வியாழன், 9 பிப்ரவரி, 2017

சவப்பெட்டி

காக்கை பிப்ரவரி  இதழில் பிரசுரமாகியிருக்கும் சிறுகதை
அப்பாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த நாட்கொண்டு இரு வேறு செய்திகள் எனக்கு வந்துகொண்டிருந்தன. அதில் முக்கியமானச் செய்தி அப்பாவின் ஆரம்பக்கால உதவியாளர் சேதுராமன் சொன்னச் செய்தியாக இருந்தது. அப்பா மீது வைத்திருந்த நன்மதிப்பின் பேரில் அவர் அந்த செய்தியைச் சொல்லியிருந்தார். அச்செய்தியைச் சொல்கையில் அவருடைய நா தழதழத்ததை விடவும் அச்செய்தியை உள்வாங்கிய என் ஒற்றைச் செவி நடுங்கிற்று. அவர் ஒரு கெஞ்சிய முன் கோரிக்கையுடன் அச்செய்தியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். விக்கல் எடுப்பதைப்போன்று வார்த்தைகளை உருட்டினார். ‘ தம்பி நான் சொன்னேனு மட்டும் யார்க்கிட்டேயும் சொல்லிடாதீங்க. நான் உயிரோடு இருக்க முடியாது. உன் அப்பா ஆஸ்பஸ்திரியில சேர்த்த மறுநாளே இறந்திட்டார்ப்பா. அதற்குப்பிறகும் உன் அண்ணன்கள் உன் அப்பாவிற்கு வைத்தியம் பார்த்திக்கிட்டிருக்கான்க. உனக்கு எதிராக என்னவோ சூழ்ச்சி நடக்குதப்பா....’ இதை அவர் சொல்லி முடிக்கையில் அவரது வார்த்தைகள் எனக்குள் கனத்தன.
அப்பா இறந்துவிட்டார் என்கிற செய்தியை விடவும் இறந்ததற்கு பிறகும் உன் அண்ணன்கள்  வைத்தியம் பார்க்கிறான்க....என்கிற செய்திதான் என்னை பெரிதும் உலுக்கியது.
துக்கத்திற்குள் ஏமாற்றம் நுழைந்து அரித்தது. அப்பா இருக்கின்ற திருச்சிக்கும் நான் இருக்கிற லண்டனுக்கும் இடையில் மூன்று நீரோட்டக் கடல் இருக்கிறது. ஒரு நாள் முழுக்கவும் பறந்து தரையைத் தொட வேண்டிய விமானத்தூரத்தை என் நினைவுகள் லண்டனுக்கும் திருச்சிக்கும் இடையில் செல்வதும் திரும்புவதுமாக இருந்தது. இரத்தவோட்டம் கடலடி வெப்ப நீரோட்டத்தைப்போல ஓடிக்கொண்டிருந்தது .
நான் அணைத்து வைத்திருந்த அலைபேசியை எடுத்து அண்ணன்களுக்கு அழைப்பு விடுத்தேன். சேதுராமன் சற்று நேரத்திற்கு முன் சொல்லி வைத்த செய்தி உண்மையாக இருந்துவிடக்கூடாது என்கிற உள் வேண்டுதலுடன் என் அழைப்பு நீண்டுகொண்டிருந்தது. ஒன்றிரண்டு அழைப்புகளுக்கு பிறகு அக்காள் குரல் என் செவியில் விழுந்தது. அழைப்பை எடுத்ததும் அவள் பேசிவிடவில்லை. அவளது அமைதியுடன் கூடிய சுவாசக்காற்று என் காதிற்குள் தகித்தது. அவளது அமைதியும் இழுத்துவிடும் சுவாசமும்  என்னை கலவரப்படுத்தின. சேதுராமன் சொன்னச் செய்தி உண்மைதானோ....? அப்பா இறந்துதான் விட்டாரோ...? கேள்விகள் எனக்குள் கொம்பு முளைத்து தலையைச் சிலுப்பின.
‘ அக்கா... அப்பா எப்படி இருக்கார்...?’
‘ இம்.....நல்லா இருக்கார்....’
என் சிந்தனை முள் ஒரு புள்ளியில் நின்றது. பிறகு அப்படியும் இப்படியுமாக அசைந்தது. பிறகு ஓடத்தொடங்கியது. ‘ அக்கா... உண்மையைச் சொல். அப்பா எப்படியிருக்கார்....அவருக்கிட்ட நான் பேச வேணும்...’
‘ அப்பா நல்லா இருக்கார். ஆனால் அவருக்கிட்ட இப்போதைக்கு பேச முடியாது...’
‘ ஏன்....?’
‘ நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்...’
‘ அப்பா கூட யார் இருக்கா...?’
‘ யாருமில்ல...’
‘ உதவிக்கு..!’
‘ நர்ஸ்க பார்த்துக்கிறாங்க...’
‘ சாப்பாடு கொடுக்கிறது....பணிவிடை செய்றதெல்லாம்...?’
‘ நர்ஸ்க தான்....’
‘ அப்பாவை நீ பார்த்தீயா...?’
‘ பார்த்து ஒரு மாதக்காலம் ஆச்சுப்பா...’
‘ ஏன் அவ்ளோ நாளாச்சு....!’
‘ நர்ஸ்ங்க யாரையும் உள்ளே விட மாட்டேங்கிறாங்களே. ’
‘ அப்பாக்கிட்ட யாருமே இல்லையா...?’
‘ பெரிய அண்ணன் மட்டும் இருக்கு...’
அக்காள் சொல்லும் எதையும் என்னால் நம்ப முடியவில்லை. இத்தனை நாள் சொன்ன அதே பதில்களைத் தான் அப்பொழுதும் சொன்னாள். முந்தைய பதில்களுக்கு இல்லாத கனம் இப்பொழுது இருந்தது.
‘ அக்கா....எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போலிருக்கு....அப்பாவை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பி வை..’
‘ நர்ஸ்கள் தான் யாரையும் உள்ளே விட மாட்டேங்கிறாங்களே....பிறகு எப்படியாம் போட்டோ எடுக்கிறது...?’
‘ நர்ஸ்க்கிட்ட சொல்லி எடுக்கச்சொல்லு...’
‘ நர்ஸ்க்கிட்ட என்னக் கேட்க முடியுது. எரிந்து விழுறாங்க....’
அக்காவின் பதில்கள் என்னை பயமுறுத்தின. என்னால் ஓரிடத்தில் இருப்புக்கொள்ள முடியவில்லை. அப்பா உண்மையாகவே இறந்துதான் விட்டாரோ...மூன்று பேரும் சேர்ந்து அப்பாவின் மரணத்தை மூடி மறைக்கிறார்களோ....என் சிந்தனை ஓட்டம் புருவங்களுக்கிடையில் குவிந்து மனதில் கனத்தது.
அப்பாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்த நாட்கொண்டு எத்தனை அழைப்புகள் எனக்கு. ‘ அப்பா தேறிவிட்டார்...’
‘அப்பாவைப் பற்றி இனி கவலையில்லை...’
‘ பணம் அனுப்பி வை ’
‘ போதாது’
‘ இந்த நம்பருக்கு அனுப்பு’
‘ இன்னும் கொஞ்சம் அனுப்பு...’
இப்படியாக எத்தனையோ அழைப்பு, கெஞ்சல்கள், கோரிக்கைகள்.
ஒவ்வொரு முறை நான் பணம் அனுப்பும் பொழுதும் நம்பிக்கைக்குரியவர்களிடம் விசாரித்தப் பிறகுதான் அனுப்பி வைத்தேன். ஒரு உறவினர் இப்படி சொன்னார் ‘ உன் அப்பா சுகமாக இருக்கார்’
‘ நீங்க அப்பாவைப் பார்த்தீங்களா...?’
‘ பார்க்க முடியலை. டாக்டர் சொன்னார்....’
ஒன்றுவிட்ட உறவு அத்தையிடம் விசாரித்தேன். ‘ நல்ல இருக்கார்ப்பா...’
‘ பார்த்தீங்களா...?’
‘ இல்லையேப்பா...நான் ஆப்பிள் அது, இதென நிறைய வாங்கிக்கிட்டு போனேன். அத்தனையையும் வாங்கிக்கிட்டு என்னை வெளியே அனுப்பிட்டாங்க...’
அடுத்து என்னுடன் படித்த சிதம்பரம், முத்து, வேலக்கண்ணு எனப் பலரிடமும் அப்பாவைப்பற்றி விசாரித்து பார்த்துவிட்டேன். அத்தனைப்பேரிடமிருந்து ஒரே பதில்தான் வந்தது.. ‘ நல்லா இருக்கிறார்..ஆனால் நான் பார்க்கலை...’
அப்பாவிற்கு போட்டியாக தொழில் செய்தவர்களெல்லாம் அப்பாவை பார்க்க வந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை. தலித் மக்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் வாசலோடு நின்று திரும்புவதைப்போல அவர்கள் நின்று திரும்பி சென்றிருக்கிறார்கள். நான் பெரிய அண்ணன் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தேன். பெரிய அண்ணன் எதோ ஒரு நாளுக்கு பிறகு பேச்சை முற்றிலும் நிறுத்தியிருந்தார். அவருக்கு எப்பொழுது அழைப்பு விடுத்தாலும் அக்காள்தான் எடுத்து பேசுபவளாக இருந்தாள். அக்காள் மீது எனக்கு கோபம் வந்தது. அதுநாள் வரைக்கும் காட்டாத உச்சப்பட்சக் கோபத்தைக் அவள் மீது காட்டினேன். ‘ அப்பாவிற்கு என்ன பிரச்சனை. டாக்டர் என்னச் சொல்கிறார்...?’
‘ காய்ச்சல்தானாம்...’
‘ இப்ப எப்படி இருக்கார்..?’
‘ நல்லா இருக்கார்...’
‘ எப்ப டிஸ்ஜார்ஜ்....?’
‘ ஒரு வாரமாகுமாம்....’
‘ ஏன் அவ்ளோ நாள்...?’
‘ வைரஸ் காய்ச்சலாம். தொற்றுமாம். அதனால் ஓய்வில் இருக்கணும்ங்கிறார்....’.
இப்படியாக என்னக் கேள்விக் கேட்டாலும் நான் நம்பத் தகுந்த தகவலையே சொல்லிக்கொண்ட வந்தவள்; ஒரு நாள் நடுநிசியில் அழைத்து அழுகைக்கு இடையில் ‘ தம்பி...அப்பா  நம்மள விட்டுட்டு போயிட்டாருடா....’ என்றதும் சேதுராமன் சொன்ன அந்த ரகசியம்தான் என் முன் வந்து நின்றது.
நேற்றைக்கு இதே அக்காள்தான் சொன்னாள். ‘ நன்றாக இருக்கிறார், செய்தித்தாள் வாசிக்கிறார், சாப்பிடுகிறார், எல்லாரையும் நலம் விசாரிக்கார்,...’ ஆனால் இப்பொழுது சொல்கிறாள் ‘ அப்பா இறந்திட்டார்....’
நான் அக்காவிடம் கேட்டேன். ‘ நேற்றைக்கு வரைக்கும் நல்லா இருக்கார்னு சொன்னீயேக்கா....?’
‘ இருந்தார்....திடீர் அட்டாக். போயிட்டார்ப்பா...’அவள் குலுங்கி அழுதது என்னை குலுக்கியது. என் உதடுகள் தடித்தன. அலைபேசியை காதிலிருந்து எடுக்காமல் உறைய நின்று போனேன்.
அப்பா என்னுடன் லண்டனில் இருந்த காலம் வரைக்கும் அவருக்கு ஒரு பிரச்சனையும் இருந்ததில்லை. ஒரு மாத்திரையால் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் நிலையில் தான் அவரது உடல்நிலை இருந்தது. நன்றாக நடந்தார். சிரித்தார். பேசினார். லண்டனில் இருந்தவாரே சொந்த நாட்டில் நடக்கும் வியாபாரத்தைக் கவனித்துகொண்டார். அவரது நடை உடை பேச்சு இவற்றை வைத்துப்பார்க்கையில் இப்போதைக்கு அவரை எந்தவொரு நோயும் அவ்வளவு எளிதில் நெருங்கிவிடாத நிலையில்தான் இருந்துவந்தார். திருச்சிக்கு சென்றதும் திடீர் நோய்த்தொற்றும் அதன் வழி மரணமும் என்னை பெருதும் முடக்கியது.
அப்பா பெயரில் எவ்வளவு சொத்து இருக்கிறது! அவரது வங்கிக் கணக்கில் பல கோடிகள் புரண்டும், இருந்தும் அப்பாவைக் காப்பாற்ற முடியாத ஏமாற்றம் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. அப்பாவிற்கு தெரிந்து எத்தனை நண்பர்கள், எத்தனை மருத்துவர்கள்.....இத்தனைப் பேர் இருந்தும் அவர்களில் யாரேனும் ஒருத்தரை வர வழைத்து சிகிச்சைக் கொடுக்க முடியவில்லையே என்கிற கவலை எனக்குள் குறுகுறுத்தது.
அப்பாவின் மரணத்தில் என்னவோ ஒரு மர்மம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. அப்பா உயிருடன் இருந்திருந்தால் இத்தனை நாட்களில் எத்தனையோ முறை என்னிடம் அவர் பேசியிருக்கச் செய்வார். என்னைப் பார்த்தாக வேண்டுமென அடம் பிடித்திருப்பார். என்னை வரவழைத்திருப்பார்.
அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு மூன்று மக்கள். இரண்டு அண்ணன்கள், ஒரு அக்காள். இரண்டாம் மனைவிக்கு ஒரே மகன் நான். முதல் மனைவியின் மக்களை விடவும் என் மீதுதான் அவருக்கு பற்றுதலும், பாசமும் இருந்தது. எனக்கு பிறகு நீதான் என் தொழிலை எடுத்து நடத்த வேண்டுமென பல விருந்து உபசரிப்புகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தொடக்கத்தில் அவரது தொழில் தொடர்ந்து நஷ்டத்தில் மூழ்கி வந்திருக்கிறது. நான் பிறந்ததற்கு பிறகுதான் அவரது தொழில் ஏறுமுகமானது. ஆகையால் தொழிற்வாரிசாக என்னை தொடர்ந்து உச்சரிப்பவராக இருந்தார். அவர் சங்கத் தலைவராக தேர்வானதும் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதும் என் பிறப்பிற்கு பிறகுதான்.
நான் அலைபேசிக்கு  பெரிய அண்ணன் வந்திருந்தார். நான் தொடுத்ததும் சொன்னேன் ‘ அண்ணா... மருத்துவமனை மீது வழக்கு தொடுக்கலாம்...’
‘ இத்தனை நாள் சிரத்தை எடுத்து அப்பாவிற்கு வைத்தியம் பார்த்ததற்காகவா....?’
அண்ணனின் பதிலொற்றியக் கேள்வி என்னை எச்சரித்தது. அவரே கேள்விகள் கேட்டார். பதிலையும் சொல்லிகொண்டார். நான் பேசுவதாக இருந்த அத்தனை சொற்களையும் மாத்திரை விழுங்குவதைப்போல விழுங்கிக்கொண்டேன்.
என் நண்பர்களில் பலரும் என் தொடர்புக்கு வந்தார்கள். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் என்னை பயமூட்டியது. ‘ உன் அப்பா என்னக்காரியம் செய்துவிட்டு செத்துப்போயிருக்கார் தெரியுமா...?’
‘ என்னச் செய்திருக்கார்....?’
‘ மொத்த சொத்துகளையும் மூத்த  தாரத்து பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு செத்துப்போயிருக்கார்...’
நான் லண்டனில் இருந்தபடியே ஒரு வழக்கறிஞரைப் பிடித்தேன். அவர் பிரபலமானவர். அவர் சற்று நேரத்திற்குள் என் தொடர்புக்கு வந்தார்.‘ பெரிய வீடு பெரிய மகன் பெயருக்கும் மற்ற இரண்டு வீடுகளும் சின்ன மகன், மகள் பெயருக்கும் எழுதப்பட்டிருக்கிறது’
‘ வங்கி இருப்பு..?’.
‘ மகள் பெயருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது...’
‘ நிலங்கள்...?’
‘ மொத்த நிலங்களும் முதல் மனைவியின் பி்ள்ளைகளுக்கே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது...’
‘ தொழிற் வாரிசு....?’
‘ அதைப்பற்றி ஒரு தகவலும் இல்லை...’
‘ என் அப்பாவா அப்படி எழுதியிருக்கார்....’
‘ ஆமாம்...’
‘ அப்பா பெயரில் அந்த உயில் இருக்கிறதா....?’
‘ ஆமாம் அவர் பெயரில்தான் எழுதப்பட்டிருக்கிறது...’
‘ கையெழுத்து போட்டிருக்கிறாரா....?’
‘ இல்லை. ரேகை வைத்திருக்கிறார்....’
‘ ரேகை செல்லுமா....?’
‘ சிகிச்சை எடுத்துகொண்டலவ்வா எழுதியிருக்கிறார். செல்லும்....’
இத்தனையையும் சொல்லிக்கொண்டு வந்த வழக்கறிஞர் கடைசியாகச் சொன்ன தகவல்தான் எனக்குள் கலவரம் மூட்டியது.
‘ ஒரு ரகசியச் செய்தி. உண்மையோ பொய்யோ.... உன் அப்பா சடலத்திற்கு மலர் மாலை வைத்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.....’
‘ என்ன...?’
‘ உன் அப்பாவின் இரண்டு கைகளில் ஒரு கை இல்லையாம்.....’
என் பாதம் என்னை நழுவிக்கொண்டு செல்வதைப்போலிருந்தது. ‘ என்னச் சொல்றீங்க. ஒரு கை இல்லையா...!’
‘ ஆமாம். வலது கை....’
‘ நீங்க பார்த்தீர்களா....?’
‘ யாரும் அவரது உடலுக்கருகில் செல்ல முடியவில்லை...’
‘ விரல்கள் கட்டப்பட்டிருக்கணுமே....’
‘ மேலே வேட்டி போர்த்தப்பட்டுள்ளது....’
எனக்கு தலைச்சுற்றியது. அப்பாவிற்கு நிகழ்ந்திருக்கும் அகோர மரணத்தை நினைக்கையில் என் இரத்தம் கொதித்தது. சுவற்றில் முட்டிக்கொள்ளணும் போலிருந்தது. என் உதவியாளன் ஓடி வந்தான். அப்பா மரணத்தின் மீது இருக்கும் மர்மத்தை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அக்காவிடம் தொடர்பு கொண்டேன்.
‘ அக்காள்...நான் வந்ததும் அப்பாவை அடக்கம் செய்யலாம்....’
‘ டிக்கெட் கிடைச்சிருச்சா....?’
‘ ம்...கிடைச்சிருச்சு....’
‘ வந்து சேர எத்தனை நாளாகும்....?’
‘ நான்கு நாளாகும்....’
‘ அவ்ளோ நாள் வரைக்கும் வைத்திருக்க முடியாது....’ அக்காவின் பதில் திடமாக இருந்தது. எனக்கு அவள் மீது கோபம் வந்தது. ‘ இத்தனை நாட்கள் வைத்திருந்தீர்கள். இன்னும் நான்கு நாளைக்கு எனக்காக வைத்திருக்க முடியாதா...?’
‘ என்னப் பேசுறாய் நீ....!’
‘ எல்லாம் எனக்குத் தெரியும். நான் வரும் வரைக்கும் நீங்கள் அப்பாவை அடக்கம் செய்யாமல் வைத்திருக்கத்தான் வேணும்.....’
‘ முடியாது. அடக்கம் செய்வதற்கான எல்லா வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கிறது’
‘ விடமாட்டேன்....’
‘ உன்னால் முடிந்ததைச் செய்துகொள்....’
தொடர்பு துண்டித்துகொண்டது. நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அலுவலகத்தின் நான்கு சுவர்களும் என்னை வெறிக்கப்பார்ப்பதைப்போலிருந்தன.
அங்கு இருந்தபடியே சில சட்ட நடவடிக்கைகளில் இறங்கினேன். அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தன. ஒரு மணி நேரத்திற்கு முன் என் வழக்கறிஞராக இருந்தவர் சற்று நேரத்திற்கு பிறகு விலை போயிருந்தார். இணைய வழி புகார் முதலில் ஏற்கப்பட்டு பிறகு நிராகரிக்கப்பட்டது. எனக்காக நேராகச் சென்று புகார் மனு கொடுக்கத் தயாரானவர்கள் சில மணிக்கு பிறகு பின்வாங்கிவிட்டார்கள். என்னுடன் தொடர்பில் இருந்த பலரும் என் அலைபேசி தொடர்பை துண்டித்துகொண்டார்கள். பலர் அவர்களது அலைபேசியை சில நாட்களுக்கு அணைத்து வைத்தார்கள். நான் வீட்டிற்கு சென்று சட்ட நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய ஒன்றைத் தவிர மற்ற அணைத்து வழிகளும் நிரந்தரமாக அடைக்கப்பட்டிருந்தன.
நான் நாடு திரும்புதலை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. லண்டனிலிருந்து சென்னைக்கு திரும்பியதும் நண்பர்களின் உதவியோடு சில நபர்களை கூட அழைத்துகொண்டு வந்தேன். எனக்குள் இரண்டு விதமான சிந்தனை ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நேராக வீட்டிற்கு செல்வதா, இல்லை அப்பாவை அடக்கம் செய்த இடத்திற்கு செல்வதா....? வீட்டிற்கு சென்றால் என்னவெல்லாம் நடக்கும்....? என்னால் வீட்டிற்குள் நுழைய முடியுமா...? அனுமதிப்பார்களா.....? அக்காள் என்னை கட்டிப்பிடித்து அழுவாளா...? அவள் அழுவதை நான் தடுக்க வேண்டுமா....? தடுக்க முடியுமா....?
ஊர் பங்காளிகள், உறவினர்கள் யார் பக்கம் நிற்பார்கள்...? நான் புகார் கொடுத்தால் யாரேனும் இரண்டு பேர் எனக்கு பக்கபலத்திற்கு வருவார்களா...? அப்பா கை பற்றிய விடயத்தைச் சொன்னால் என் புகார் ஏற்கப்படுமா...? சாட்சிக்கு ஒருவரேனும் கிடைப்பானா...? அவர்களை வைத்துகொண்டு மூன்று பேர்களை என்னால் எதிர்க்க முடியுமா...? சட்டம் என் பக்கமாகத் திரும்புமா...? குறுகிய காலத்திற்குள் மர்மத்தை உடைத்துவிட முடியுமா...? நிஜமாகவே அப்பாவின் இரண்டு கைகளில் ஒரு கை வெட்டி எடுக்கப்பட்டது உண்மைதானா...? அதை நம்பலாமா....? ஒரு வேளை நான் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வீண் என்றாகி விட்டால்....!
நான் திருச்சியை நெருங்கையில் இரவு ஒரு மணியை நெருங்கியிருந்தது. இந்நேரத்தில் வீட்டிற்கு செல்வதை விடவும் அப்பாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்வதே துரிதமென இருந்தது.
என் கூட வருகின்ற மூன்று பேருடன் ஊருக்குத் தெரியாமல் சுற்றி வளைத்து அப்பாவை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றேன். அவ்விடத்திற்கு செல்கையில் மணி மூன்று ஆகியிருந்தது. விடிவதற்குள் புதைக்குழியைத் தோண்டி எடுத்து சவப்பெட்டியை வெளியில் எடுத்து பிரித்து அப்பாவின் கையைப் பற்றிய ரகசியத்தை ஊர்ஜிதப்படுத்திவிட வேண்டும் என்கிற வேட்கையுடன் கையோடு கொண்டு வந்திருந்த மண்வெட்டியால் வெட்டிக் கொத்தினேன்.
ஒரு பக்கம் நரி ஊளையிடும் அரவம் எனக்குள் கலவரப்படுத்தியது. இன்னொரு பக்கம் நாய்களின் குரைப்பு. நான் எதையும் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. உடம்பில் வியர்வைகள் சொற்றிட மேட்டைக் கறைத்து புதைக்குழியைத் தோண்டினேன்.

பொழுது மெல்ல விடிந்துகொண்டு வந்தது. பொழுதின் வெளிச்சத்தில் சவப்பெட்டி தெரிந்தது. நான்கு பேரும் சேர்ந்து சவப்பெட்டியை மெல்லத் தூக்கினோம். சவப்பெட்டி மேலே வருவதும் வழுக்கிக்கொண்டு கீழே செல்வதுமாக இருந்தது. பொழுது முழுவதுமாக விடிகையில் சவப்பெட்டி என் பிடிக்கு வந்திருந்தது.
சவப்பெட்டி தரையில் வைத்து சவப்பெட்டி மேலிருந்த மண்ணை தட்டி விட்டேன். முகத்தில் வழிந்த வியர்வைகளை புறங்கையால் துடைத்துகொண்டு வேகமாக மூடியைத் திறந்தேன். சவப்பெட்டிக்குள் அப்பா இல்லை. பதிலாக மூன்று பெருச்சாளிகள் இருந்தன.
- அண்டனூர

7 கருத்துகள்:

  1. அருமை நண்பரே அற்புதமான ஜோடனை முடிவில் (ஊழல்)பெருச்சாளியா ? - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. Ha..ha...sari..sari...இங்கயும் அப்படிதான் இருக்குமோ..!!

    பதிலளிநீக்கு