வியாழன், 15 அக்டோபர், 2015

சாதிபூனையும்சமூகநீதியும்
                - ரவிக்குமார் - நன்றி   அம்ருதா

     நான்  ஒரு அமைதி விரும்பி
     எதன் பொருட்டும் அதை இழக்கமாட்டேன்

     நான் ஒரு பூனை வளர்த்தேன்
     ஒரு கோழியும் வளர்த்தேன்
     பூனைக்கு நானே பால் ஊற்றி வைப்பேன்
     கோழி தன் தீனியைத்தானே தேடும்

     இரண்டின் மீதும் அன்பு எனக்கு
    
     நான் சாப்பிடும்போது பூனை உரசும்
     கவளம் ஒன்று வைக்காது போனால்
     கத்திக்கத்தி கவனத்தை ஈர்க்கும்
     கோழிக்கூண்டைக்காலையில் திறந்தால் தானே வந்து இரவில் அடையும்

     இரண்டின் மீதும் சம அன்பு எனக்கு
    
     முட்டை வைத்து அடைகாத்து
     குஞ்சு பொரித்து கோழி
     பாலைக் குடித்துச் சோற்றைத் தின்று கொழுகொழு வென்றிருந்தது பூனை

     நள்ளிரவொன்றில் சப்தம் கேட்டு
     தூக்கம் கலைந்து துடித்து எழுந்தேன்
     கோழிக்கூண்டில் தான் ஒரே களேபரம்
     குஞ்சுகளையும் கோழிகளையும் அடித்துத்தின்ன துரத்துகிறது பூனை

     வந்தது கோபம்
    
     தடியை எடுத்தேன் போட்டேன் ஒன்று
     குறி தவறி கோழி சுருண்டது
     மதிலுக்கு அப்பால் பூனை பாய்ந்தது
     குய்யோ முறையோ வெனக் குஞ்சுகள் சத்தம்
     ஒண்ணு ரெண்டு மூணு நாலு
     போட்ட போட்டில் எல்லாம் காலி
    
     அமைதி திரும்பியது
     தூக்கம் சுழற்றியது

     நானோ அமைதி விரும்பி
     எதன் பொருட்டும் அதை இழக்கவே மாட்டேன்


                

2 கருத்துகள்: