முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போடோ மொழி சிறுகதை


போடோ-கக்சாரிசு என்று அழைக்கப்படும் போடோ மொழி அசாமில் பிரம்புத்திரா பள்ளத்தாக்கு பகுதிகளில் பேசக்கூடிய பழங்குடியின மொழி. அரிதான மக்களால் பேசப்பட்டு வந்த இம்மொழி பேசும் மக்களால் மொழியின் அவசியத்தை உணர்ந்து எழுத்து மொழியாகவும் , தொடக்கக்கல்வி மொழியாகவும் கடைப்பிடித்து பத்து ஆண்டுகளாக உயர்க்கல்வி மொழியாகவும் விளங்கிறது.
இம்மொழியின் முதல்  இலக்கிய  இதழ் 1955 ஆம் ஆண்டு சதீசு சந்திர பசுமதாரி என்பவரால் கொண்டுவந்த போடோ என்கிற இதழ்தான். இம்மொழியின் முதல் சிறுகதை 1930 ஆம் ஆண்டு இசான் முசாகாரி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. அக்கதை ' அபரி   '. இக்கதை அதே ஆண்டு காதார்கிலா என்கிற இதழில் பிரசுரமாகியிருக்கிறது. 
     
அபரி பதினெட்டு வயதுடைய பெண்.அவளுக்கு வரன் தேடுகிறான் சகோதரன் உலி. அபரிக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை.  மாப்பிள்ளை முதுகில் கூன் விழுந்து போய் பார்க்க கிழவன் மாதிரி தெரிகிறான். மாப்பிள்ளை பிடிக்கவில்லை  என்கிற தகவலை அவள் சகோதரனிடம் சொல்கிறாள். உலி , ' நீ ஊனம் என்பதால் உனக்கு இப்படியாகப்பட்ட மாப்பிள்ளைதான் கிடைப்பான் ' என்கிறான். அவனை மணக்க முடியாது ' என்கிறாள் அபரி. மாப்பிள்ளையிடம் கை நீட்டி வளையல் வாங்கியாகி விட்டது  ( வளையல் வாங்கினால் சம்மதம் ) என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறான் உலி. கடைசியில் அவனது இன்னொரு சகோதரியை மணம் முடித்துகொடுக்கிறான்.
       அபரியின் பரிதாபமான நிலையைப்பார்த்து அவ்வூர் இளைஞன் ஒருவனுக்கு அவள் மீது காதல் வருகிறது. திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத அபரி மீது சகோதரன் உலியும் சொந்தங்களும் எரிந்து விழுகிறார்கள். ஒரு நாள்  உலி விஷம் வாங்கிகொடுத்து இன்றைக்குள் செத்துவிட வேண்டும் என்கிறான். சரி என விஷத்தை வாங்கி வைத்துக்கொள்ளும் அவள் இரவு வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன்  ஊரை விட்டு ஒதுங்குகிறாள்.
          போடோ மொழியின் முதற்கதையே பெண்ணடிமை , அதை உடைக்கும் பெண்ணெழுச்சியாக படைக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமானதாக இருக்கிறது.
          சாகித்ய அகாதெமி வெளியீடாக போடோ சிறுகதைகள் எனும் பெயரில் வெளியாகியிருக்கும் இந்நூல் ஆங்கிலத்தில் ஜெய்காந்த சர்மா என்பவர் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். தமிழில் இரா.குருநாதன் மொழிபெயர்த்திருக்கிறார்.
இத்தொகுப்பில் மொத்தம் 11 கதைகள் உள்ளன. அத்தனையும் பெண்களின் மீதான ஒடுக்கு முறையையும் அதற்கு எதிரான குரலையும் உரக்கச்சொல்கிறது.
       இத்தொகுப்பில் வேறொரு முக்கியமான சிறுகதை வேறு வழி  என்கிற சிறுகதை. பகுண்டா விறகு வியாபாரி. விறகு விற்றுவந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும். விறகு  விற்காமல் வீடு திரும்புகிறான்  பகுண்டா. முடியாமல் படுத்துவிடுகிறான். மூன்று குழந்தைகளுக்கும் பசி. மறுநாள் மனைவி மூத்த மகள் தார்லியை வீட்டில்  விட்டுவிட்டு  இரண்டு பிள்ளைகளுடன்  அவள் பிச்சை எடுத்து வர செல்கிறாள். தார்லி வீட்டில் இருக்கிறாள். ஒரு சாராய வியாபாரி  அத்தெருவின் வழியே வருகிறான். அவனிடம் நேற்றைய தினம் நான்  உன் முகத்தில் விட்டெறிந்த நூறு ரூபாயை தரச்சொல்லி அவனை வீட்டிற்குள் இழுத்துச் செல்கிறாள். அப்பன் படுக்கையில் குமறுகிறான். இக்கதையை எழுதியவர் அரேச்வர் பசுமதாரி.

கருத்துகள்

  1. இந்நூலை நான் படித்துள்ளேன். அருமையான மொழிபெயர்ப்பு. http://drbjambulingam.blogspot.com/2016/09/blog-post.html என்ற பக்கத்தில் எனது தளத்தில் முனைவர் இராம.குருநாதன் அவர்களின் பிற நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...