சனி, 16 செப்டம்பர், 2017

எல்லா சொல்லும் பொய் குறித்தனவே


நிற வேறுபாடு தலைத்தூக்கியிருந்தக் காலத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற கனவோடு ஒரு கருப்பின மாணவி மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்தாள். ஒரு கருப்பின பெண் தமக்கு நிகராக மருத்துவம் படிப்பதா…என வெகுண்டெழுந்த ஆங்கிலேய மருத்துவர்கள் அவளை அழைத்து அவளுக்கொரு தேர்வு வைத்தார்கள். அத்தேர்வு இப்படியாக இருந்தது. ‘ கை  நடுக்கமில்லாமல் உனக்கு நீயே இந்த ஊசி மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும்’ அவளுக்கு முன்பு ஊசி, சிரஞ்ச், மருந்துக்குப்பி வைக்கப்பட்டிருந்தன. மருந்துக்குப்பியை எடுத்துப்பார்த்தாள் அவள். அக்குப்பியில் இருப்பது விஷமாக இருந்தது. விஷம் எனத் தெரிந்தும் மருத்துவராகும் கனவில் விஷத்தை சிரஞ்ச்சில் எடுத்து கை நடுக்கமுமில்லாமல் அவளது உடம்பில் செலுத்திக்கொண்டு மருத்துவராகிவிட்ட மகிழ்ச்சியில் வேரோடு சாய்ந்தாள்.
நீக்ரோ என்கிற சொல் தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய பொழுது மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு கருப்பினப் பெண்ணிற்கு ஏற்பட்ட கோர நிகழ்வு இது. அவளது மரணத்தை  உலகப் பத்திரிக்கைகள் இவ்வாறு எழுதின. ‘அவளது கனவு மருத்துவராக வேண்டும் என்பதுதான்.  மருத்துவராக வாழ்வதில் அல்ல…’


மருத்துவர் ஆகுதல் - மருத்துவராக வாழ்த்தல் இரண்டுக்கும் இடையில் ஆறுக்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. அதில் ஒரு வித்தியாசம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் அனிதாவிற்கும் இடையிலான வித்தியாசம்.  இரண்டாவது டாக்டர் கிருஷ்ணசாமி மகளுக்கும் அனிதாவிற்கும் இடைப்பட்ட வித்தியாசம். அடுத்து டாக்டர் தமிழிசை சௌந்தராஜனுக்கும் அனிதாவிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது.
சட்டப் பேரவையில் அவசரச் சட்டம் இயற்றி வந்தால் தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கித் தரப்படும் என்கிற ஆசை வார்த்தையை வார்த்தார் நம் ஊர்க்காரரான மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன். பொய் சொன்ன வாய்க்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. நம் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லி அனுப்பிவைத்ததும் மருத்துவராகிவிட்ட கனவில் மூழ்கத் தொடங்கினார் அனிதா.
சட்ட பேரவையின் தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இனி ஒரு நொடியேனும் காத்திருப்பதில் பயனில்லை என்ற உணர்ந்த அனிதா சுப்ரீம் கோர்ட் கதவுகளைத் தட்டத் தொடங்கினாள். இதற்கிடையில் தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிரானப் போராட்டம் ஆங்காங்கே வெடித்துகொண்டிருந்தது. பிரச்சனை கோர்ட் வரைக்கும் சென்றதால் மராட்டிய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கர் எழுதிய ஒரு நாடகமான ‘அமைதி! கோர்ட் நடந்துகொண்டிருக்கிறது’ ரீதியில் நம் மக்கள் கோர்ட் சமிக்ஞையை எதிர்ப்பார்த்து ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.
உச்ச நீதிமன்றத்தை அனிதா பெரிதாக நம்பினாள். அப்படியாக அவள் நம்பக்காரணம் நீதி மன்றத்தின் நீதி தேவதையும் அது கையில் பிடித்திருக்கும் தராசும்தான். நீதி தேவதை நீதி தேவர்களால் வடிக்கப்பட்டது. நீதி தேவதை பார்வையில் குருடாக இருந்தாலும் அதன் காதுகள் கூர்மையானவை. எதையும் கூர்ந்துக் கேட்கும் தேவதை தன் ஏக்கக்குரலை காதுக்கொடுத்து கேட்கத்தான் போகிறது. அதன் வழியே தன் கோரிக்கை வெல்லத்தான் போகிறது என பகல் கனவு கண்டுக்கொண்டிருந்தாள். நீதி தேவதை என்ன செய்வாள் பாவம்! அவளும் பெண் தானே! நீட் தேர்விற்கு எதிராக வறிந்துக்கட்டிக்கொண்டு வாதாடியவர்கள் வாய்ச்சொல்லில் வீரராகிப்போனார்கள். அனிதா என்ன செய்வாள்! தாய் இல்லாத பிள்ளை. நான் கூடாதக் கனவொன்றைக் கண்டிருக்கிறேனென தற்கொலை செய்துகொண்டாள்.


அனிதா தரப்பிலிருக்கும் ஒரு குறை அவள் மருத்துவராகக்  கனவு கண்டதுதான். ஆனால் அதே நேரம் அவளைக் கொன்றதிலும் கொல்லப்பட்டவளைத் திரும்பத் திரும்ப கொலை செய்ததிலும் மருத்துவர்களின் பங்கு பெரும்பங்காற்றியிருக்கிறது. அனிதா செய்துகொண்டது தற்கொலை. இப்படியான ஒரு முடிவை அவள் எடுத்திருக்க வேண்டியதில்லை. இத்தற்கொலையை அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்பதற்காகப் பார்க்கிறார்கள்.  அவள் எடுத்திருந்த மொத்த மதிப்பெண், மருத்துவ படிப்பிற்குரிய கட் ஆப் மதிப்பெண் இரண்டும் அவளுக்கான மருத்துவ படிப்பை உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் அவளது தற்கொலை என்பது தனக்கு மருத்துவ வாய்ப்பு கிடைக்கவில்லை  என்பதற்கானது அல்ல. தமிழ்நாட்டில் நீட் தேர்வு என்கிற ஒன்று கூடவே கூடாது என்பதற்கானது.


அனிதாவின் தற்கொலையில் மர்மம் இருக்கிறது. அதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மனு நீட்டியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. யாரால் அனிதாவிற்கு நீதி கிடைத்திருக்க வேண்டுமோ அவரிடம் அவளது மரணத்திற்கான விசாரணை மனு போய்ச்சேர்ந்திருப்பது இவ்வாண்டின் மிகக்கொடுமையான கொடூரம். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. விசாரித்தால் தனக்கு மருத்துவ சீட்டு கிடைக்குமா என்பதே அனிதாவின் கவலை. அனிதாவிற்கு கிடைக்கவிட்டாலும் அனிதா போல கவிதா, புனிதா,….யாரேனும் ஒருவருக்கு கிடைத்தாலும் பரவாயில்லைதான்!
நீட் தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவம் படித்து  டாக்டராகிய கிருஷ்ணசாமி, தான் மட்டும் மருத்துவம் பயின்றது போதாதென்று தன் மகளையும் மருத்துவராக துடித்தார். அவரது மகள்  இன்றைய அனிதாவை விடவும் குறைவான மதிப்பெண் பெற்றிருந்த போதிலும் எப்படியேனும் மருத்துவ இடம் பெற்றுவிட முணைப்பில்  அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மூலமாக மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற செய்தியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி போட்டுடைக்க தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அவருடைய சுயநல அரசியல் நடுசந்திக்கு வந்து நிற்கிறது.


அனிதா தற்கொலை சந்தேகத்திற்கு உட்பட்டது என்றார் அவர். அவரது இக்கருத்தை புறம் தள்ள வேண்டியதில்லை. சந்தேகத்திற்கு உட்பட்ட ஒன்றாகவே இருக்கலாம். தமிழகம் ஒன்றும் அத்தனை புனிதமான ஒன்று இல்லை. நீட் தேர்விற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணமே மர்மமாக இருக்கையில் அனிதா தற்கொலை வெறும் தற்கொலைதான் என நம்ப வேண்டியதில்லைதான்.  அத்தற்கொலைக்கு அவர் கற்பிக்கும் காரண - காரியம்தான் ஆணாதிக்க உலகத்தை  சீழ் வடிய வைக்கிறது. அனிதா இளவயதுக்காரர். அவரை டெல்லி வரைக்கும் அழைத்துசென்றது யார், அவரை எங்கே தங்க வைத்தார்கள்….? அவருடன் யார் துணைக்கு தங்கியிருந்தார்கள்,.. என்பதாக  நீளும் அவருடைய சந்தேகக் கேள்விகள் அனிதாவின் தற்கொலையை திசைத்திருப்பும் வேலையை மட்டும் செய்யவில்லை. ஒரு வேளை நாம் , நம் சகோதரி, மகள், தாயை அழைத்துகொண்டு ஆண் மருத்துவர்களிடம் மருத்துவச்சிகிச்சை எடுத்துக்கொள்ள செல்கையில் மருத்துவர்களின் கற்பு நெறியை ஜெராக்ஸ் எடுத்து பார்த்துக்கொள்ள தூண்டியிருக்கிறது.


அவர் எதையோ சொல்லி அதை முழுமையாகச் சொல்லி முடிக்க முடியாமல் பாதியோடு இடையில் நிறுத்தியிருக்கிறார். அவரது அறிக்கையிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள  முடிந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி மொழிதலின் படி சொல்வதாக இருந்தால் இளவயது ஒரு பெண் நீதிப்பிச்சைக்கேட்டு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் சென்றிருக்கக்கூடாது. ஓர் இளம்பெண்ணை ( அனிதாவை ) ஓர் கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர் உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுத்திருக்க முடியும்  என்றால் அதே வயதுடைய இளம் பெண்ணுக்கு ஓர் ஆண் மருத்துவரால் மனம் நோகும்படியாக உளவியல் சித்தரவதை செய்யவும் முடியும். அப்படித்தானே !
அடுத்து அவருடைய விளக்கம் இவ்வாறு இருந்திருக்கிறது. அனிதா அப்படியாக தற்கொலை செய்திருக்க வேண்டியதில்லை. மருத்துவம் மட்டுமே வாழ்க்கையா என்ன..? சரிதான். அனிதா பாவம். அவள் வெறும் புத்தகப் புழுவாகவே இருந்துவிட்டு போயிருக்கிறாள்.  அனிதா டாக்டர் கிருஷ்ணசாமியை ஒரு கணம் ஆழ்ந்து கவனித்திருக்க வேண்டும்.
தலித் வாக்குகளைப் பெற்று சட்டமன்றத்திற்குள் தனித்துவமாக நுழைந்த டாக்டர் கிருஷ்ணசாமி (இப்போதைக்கு அவர் தலித் அல்ல) தமிழக பல்வேறு  துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு  இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. அதற்கான வெள்ளை அறிக்கை வேண்டுமென உரக்கப்பேசி தாழ்த்தப்பட்ட மக்களிடம் மதிப்பு மரியாதையைக் கூட்டிக்கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி , அடுத்த தேர்தலில் சாதி ஓட்டுகளை நம்பி தோல்வியைச் சந்தித்ததும் தலித் அரசியல் நீரோட்டத்திலிருந்து நீந்தி கரையேயில்லாத கரையில் ஏறி நின்று உரத்தக்குரல்களைக் கொடுத்துகொண்டிருக்கிறார். நாங்கள் தலித் அல்ல. மாட்டுக்கறி  சாப்பிடுவது உடம்பிற்கு கேடு. நீட் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, நீட் தேர்வில் இந்த வருடம் வெற்றிப்பெற முடியவில்லையென்றால் அடுத்த வருடம்...அதிலும் முடியவில்லை என்றால் அடுத்த வருடம்….இப்படியாக கீதாசாரம் ஒப்பிக்கும் அவரது சமீப வளர்ச்சியை நூலைப் பிடித்து பார்ப்போமேயானால் நூலின் ஒரு  முனை  கேரளாவில் புதிதாக  கட்டிக்கொண்டிருக்கும் மருத்துவமனையில் போய் நிற்கவே செய்யும். அதற்குள் பசை கண்ட இடத்தில் ஒட்டிக்கொள்ளும் சாமர்த்தியம் தெரியக்கூடும். தலித் அரசியலை ‘நூல் அரசியலுடன்’ கலந்து அவருக்கான பீடத்தை உயர்த்திக்கொள்ளும் வேலையை கவனித்திருக்கக்கூடும்.

இதைக்கொண்டு அனிதா ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம். மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அதைத்தாண்டி அரசியல் இருக்கிறது. அதுவுமே கைக்கூட வில்லையென்றால் இருக்கவே இருக்கிறது. குலத் தொழில். காரிகை கற்று கவி பாடுவதிலும் பேரிகைக்கொட்டி பிழைப்பது மேல்! இதையே டாக்டர் கிருஷ்ணசாமி மொழிதலில் சொல்வதாக இருந்தால் மருத்துவராகி மருத்துவமனை கட்டுவதைக்காட்டிலும் பேரிகைக் கொட்டி பிழைப்பது மேல் அப்படித்தானே!
மருத்துவரின் வாய்த்துர்நாற்றத்தைப்பற்றி நாடோடிக் கதை ஒன்றுண்டு. ஒரு மருத்துவர் இருக்கிறார். அவரிடம் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள மக்கள் தயங்குகிறார்கள். காரணம் அவர் பேசுகையில் வரும் வாய்த்துரு நாற்றம். மருத்துவ தொழில் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. அவர் மருத்துவத் தொழிலைக் கைவிட்டு பிற தொழில்களுக்கு மாறுகிறார். மற்றத் தொழில்கள் அவருக்கு பேரும் புகழையும் பெற்றுத்தருகிறது.
மற்றத் தொழிலின் வழியே அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். முதல் நாள் இரவில் அவரது வாய்த்துரு நாற்றத்தை பொறுக்க முடியாமல் மனைவி விலக நினைக்கிறாள். மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு மருத்துவர் சொல்கிறார். இது வாய்த்துரு நாற்றம் அல்ல. நான் மருத்துவர் இல்லையா! போஸ்ட்மார்ட்டம் பிரிவில் வேலைப்பார்க்கிறேன் இல்லையா! அத்தொழிலால் வரும் நாற்றம் என்கிறார். அதற்குப் பிறகு ஊர்மக்கள் பேசிக்கொள்வார்கள்.  ‘ மருத்துவர் வாய் இருக்கிறதே..அது நல்ல வாய். ஆனால் அவர் வேலைச் செய்யும் இடம்தான் நாற்றமுடையதாக இருக்கிறது’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக