வியாழன், 3 ஜனவரி, 2019

மூங்கில் வனம் - மூன்றடி கானம்

கோவையில்  ஒரு நிகழ்வில் கவிதை நூல் குறித்து பேசிய கவிஞர் இராகவன்  கவிதைகளான கவிதைகள் குறித்து பேசிய அவர் சில கவிதைகளை எடுத்தாண்டார். அதிலொரு கவிதை யானை குறித்த கவிதையாக இருந்தது.  அவர் ஒப்பித்த வேகத்திற்கு என்னால்  அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கவிதையின் ஒற்றைச் சொல் எனக்குள் தொண்டையில் சிக்கிக்கொண்ட மீன் முள்ளைப்போல வருடிக்கொண்டே இருந்தது. பழனி இலக்கிய சந்திப்பில் கிடைத்த புதிய நட்பான கூடல் தாரிக்கின் மூங்கில் வனம் தொகுப்பில் அக்கவிதை இருந்தது.



வனத்தையும் வாழ்வையும்
இழந்து
சபிக்கப்பட்ட யானையைத்தான்
ஆசிர்வதிக்க
நிர்ப்பந்திக்கிறான் பாகன்

இக்கவிதையில் யானையை வெறும் யானையாக மட்டும் நான் உள்வாங்கிக்கொள்ளவில்லை.  வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் நாளுக்கு நாள் இழந்து தவிக்கும் நம் வாழ்க்கைதான் யானையின் வாழ்த்தலாக இருக்கிறது.

கூடல் தாரிக்கின் மூன்றாவது தொகுப்பு இது.

கஜல் வடிவத்தில் எழுதப்பட்ட மூன்றடி நான்கடி சொற்பின்னலே மொத்தக் கவிதையும். அழகை வர்ணிக்கும் வானவில் வரிகள்.

மழையின் சாயலில்தான்
இருக்கிறார்கள்
கருணை கொண்ட
மனிதர்கள் யாவரும்

முதல் கவிதை மெல்லிய தூறலாய் மனதிற்குள் மாமழை பெய்கிறது. வாசிப்பவனை கருணையாளனாக கரைக்கிறது.

வேழம் வளைத்த
மூங்கிலென
சட்டென நிமிர்கிறாள் தலைவி
வனம் முழுவதும்
பிளர்கிறது அன்பு

கரைந்துண்ணும் அன்பை பிளிரச் செய்யுமிடத்தில் பேரருவமாகிறது அன்பு.  இப்படியாக அடிமேல் அடி எடுத்துவைக்கும் அழகால் வாசிப்பின் தாகத்தை மேலும் தாகமூட்டும் தொகுப்பாக வந்திருக்கிறது மூங்கில் வனம். நல்ல தொகுப்பு.
ஓவியா பதிப்பகம்.  ஆசிரியருக்கு எனது - ழ் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக