செவ்வாய், 18 செப்டம்பர், 2018

வேள்வித்தீ - நாவல்

வேள்வித்தீயும் சில வேள்விகளும்

வேள்வித்தீ  - நாவலை முன் வைத்து

இதற்கு முன்பு தொ.மு.சி ரகுநாதனின் பஞ்சும் பசியும் வாசித்திருக்கிறேன். தமிழின் முதல் கம்யூனிச நாவல் என்கிற அடையாளம் அதற்கு உண்டு.  அந்நாவல் பேசும் அதே நெசவாளர்களின் பிரச்சனையைத்தான் வேள்வித்தீ என்கிற நாவலும் பேசுகிறது. பஞ்சும் பசியும் நாவலில் பஞ்சாலை தொழிலாளர்கள், முதலாளிகள் இருவரும் உழைக்கும் வர்க்கத்தினரின்  எதிரும் புதிருமான பாத்திரங்களாக படைத்திருப்பார் ரகுநாதன். தொழிலாளர்களின் உழைப்பையும் , அவர்களின் சார் உரிமைகளையும் , அதை நோக்கி முன்னெடுக்கும்  போராட்டக்களத்தையும் அந்நாவல் பேசும். மேலும் அந்நாவலில் சாதி, இனக் கூறுகளை எப்படித் துருவிப் பார்த்தாலும் கண்டடைய முடியாது. ஆனால் வேள்வித்தீ அப்படியன்று.


வேள்வித்தீ சௌராஷ்டிரா மக்கள் , அவர்களின் வாழ்வியல் பின்னணி, உறவு முறைச் சிக்கல், அவர்களின் வாழ்வாதார நெசவுத்தொழில், அத்தொழில் மீது எழுப்பப்படும் கடன் , தொழிலாளி முதலாளியாகத் துடிக்கும் தொழிற்சார் முன்னேற்றம், காதல் , விதவை, காதல் காமம் சார்ந்த நெருக்கம் , பிணக்கம் , அரசுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக சம்பள உயர்வு பிரச்சனை என பலதையும் இந்நாவலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்  எம்.வி.வெங்கட்ராம்.

இந்நாவலின் கதைக்காலம் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும் திமுக எழுச்சிக்கும் இடைப்பட்ட காலம். ' இப்படி எல்லாம் பொறுப்பில்லாமப் பேசித்தான் , காளை மாட்டுக்குத் தினவு கொடுத்து சண்டித் தனம் செய்யுது. சாட்டையைச் சொடுக்கி, ரெண்டு வச்சாத்தான் காளை மாட்டுக்கு ரோசம் பிறக்கும்!'
' மழையிலே உதயசூரியன் கரைஞ்சுபோயிட்டுது!காளை மாட்டைப்பத்தி இவர் புகார்  செய்ய வந்துட்டாரு. எதுக்கு வீண் பேச்சு ' சுப்பையா , சாரநாதன் என்கிற இரு கிளை பாத்திரங்கள் பேசிக்கொள்வதைக்கொண்டு காலத்தை தீர்மானிக்க முடிகிறது.

சௌராஷ்டிரர்கள் தொன்று தொட்டு தமிழ்நாட்டில் வாழ்கிறவர்கள் அல்ல. அவர்களது ஆதித் தாயகம் சௌராஷ்டிரா. கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து, ஆலயங்களை இடித்தும், விக்கிரகங்களை உடைத்தும் ஹிந்து மதத்தையே ஒழிக்க முனைந்தான் அல்லவா? அச்சமயத்தில், சௌராஷ்டிரத்தில் இருந்த பல குடும்பங்கள் தங்கள் மதத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பிறந்த மண்ணைத் துறந்து பிழைப்பைத் தேடித் தெற்கே குடிபெயர்ந்தார்கள். அவர்கள் சாதியில் பிராமணர்கள். ஆயினும் நெசவுத் தொழிலில் வல்லவர்கள்...என்பதாக நாவல் அவர்களின் இடம்பெயர்வைக் குறிப்பிடுகிறது.
இந்நாவலின் நாயகன் கண்ணன் நெசவு தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர உழைக்கிறவன். பணமே வாழ்க்கையெனக் கொண்ட உறவுகள், பணத்திற்காக அல்லாடும் மனைவி கௌசலை, பணம் உதவி செய்ய முன்வரும் ஹேமாவுடன் நெருங்கி  மனைவியிடமிருந்து விலகும் கண்ணன்,...என நெசவுத்தொழில் சிக்கலுடன் உறவுச் சிக்கலையும் இந்நாவல் பேசியிருக்கிறது.

மனைவி கௌசலை செய்து கொண்டது சரியா, அவளது இறப்பிற்குப்பிறகு கண்ணன் ஹேமாவுடன் இணைந்தது சரியா என்பதெல்லாம் சமூகத்தின் நீட்சிக்கொண்டுதான் பார்க்க வேண்டுமே தவிர வாசிப்பின் நீட்சியால்  அதை அளந்துவிட முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக