செவ்வாய், 17 அக்டோபர், 2017

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் அளவில் இருக்கிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்த நாவல் அது. இலக்கிய ரீதியில் நான் யாருக்காவது பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் என்றால் அது க.நா.சு.வுக்குத்தான். ‘ இலக்கிய விசாரம்’ என்ற நூலில் க.நா.சு ‘எழுத்தில் சோதனை முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தை என் இலக்கியச் செயல்பாடுகளின் அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளேன் என்கிறார் முன்னுரையில் வண்ணநிலவன். ரெயினீஸ் ஐயர் தெரு நாவலை வாசிக்கையில் அதன் உருவமும், நடையும் அப்படியாகத்தான் தோன்றுகிறது.


ரெயினீஸ் ஐயர் தெருவின் ஆரம்பம் திருவனந்தபுரம் ரோட்டிலிருந்து பிரிகிறது. இருபுறமும் வீடுகள் கொண்ட மொத்தமே ஆறு வீடுகள். அவ்வீடுகள் அவர்களின் வாழ்க்கைச்சூழல் , கொண்டாட்டம், அமைதி, இருப்பு, வாழ்க்கைக்கூறுகள் , அன்றாட பொழுது போக்குகள் இவற்றைச் சொல்லிச்செல்வதுதான் இந்நாவல். முதல்வீடு - இரண்டாவது வீடு - மூன்றாவது வீடு - திரும்பவும் முதல் வீடு - நான்காவது வீடு - இன்றொரு நாள் முதல் வீடு - தெரு -இப்படியாக வடிவமைப்பைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. முதல் வீடு டாரதி , இரண்டாவது வீடு இருதயத்து டீச்சர், மூன்றாவது வீடு அற்புத மேரி , நான்காவது வீடு ஆசீர்வாதம் பிள்ளையின் வீடு, இதைக்கடந்து தெரு இவற்றைப்பற்றி பேசும் இந்நாவல் தாயிடமிருந்து பிரிந்து தனித்து மேயும் ஒரு பெட்டை கோழிக்குஞ்சில் தொடங்கி கோழிக்குஞ்சில் முடிகிறது. மழைக்கு பிடித்தமான அத்தெருவில் இன்பம், துன்பம், துக்கம், கொண்டாட்டம் இவற்றைக் கடந்து போகிறது. அம்மாவை குழந்தைப் பருவத்தில் இழந்துநிற்கும் டாரதி பெரியம்மா வீட்டில் வசிக்கிறாள். தாய் இல்லாமல் தனித்து வாடும் அவளது நாட்கடத்தலை தாயிடமிருந்து பிறந்து இரைதேடும் கோழிக்குஞ்சுடன் ஒப்பீடுவதும் ரேயஜனீஸ் ஐயரின் கல்லறை, கல்லறையிலிருந்து வெளிவரும் பாம்பு ஒன்று ரோஸம்மாள் என்கிற அபூர்வமான பெண் செத்துப்போவதுமான கதையாக்கம் ஓர் அலையுமில்லாமல் சலனமற்று போகும் கதையில் குறுக்கலையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வீட்டின் கதையை சொல்லி தெருவிற்கு அழைத்து வரும் இக்கதைப்பின்னல் முதலில் வாசிக்கையில் குழப்பம் வரத்தான் செய்யும். காரணம் தொடர்ச்சியின்மை. கதை மீண்டும் முதல் வீட்டிற்கும், தெருவிற்கும் வருகையில்தான் கதையோட்டம் புதிய உத்தி என்று தெரிய வருகிறது.
வண்ணநிலவன் முன்னுரையில் சொல்லியிருப்பதைப்போல ஓரெ ஒரு சந்தர்ப்பத்தில் தவிர , நாவலில் எந்தக் கதாபாத்திரங்களுக்கிடையிலும் , நேரடியான உரையாடல்கள் இல்லை. ஆனால் இக்கதையை வாசித்ததும் யாரிடமேனும் உரையாடத் தோன்றுவதில் ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் பேசும் நாவலாகிறது

நர்மதா பதிப்பகம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக