சரியான முன்உதாணமாக இருந்திருக்கும்.அதைவிடுத்து அவரும் அவர் தலைமையில் ஒரு போராட்டத்தை கையில் எடுத்ததன் மூலம் அவர் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டார் என்கிற விமர்சனம் இன்று வரை அவர் மீது உண்டு.
        அம்பேத்கர் அவர்களும் காந்தியடிகளும் முதல்முறையாக சந்தித்துக்கொண்ட இடம் பூனா. தாழ்த்தப்பட்ட மக்களுக்களிக்கப்பட்ட உரிமையை பறிக்கச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த  காந்தியடிகளை சமரசத்தின் பேரில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சந்திக்கிறார். இதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு.அந்த சந்திப்பு இந்தியாவிற்கு கற்பிக்கும் பாடம் வேறுவகையானது .
       அவர்களின் சந்திப்பின் போது காந்தியடிகள் மேல்தட்டு வர்க்கத்தினர் அணியும் கோட், சூட் ஆடைகளைக் களைந்து  பாமர மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அணியக்கூடிய பக்கிரி ஆடையில் இருந்தார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட ஆடைகளைக்களைந்து  உயர் வகுப்பினர் அணியக்கூடிய கோட், சூட் ஆடைக்குத் திரும்புகிறார். இவ்விரு எதிர் துருவங்களும் ஓரிடத்தில் ஓர் நேர்க்கோட்டில் சந்தித்துக்கொள்கிறார்கள்.இவர்களுடைய ஆடைகள் இந்த உலகிற்கு சொல்லும் செய்தி என்ன?.
உயர் சாதியினர் அவரவர் சாதிப்பிடியிலிருந்து சற்று இறங்கி வரவேண்டும்.தாழ்ந்த சாதியினர் சாதிப்பிடியிலிருந்து விடுவித்து கல்வியால், பொருளாதாரத்தால் முன்னேற வேண்டும்.இறங்க வேண்டியவர்கள் இறங்கி வருகிறார்களா...? முன்னேற வேண்டியவர்கள் முன்னேறுகிறார்களா...?


8 கருத்துகள்:

  1. நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஏட்டுச்சுரைக்காய்தான். கறிக்குதவாது.நடைமுறைக்கு ஒத்து வரும் செயல் திட்டங்களை யாராவது சொல்லமாட்டார்களா என்று காத்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா! பல தகவல்களை விரிவாக தந்தமைக்கு நன்றி!!

    ஐந்து வயது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது, சாதிகள் இல்லையடி பாப்பா எனும் ஆசிரியர்தான் அதே குழந்தையிடம் சாதியை கேட்டு அது எவ்வளவு படிப்பு படித்தாலும் கூடவருகிறது! பிஞ்சு மனதில் ஊட்டிய பழக்கம் எப்படி அடுத்த கீழனவர்களுன் ஒட்டி உறவாட இடம்தரும்!! பிரச்சனையே அங்குதானே ஆரம்பிக்கிறது! குழந்தைகளிடம் நாம் சாதி வடுகூட தெரியாமல் வளர்த்தால் சாகும்வரை அவன் எந்த சாதி இருக்கிறது என்பதை பார்க்கமாட்டான்! நம்மில் எத்தனை சதவிகிதம் இதற்கு முன்வருவோம்? மேலானவர் கீழானவர் என்பது நாமாக நம் வசதிக்கு பிரித்துக்கொண்டதுதான் என்பது என் கருத்து! தவறாக இருப்பின் மன்னிக்கவும் அய்யா!!

    பதிலளிநீக்கு
  3. நண்பரே
    கல்வி என்னும் பேராயுதத்தை ஏந்தினால் மட்டுமே
    ஏற்றத் தாழ்வுகளை களைய முடியும்.
    புதுகையில் தங்களைச் சந்தித்ததில்
    மிகுந்த மகிழ்ச்சி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நண்பரே
    சிந்திக்க வைக்கும் கட்டுரை.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. சற்றே சிந்திக்க வைக்கும் கட்டுரை. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சற்றே சிந்திக்க வைக்கும் கட்டுரை. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. Thiru.Palani.Kanthasami ayya avarkaludiya karuthai maruppatharku mannikkavum. Avarathu anupavathaivita en vayathu siriyathu. Suraikkaai aettil ullathu. Aanaal athai physicalaaka kontuvara mudiyum. Atharkaana vazhithaan azhakaaka 'Porulthedu, uyarnilaiyadai' entru merkol kaattappattullathu. Vazhikalai naam aerpatuthi tharaventum.

    பதிலளிநீக்கு
  8. சரியான அலசல்.இன்னும் தீண்டாமை ஒழியவில்லை என்பதும் உண்மையே

    பதிலளிநீக்கு