புதன், 29 ஆகஸ்ட், 2018

சத்ரபதி தாஜ்மகால்

சிறுகதை 

வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக வகுப்பறையின் கதவை இறுக அடைத்துகொண்டேன். மேல், கீழ் தாழ்ப்பாழ் இட்டுக்கொண்டேன். இத்தகைய இறுக அடைத்தல் எனக்குத் தேவையென இருந்தது. அருகாமை வகுப்புகளின் இரைச்சலிலிருந்து என் வகுப்பு மீளவும், என் சரித்திரப் போதனை அடுத்த வகுப்பிற்குக் கேட்காமல் இருக்கவும் இந்த கதவடைத்தலும் தாழ்ப்பாழ்கள் இடுதலும் எனக்கு தேவைப்பட்டிருந்தது.

நான் எந்த வகுப்பையும், எந்தப் பாடவேளையையும் யோகா இல்லாமல் தொடங்குவதில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகள் என் வகுப்பு மாணவர்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கும், நூறு சதம் தேர்ச்சி பெறுவதற்கும் காரணம் இந்த யோகாதான். நான் என்றேனும் ஒரு நாள் பாடம் நடத்தாமல் கூட இருந்துவிடுவதுண்டு. ஆனால் யோகா வகுப்பு நடத்தாமல்  இருந்ததில்லை. நான், என் வகுப்பிற்குள் நுழைகையில் என் வகுப்பு மாணவர்கள் தாமாகவே முன் வந்து யோகா செய்யத் தொடங்கிவிடுவார்கள். யோகாவிற்கு நான் ஒதுக்கும் நேரம் ஐந்து நிமிடங்கள். அவ்வளவே! யோகா முடிந்ததும் அடுத்து தேச நல உறுதிமொழி. நான் கண்கள் திறந்துவைத்துகொண்டு சொல்வதை மாணவர்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்வார்கள்.
‘ மாணவர்களாகிய நாங்கள்...’
‘ தேச நலனைக் கருத்தில் கொண்டு..’
‘ ஆசிரியர் சொல்லித்தரும் சரித்திரப் பாடத்தை கூர்ந்துக் கவனித்து...’
‘ அவருக்கு எந்தவொரு இடையூறும் கொடுக்காமல்...’
‘ சரித்திரத்தை ஏற்போம்...’
மாணவர்கள் கையை நெஞ்சில் வைத்தபடி சொல்லி முடித்ததும் கை, கால்களை உதறிக்கொண்டு எழுந்துவிடுவார்கள். அவர்கள் அவரவர் இருக்கையில் உட்கார இரண்டொரு நிமிடங்கள் பிடிக்கும். அதன்பிறகே நான் சரித்திரப் பாடத்தைத் தொடங்கிவேன். அன்றைய தினம் அப்படியாகத்தான் பாடத்தைத் தொடங்கியிருந்தேன்.


கடந்த வாரம் சரித்திரப் பாடத்திட்டத்தின் வழியே அகிலஇந்திய சுற்றுலா சென்று திரும்பியிருந்தோம். இந்தியாவின் மிக முக்கியமான இடங்களை நேரில் கண்டு திரும்பியதற்குப்பிறகு நான் எடுக்கும் முதல் சரித்திரப் பாடம் இது என்பதால் மாணவர்களுக்கு என் பாடத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. சரித்திர
ஆசிரியர் இன்றைய வகுப்பில் என்ன நடத்தப்போகிறார்...? சரித்திர வகுப்பில் இடம் பெறக்கூடிய சரித்திர நாயகன் யார்... என்கிற ஆவல் அவர்களிடம் கூடிவிட்டிருந்தது. 
நான் அன்றையத் தினம் வகுப்பை சுற்றுலா சென்று பார்த்து திரும்பியதிலிருந்து தொடங்கியிருந்தேன். ஒரு சுண்ணாம்புக் கட்டியை எடுத்து கரும்பலகையில் தடித்த எழுத்துகளால் எழுதினேன்.

 ‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’

நாள், தினம், வகுப்பு, வருகை, பதிவு...என எதுவும் எழுதப்படாமல் இருந்த வகுப்பறையின் கறுப்பு நெற்றியில் இதை எழுதியதும் மாணவர்களின் மத்தியில் சலசலப்பானது. மாணவர்கள் ஒருவரையொருவர் திரும்பிப்பார்த்துகொண்டனர். சத்ரபதி சிவாஜி என்பதை சற்று பெரிய, தடித்த எழுத்துகளால் எழுதி அதை அலங்கரிக்கத் தக்கதாக மாற்றினேன். சத்ரபதி சிவாஜிக்கும் கீழ் அடிக்கோடிட்டு அதன் மேல் இரட்டை மேற்கோள் குறியிட்டேன்.

‘ இன்றைக்கு நான் நடத்தப்போகிற பாடம் மாவீரன் சத்ரபதி சிவாஜி...’ என்றதும் மாணவர்கள் அதை பின்தொடர்ந்து சொல்லத்தொடங்கினார்கள். ஒவ்வொரு மாணவனாக எழுந்து கரும்பலகையில் தடித்த எழுத்துகளால் எழுதியிருந்த ‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’ என்பதை வாசிக்கச் சொன்னேன். அவர்கள்எழுந்து கையை இறுகக் கட்டிக்கொண்டு அதை வாசித்தார்கள்.

ஒரு மாணவன் கையைத் தூக்கினான். எழுந்து நிற்கவும் செய்தான். ‘ என்ன...?’ என்றவாறு அவனை நான் நிமிர்ந்து பார்த்தேன். 

‘ குரு..நீங்கள் எழுதியதில் பிழை இருக்கிறது...’ என்றான். 

எனக்கு வந்ததே கோபம்! இதுநாள் வரைக்கும் என் வகுப்பில் வந்திராத எதிர்வினை அன்றைய தின வகுப்பில் வந்திருந்தது. நான் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக அது இருந்தது. நான் கேட்டேன் ‘ எழுத்துப் பிழையா, சொற்பிழையா, பொருள் பிழையா...?’

அவன் சொன்னான் ‘ சரித்திரப்பிழை’

என் பாடத்தில் பிழைக் கண்டுப்பிடித்துவிட்ட கொண்டாட்டத்தில் அவன் இருந்தான். அந்த வகுப்பின் கடைசி இருக்கையில் அவன் உட்கார்ந்தவனாக இருந்தான். அவன் அப்படிச் சொன்னதும் மற்ற மாணவர்கள் என்னை ஒருவிதமான பார்வையில் பார்க்கத் தொடங்கினார்கள். நான் அவனிடம் கேட்டேன். ‘ என்ன பிழை...? எங்கே சுட்டிக்காட்டு பார்க்கலாம்....?’. 
அவன் சொன்னான். ‘ வசந்த மாளிகையைக் கட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி என இருக்க வேண்டும்’.

அவன் அப்படிச் சொன்னதும் மற்ற மாணவர்கள் ‘கொல்’லெனச் சிரித்தார்கள். என் வகுப்பில் நான் யாரையும் சிரிக்க அனுமதிப்பதில்லை. சரித்திரப்பாடத்தில் போருக்கும், படையெடுப்பிற்கும்தான் இடம். சிரிப்புக்கு ஏது இடம்...? நான் என் ஆட்காட்டி விரலை உதட்டிற்குக் கொண்டுச்சென்று ‘உஷ்!’ என்றவாறு அவர்களின் சிரிப்பை மிரட்டலில் குவித்தேன். அப்படியும் அவர்கள் சிரிக்கவே செய்தார்கள். என் கையிலிருந்த பிரம்புக்கம்பின் வழியே அவர்களை அமைதிக்கு கொண்டு வந்திருந்தேன். 
 
‘நான் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். ஆக்ரா யமுனை ஆற்றாங்கரையில் இருக்கும் தாஜ்மகாலைத்தான் சொல்கிறேன். அதைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி. அதைத்தான் கரும்பலகையில் எழுதியிருக்கிறேன் ’ என்றேன். மாணவர்கள் என்னையும் கேள்விக்கேட்ட மாணவனையும் மாறிமாறி பார்த்தார்கள். 
நான் கையில் வைத்திருந்த பிரம்புக் கம்பை கரும்பலகைக்கு கொண்டுச்சென்று எழுத்துகளைச் சொல்லி வாசித்துக்
காட்டினேன். ‘தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி’

வகுப்பறையிலிருந்த அத்தனை மாணவர்களும் அதைப் பின்தொடர்ந்து சொல்பவர்களாக இருந்தார்கள். கேள்விக் கேட்ட அந்த ஒரு மாணவன் மட்டும் என்னை பின்தொடர்ந்து சொல்லாமல் வெறுமென நின்றுகொண்டிருந்தான்.

‘ குரு...எனக்கொரு சந்தேகம்..’ என்றவாறு அவன் திரும்பவும் கைத்தூக்கினான். 

‘ என்ன சந்தேகம்...?’ என்றேன்.

‘ நேற்றைக்கு வரைக்கும் தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான்.. இன்றைக்கு எப்படி அது சத்ரபதி சிவாஜி ஆனது...?’

மாணவர்கள் அவனது கேள்வியில் அர்த்தம் பொதிந்திருப்பதைப் போல பார்த்தார்கள். என் கட்டமைத்திருந்த வகுப்பின் மொத்த அமைதியும் அந்த ஒரு கணத்தில் நொறுங்கிவிட்டிருந்தது. மாணவர்களின் மொத்தப் பார்வையும் என்னிடமிருந்து விலகி அவன் பக்கமாகத் திரும்பியது. நான் அவனை என் அருகினில் அழைத்தேன். ஒரு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய குறைந்தப்பட்ச பயமுமில்லாமல் அவன் என் அருகே வந்து நின்றான். கையைக் கட்டச் சொன்னேன். இறுகக் கட்டினான். அவனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியிருந்தது. அக்கேள்வியின் வழியே தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான் என அவன் வாயால் அவனே சொல்ல வைக்க வேண்டியிருந்தது. அவனுக்கான கேள்விகளுடன் என் சரித்திர பாடத்தைத் தொடர்ந்தேன்.

‘ தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் இல்லையா....?’

‘ ஆமாம்..குரு....’

‘ தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளியில் ஒரு சிலை இருக்கிறது இல்லையா...?’

‘ ஆமாம்...குரு. இருக்கிறது.’
‘ யாருடைய சிலை அது...?’

‘ இராசராச சோழன் சிலை '

‘ அவருடைய சிலையை ஏன் அங்கு நிறுத்தியிருக்கிறார்கள்...?’

‘ தஞ்சாவூர் பெரிய கோவில் அவரால் கட்டப்பட்டது '

‘ யாரால் கட்டப்பட்டது...?’

‘ இராசராச சோழனால்...’
‘ சரியாகச் சொன்னாய்...! அடுத்து, முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றிருந்தோம். இல்லையா...?’

‘ ஆமாம்..குரு...’

‘ அணைக்கு வெளியே ஒரு சிலை இருந்ததா...?’

‘ ஆம் இருந்தது குரு’

‘ யாருடைய சிலை அது...?’

‘ பென்னி குயிக் சிலை...’

‘ முல்லை பெரியாறு அணையைக் கட்டியது யார்...?’

‘ அவர்தான் குரு..’

‘ அந்த அணையைக் கட்டியது அவர் என்பதால் அவருடையச் சிலை அங்கே நிறுவப்பட்டிருக்கிறது...’
‘ ஆமாம் குரு...’

‘ அடுத்து நாம் புதுக்கோட்டை கோர்ட் வளாகத்திற்கு சென்றோம் இல்லையா...?’

‘ சென்றோம் குரு...’

‘ வெளியே யாருடைய சிலை இருந்தது..?’

‘விஜய ரெகுநாத தொண்டைமான் சிலை  ’

‘ அக்கோட்டையைக் கட்டியது யார்...?’

‘ அவர்தான் குரு...’

‘ அடுத்து கல்லணைக்குச்  சென்றோம்...’

‘ சென்றோம் குரு...’

‘ வெளியில் கரிகாலன் சோழன் சிலை இருந்தது’

‘ இருந்தது குரு...’

‘ கல்லணையைக் கட்டியவர் கரிகாலன் சோழன்...’

‘ நிச்சயமாக குரு..’

‘ அடுத்து நாம் எங்கே சென்றோம்...?’

‘ டெல்லிக்கு சென்றோம் ...’

‘இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு யாருடைய ஆட்சிக்காலத்தில் மாற்றப்பட்டது?’
‘ வெல்லிங்டன் காலத்தில் குரு’
‘ அதற்கான அடிக்கல் நாட்டும் விழா டெல்லியில் எங்கே நடந்தேறியது..?’

‘ கொரோனஷன் பார்க்கில் குரு...’
‘அந்த பார்க்கில் யாருடைய சிலை இருக்கிறது...?’

‘ வெல்லிங்டன் சிலை குரு’

‘ அடுத்து நாம் எங்கே சென்றோம்....?’
‘ தாஜ்மகால்...’

‘ தாஜ்மகாலுக்கு வெளியே யாருடைய சிலை இருக்கிறது...?’

‘ சத்ரபதி சிவாஜி’
‘ அப்படியானால் தாஜ்மகாலைக் கட்டியது யார்...?’

என் கேள்விகளால் அவன் மட்டுமல்ல. பலரும் மிரண்டு போயிருந்தார்கள். அத்தனை நேரம் அவன் பக்கமாக இருந்த மாணவர்கள் என் பக்கத்திற்கு வந்திருந்தார்கள். என்  கடைசிக்கு கேள்விக்கு என் வகுப்பில் குற்றம் கண்டுப்பிடித்தவனால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் கையறு நிலையில் ஆயுதத்தை இழந்து சத்ரபதி சிவாஜி முன் ஔரங்கசிப் நின்றதைப்போல நின்றுகொண்டிருந்தான். அவனது நிலையைப் பார்த்து மாணவர்கள் கைக்கொட்டி சிரிப்பதாக இருந்தார்கள். நானும் அவனைப் பார்த்து சிரிக்கவே செய்தேன். அவன் எந்தவொரு சலனமுமில்லாமல் நின்றுகொண்டிருந்தான். நான் அதேக் கேள்வியை பிற மாணவர்களைப் பார்த்து கேட்டேன். ‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்...?’ அவர்கள் ஒரு சேரச் சொன்னார்கள். ‘சத்ரபதி சிவாஜி’

நான், கேள்விக்கேட்ட மாணவனின் முகவாய்கட்டையை உயர்த்தி விழிகளால் கேட்டேன். ‘ இப்ப என்னச் சொல்கிறாய்...தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதானே...?’ அவன் என்னை ஒரு கணம் துலாவிப்பார்த்தான். ‘ அப்படியானால் ஸ்ரீரங்கம் கோபுரத்திற்கு முன்னால் ஈ.வெ.ரா பெரியார் சிலை இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோயிலைக் கட்டியது அவரா குரு....?’

அவன் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு ஒன்றும் நடக்காததைப்போல நின்றுகொண்டிருந்தான். மாணவர்கள் நம் சரித்திர ஆசிரியரைப் பார்த்து இப்படியொரு கேள்வி கேட்டுவிட்டானே என்பதைப்போல பார்த்தார்கள். ஒன்றிரண்டு பேர் சிரிக்கச் செய்தார்கள். எனக்கு கோபம்தான் வந்தது. சரித்திரத்தில் கையை வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது...! நான் அவனது காதைப் பிடித்து திருகியவாறு  கேட்டேன். ‘ அடேய்....எதைக் கொண்டுபோய் எதனுடன் முடிச்சிப்போடுகிறாய்....நான் சொல்வது டெல்லி, டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியை...’ 

‘ இந்திய பாராளுமன்றத்திற்கு முன் காந்தியும், அம்பேத்கரும் சிலையாக நிற்கிறார்கள். அப்படியானால் பாராளுமன்றத்தைக் கட்டியது காந்தியும் அம்பேத்கரருமா குரு....?’

அவன் ஒரு பயமுமில்லாமல் இக்கேள்விகளைக் கேட்டிருந்தான். எனக்கு வந்திருந்த கோபத்திற்கு அவனது வாயைப் பிடித்து ஊசி நூலால் தைத்திருக்க வேண்டும். அவனது தலையில் ‘நங்’கென்று ஒரு கொட்டு வைத்தேன். ‘ என்ன சொல்ல வருகிறாய் நீ....?’

‘ குரு, எனக்கு நன்றாகத் தெரியும். நான் பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். பல சரித்திரக் கதைகள் கேட்டிருக்கிறேன். யமுனா ஆற்றாங்கரை தரிசு நிலத்தில் தன் காதலி மும்தாஜ் 
நினைவாக ஷாஜகானால் கட்டப்பட்டதுதான் தாஜ்மகால். அதை கட்டியவர்  சத்ரபதி சிவாஜியாக இருக்க வாய்ப்பில்லை. '

அவன் அதைச் சொல்லிவிட்டு என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நான் என்  கருத்திலிருந்து  விலகப்போவதில்லை என்பதைப்போல அவன் நின்றுகொண்டிருந்தான். 

‘  இல்லை...! நான் சரித்திர ஆசிரியர். நான் சரித்திர பாடத்திற்காக தங்கப்பதக்கம் பெற்றவன். நான் சொல்வதில் ஒரு தவறும் இருக்க முடியாது. நான் சொல்வதை ஒப்புக்கொள். தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான்...’

‘ நிரூபியுங்கள்...’ என்பதைப் போல அவன்  கைகளைக் கட்டிக்கொண்டு அதே இடத்தில் உட்கார்ந்தான். 

‘ நிரூபித்தால்...?’ நான் கேட்டிருந்தேன்.

‘ ஏற்றுக்கொள்கிறேன்...’

‘ என்னவென்று..?’

‘ தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான் என்று...’

‘ திரும்பவும் அதேயேதானே சொல்கிறாய்...’

‘ உங்களால் நிரூபிக்க முடியாது...’

‘ நிரூபித்துகாட்டுகிறேன் பார்....’ என்றவாறு நான் வகுப்பை விட்டு வெளியேறினேன். 

நான் வகுப்பறையை விட்டு வெளியேறியதற்கு பிறகு அவர்கள் என்னப் பேசிக்கொள்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். கேள்விக்கேட்டவன் ஓர் அச்சமுமில்லாமல் உட்கார்ந்திருந்தான். மற்ற மாணவர்கள் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். ‘ டேய் இப்பவெல்லாம் அனைவரும் தேர்ச்சி என்பது கிடையாது. தேவையில்லாமல் நீ சரித்திர ஆசிரியரிடம் முரண்டுப்பிடித்துகொண்டிருக்கிறாய். நீ இந்த வருடம் இதே வகுப்பில் தேங்கத்தான் போகிறாய்...உன் நன்மைக்காகச் சொல்றோம். அவரிடம் முரண்டுப்பிடிக்காதே. அவர் சொல்வதை ஏற்றுக்கொள். அவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும். ஒவ்வொரு வருடமும் அவரது பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வைத்துகொண்டிருக்கிறார். நூறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கிறார். அவர் நினைத்தால் யாரையும் தேர்ச்சி பெறவும், இதே வகுப்பில் தேக்கவும் முடியும். உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். அவரிடம் மன்னிப்பு கேள். அவர் வந்ததும் தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜிதான் என்று ஒப்புக்கொள்.....’  

நான் ஐந்து மாணவர்களுடன் வகுப்பிற்குள் நுழைந்தேன். 

வகுப்பு பழையபடி அமைதிக்கு வந்திருந்தது. கதவுகளை இறுக அடைத்து மேல், கீழ் தாழ்ப்பாழ் இட்டுக்கொண்டேன். மாணவர்கள் பெஞ்சின் விளிம்பிற்கு வந்திருந்தார்கள். நான் வெளி வகுப்பிலிருந்து  அழைத்து வந்திருந்த ஐந்து மாணவர்களை என்  வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். 

 'இவர்கள் ஐந்து பேரும் என் முந்நாள் மாணவர்கள். இவர்கள் கடந்த வருடங்களில் நூற்றுக்கு நூறும், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள். இவர்களை வைத்துதான் நான் தாஜ்மகாலைக் கட்டியவர் சத்ரபதி சிவாஜி என் நிரூபிக்க இருக்கிறேன்...’
மாணவர்கள் என் நிரூபணத்தை ஆமோதிப்பதைப்போல பெரிதாக தலையாட்டினார்கள். அவன் மட்டும் என்னிடமிருந்து பார்வையை எடுத்து அவர்களின் மீது குவிக்கத் தொடங்கினான். 

‘ நிரூபிக்கலாமா....?’ அவனைப்பார்த்து கேட்டேன்.

‘ ஆம்...’ என்றான்.

நான் அழைத்து வந்திருந்த மாணவர்களிடம் அதே கேள்வியைக்  கேட்டேன். ‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்.....?’. அவர்கள் சற்றும் யோசிக்காமல் ஒரு சேரப் பதில் சொன்னார்கள். ‘ சத்ரபதி சிவாஜி’
‘ இப்ப என்னச் சொல்கிறாய். ஏற்றுக்கொள்கிறாய் தானே..?

அவன் அப்பொழுதும் சிவாஜியை ஏற்றுக்கொள்ளாதவனைப்போல நின்றுகொண்டிருந்தான். கரும்பலகையை சுத்தமாக அழித்து அதில் ‘தாஜ்மகாலைக் கட்டியவர்’ என எழுதி அதற்கும் அருகில் கோடிட்ட இடத்தை நிரப்பும் கோட்டை இட்டிருந்தேன். அவன் என் அருகினில் வந்தான். அவனிடம் சுண்ணாம்புக் கட்டியைக் கொடுத்தேன். அவன் அதை வாங்கினான். ‘ கோடிட்ட இடத்தில் நிரப்பு’ என்றேன். அவன் மெல்ல கரும்பலகைக்கு அருகில் சென்றான். ஒரு பதிலும் எழுதாமல் நின்றுகொண்டிருந்தான். என் கையில் பிரம்பு இருந்தது. அதனால் அவனுடைய முகவாய்க்கட்டையை உயர்த்தி அதற்கானப் பதிலை சத்ரபதி சிவாஜி என்று எழுது என்றேன். அவன் அதில் ஷாஜகான் என்றே எழுதினான். 
எனக்கு வந்தக் கோபத்தில் அவனை முட்டிக்கால் போடச்சொல்லி நான்கு அடிகள் கொடுத்தேன். என்னை அவன் இத்தனைப் பேருக்கும் முன்னால் அவமானப்படுத்தியதாகவே உணர்ந்தேன். அவனுடைய பெற்றோரை வரச்சொல்லி இவன் எதற்கும் இலாயக்கு அற்றவன் . ஆசிரியரை மதிக்கத் தெரியாதவன். நான் சொல்லிக்கொடுக்கும் எதையும் காதுக்கொடுத்து கேட்க மாட்டேங்கிறான். அவன் போக்கில் தான்தோன்றித் தனமாகச் செயல்படுகிறான். இவன் கலகக்காரன். தேசப்பற்று அற்றவன். தேசத்தின் துரோகி. இவனை இப்பள்ளியில் வைத்திருந்தால் இப்பள்ளி விலங்காது. வீட்டில் வைத்திருந்தால் வீடு விடியாது. இவனை வைத்துகொண்டு எப்படியாம் நாட்டை நல்லரசாகவும், வல்லரசாகவும் மாற்றுவது...இவனது மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு இப்பொழுதே இப்பவே இந்த வினாடியே இந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள்...என்றவாறு அவனது மாற்றுச்சான்றிதழை எடுத்து இவன் ஒழுங்கீனவன் என்று பச்சை மையில் எழுதி அவனது முகத்தில் எறிந்தேன். 

அவனது பெற்றோர்கள் அவனுக்காக கண்ணீர் சொரிந்து மன்னிப்புக் கேட்டார்கள். எங்களுக்காக அவனை இந்த ஒரு முறை மட்டும் மன்னியுங்கள் என்றார்கள். அவனை மன்னித்தேன். ‘இனி நான் சொல்வதைக் கேட்டு ஒழுங்காகப் படிக்க வேண்டும்...’ என்றவாறு அவனைக் கண்டித்து திரும்பவும் வகுப்பில் சேர்த்துகொண்டேன்.
மறுநாள் வகுப்பிற்கு சென்றேன். 
தேர்வு நடத்தினேன். சரித்திர
வகுப்பில் நான் நடத்தியது ஒரே ஒரு செய்திதான். அந்த ஒன்றை மட்டும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது வகைக் கேள்வியாகக் கேட்டிருந்தேன். 

‘ தாஜ்மகாலைக் கட்டியது யார்....?’

1. சிவாஜி
 2. சத்ரபதி சிவாஜி 
3. மராட்டிய வீரன் சிவாஜி 
4. சிவாஜி ராஜே போஸ்லே

வகுப்பின் அத்தனை மாணவர்களும் நான்கில் ஒரு விடையைத் தேர்வு செய்திருந்தார்கள். அவன் ஒருவன் மட்டும் 5 என்கிற எண்ணுருடன் ‘ஷாஜகான்’ என்று எழுதியிருந்தான்.

நன்றி - தளம் ஆகஸ்ட் 2018

4 கருத்துகள்:

  1. இந்தக் காலக்கட்டத்துக்குப் பொருத்தமான கதை. ஆதிக்க மதவாத சக்திகள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, வரலாற்றை இஷ்டம் போல் திரித்து, மாணவர்களை மூளைச்சலவை செய்யும் கரு மிகவும் நன்று. அந்தச் சக்திகளுக்கு அடிபணியாமல், அடக்குமுறைகளைச் சமாளித்துக் கலகக்குரல் ஒன்று கேட்பது, நம்பிக்கையூட்டுவதாய் உள்ளது. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு