சனி, 4 மார்ச், 2017

தூயன் - முகம்
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வயது 30. இவர் சிறுகதை எழுதத் தொடங்கி மூன்று வருடங்கள்தான் ஆகிறது. இவரது முன்மாதிரியான எழுத்தாளராக அசோகமித்ரனை கைக்காட்டுகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இருமுகம். இந்நூலனை அவர் ‘ ஜெயமோகனுக்கு சமர்ப்பணம் ’ செய்திருக்கிறார்.
இவரது கதை பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைகளையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும்படியாக இருக்கிறது.
‘ முகம்’ என்கிற கதை மிக முக்கியமானது. பன்றி வளர்ப்பவர்களின் குடும்பங்களை மிக அருகிலிருந்து பார்த்து, கவனித்து, உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் கதையாக இருக்கிறது. பன்றி வளர்ப்பவர்களிடம் அவர் தோழமைக் கொண்டிருப்பதும், நெருங்கிப் பழகுவதும், பன்றி வளர்க்கும் இடம், அடைக்கும் இடம் இவற்றை அத்தனை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார். கதையில் பன்றியால் கதாப்பாத்திரத்தின் குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட வீட்டிற்கு வரும் பன்றிகளை ரகசியமாகப் பிடித்து கழுத்தை அறுத்து கொன்றுப்புதைக்கிறார். பன்றியை அவர் அவ்வாறு கொன்றுப் புதைப்பதற்கு அக்கதைப்பாத்திரம் நியாயமான காரணத்தையும் வலுவான உட்கிடக்கையும் கொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் கதாபாத்திரம் பன்றி வளர்ப்பவள் ஒருத்தியின் மீது காதல் பிறக்கிறது. ஒரு நாள் காதல் மயக்கத்தில் அவளைப் புணர்ந்ததற்குப் பிறகு அவன் கொன்றுப் புதைத்த பன்றிகளைப் பற்றிச் சொல்கிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியுறும் காதலி அவனிடமிருந்து சட்டென விலகுகிறாள். இதற்கு பிறகு ஓரிரு பத்தியில் கதை உக்கிரமானதாக முடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பன்றி வளர்ப்பவர்களால் மர்ம உறுப்பில் உதைக்கப்பட்டு கதாப்பாத்திரம் கொல்லப்படுகிறான்.
இக்கதை விளிம்பு வாழ் மக்களின் பிரச்சனைகளை பேசுவதுடன் தான் வளர்க்கும் இனம் தன் காதலனால் அழிவதைக் கேள்விப்பட்டதும் காதலனிடமிருந்து அவள் தூரம் விலகுவது அவளது வாழ்வியல் சூழலை மிகச் சரியாகக் காட்டி நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் சிறுகதை இளம் எழுத்தாளர்களில் மிகவும் கவனிக்கும் படியான எழுத்தாளராக பரிணமிக்கும் தூயன் அடுத்தடுத்த படைப்புகளால் அவர் வேறொரு தளத்திற்கு செல்வது உறுதி.
இவருடைய மற்றக் கதைகளைக் கவனிக்கையில் சொற்களஞ்சியம் பெருகி தழம்புகிறது. அவ்வளவாக யாரும் பயன்படுத்தாத சில சொற்களை பயன்படுத்துவது ஆரோக்கியமனதாக இருக்கிறது. தனக்குத் தெரிந்ததை அவ்வளவு நேர்த்தியாக, அழகாக பக்கங்கள் என்கிற வரம்பிற்குள் சிக்கிக்கொள்ளாமல் பரந்து எழுதும் எழுத்தாளராக இருக்கிறார். அதே நேரம் இவர் வழக்கமாக இளம் எழுத்தாளர்களிடம் காணப்படும் யாருக்காக எழுதுகிறோம்...என்கிற தடுமாற்றம் இவருக்கும் இருக்கவே செய்கிறது. இத்தகையத் தடுமாற்றம் சில படைப்புகளின் வழியில், அதன் மீதான விமர்சனங்களால், அவரையும் அவற்றையும் அடையாளப்படுத்தவே செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக