செவ்வாய், 21 மார்ச், 2017

மருதாணிக் கவிதைகள் - சின்னவள்

என் வீட்டில் பெரியவள் , சின்னவள் என்று இருவர் இல்லை. மீரா.செல்வக்குமாரின் ' சின்னவள்  ' என்கிற கவிதைத் தொகுப்பை வாசித்ததும் என் மனைவியை பெரியவளாக்கி என் மகளை சின்னவளாக்கிக்கொண்டேன்.
சிப்பியின் வாயிற்குள் விழும் மழைத்துளி முத்தாகிவிடுவதைப் போல இந்நூலினை வாசிக்கையில் என்னையும் அறியாமல் என் மனைவியும்  மகளும் அவ்வாறு ஆகிவிட்டிருந்தார்கள்.

இந்நூல் கவிஞரின் முதல் நூல். முதல் நூலுக்குரிய  தடுமாற்றம் இருக்கவே செய்கிறது. நூலில் அணிந்துரை என்கிற அணிகலன்  இல்லாமல் இருக்கிறது. சிலருக்கு அணிகலன்  இல்லாத  கழுத்துதான்  அழகாக இருக்கும். அந்த வகையில் இந்நூலிற்கு அணிந்துரை என்கிற அணிகலன் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் என்னுரை இல்லாத தொகுப்பு என்பது திருகாணி இல்லாத தோடு இல்லையா! இந்தச் சுட்டிக்காட்டலை கவிஞர் ஏற்க மறுக்கக்கூடும். ஒரு வேளை மறுத்தால் சின்னவளிடம் திருத்தொண்டனாக அடிப்பணிவதைத்தவிர வேறு வழித் தெரியவில்லை எனக்கு.

சின்னவள் கவிதைகளை வாசிக்கையில் பெரியவள்களுக்கு பொறாமை வரவேச் செய்யும். அப்படியான ஈரம் கவிதைகளில். ஒவ்வொரு கவிதையும் மருதாணியைப்போல மனதில் ஒட்டிக்கொள்கிறது.

உயிராடை என்றொரு கவிதை.

கால்ச் சட்டைகள்
எதுவும்
மிஞ்சுவதில்லை
எனக்கு...

மேல்ச் சட்டைகள் சிலவும்
அபகரிக்கப்பட்டிருக்கிறது
சின்னவளால்...

நேற்றைய
ஒரு வெளியூர்
பயணத்தின் இடையே
என்ன உடை
வேண்டுமென்றேன் ...

எனக்கொன்றும்
வேண்டாம்....
நல்லதாய்
உனக்கு
எடுத்துக்கொள்
என்கிறாள்.

இக்கவிதையை வாசிக்கையில் தாத்தா கால்ச்சட்டையை உடுத்திக்கொண்டு பள்ளிச்சென்ற நினைவு எனக்குள் தொட்டில் ஆட்டியது. ஏதேனும் புதுச்சட்டை எடுத்தாயா..எனக்கேட்கும் என் அப்பா நான் 'ஆம் ' என்றதும்  என் பழைய சட்டையில்  ஒன்றை எடுத்துச்செல்லும் நிஜம்; மனதிற்குள் பசபசத்தது. கவிஞர் சின்னவளுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் ஆடை உயிராடை. அதே ஆடை வாசகனுக்கும் எனக்கும்  உறவு ஆடையாகிறது.

இன்னொரு கவிதை மதிப்'பெண்'ணை பெண்ணாக உருவகப்படுத்தி மதிப்பெண்கள் பாடாய் படுத்தும் பாட்டை பாடி நிற்கிறது.

சின்னவள்
ஒருபோதும் காட்டியதில்லை
மதிப்பெண் பட்டியலை

என்ன பிரிவென்பதும்
தெரியாதெனக்கு

அவள் அம்மாவினால்
அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்

மெல்லச் சொல்லிவிட்டுப்
போகிறேன்

இனி என்னிடம் வா...
எத்தனை கையெழுத்து வேண்டும்..?

  இக்கவிதை கவிஞரை அடையாளப்படுத்தக்கூடிய கவிதையாக இருக்கிறது.


அப்பூதி அடிகள் குறித்து ஒரு கவிதை மெக்காலே கல்விமுறையினூடே மனனக்கல்வியை விமர்சிப்பதாக இருக்கிறது. அதன்வழியே அவரது  கரங்கள் சின்னவளிடம்  திருத்தொண்டனாகிறது.

 அப்பூதிகளிடம் கவிஞர் முரண்பட்டு நிற்கிறார். ஆனாலும் தொகுப்பின் வழியே  கவிஞரை அப்பூதி அடிகளாகவே பார்க்கத்தோன்றுகிறது. இருவருக்கான ஒற்றை  முரண் அப்பூதி அடிகள் தான் பெற்ற,  பார்த்த  , பயன்படுத்தும் அத்தனையையும் திருநாவுக்கரசராகப் பாவித்தார். ஆனால் கவிஞர் சின்னவளாகப் பார்க்கிறார்.

சின்னவள் கவிஞரின் முதல் குழந்தை . வாசகர்களின் இன்னொரு  தாய்.
   




.

6 கருத்துகள்: